முன்னாள் அமைச்சர் எஸ்பிதிசநாயக்கவின் வீட்டில் முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பதற்கான விருப்பத்தை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவே வெளியிட்டார் என பொது எதிரணியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெயர் குறிப்பிடவிரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொழும்பு டெலிகிராபிற்கு இதனை தெரிவித்துள்ளார்.
பல முக்கியமான விடயங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக மகிந்த ராஜபக்சவை சந்திக்க விரும்புவதாக சிறிசேனவே எஸ்பி திசநாயக்க மூலம் செய்தியனுப்பினார் என பொது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி முதலில் சிறிசேனவை சந்திக்க விரும்பவில்லை எனினும் சிறிசேன தொடர்ந்தும் வேண்டுகோள் விடுத்ததினால் மகிந்த ராஜபக்ச சந்திப்பிற்கு இணங்கினார் எனவும் பொது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ளது போன்று இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனரா என்பது எனக்கு தெரியாது ஆனால் பொது எதிரணியுடன் தான் எவ்வாறு எதிர்காலத்தில் இணைந்து செயற்படவேண்டும் என்பதை அறிவதற்கு சிறிசேன விரும்பினார் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கவலையடைந்தவராக சிறிசேன காணப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஐக்கியதேசிய கட்சி அரசாங்கத்தில் நீடிக்கின்ற வரையில் அதனுடன் எந்த இணக்கப்பாட்டிற்கும் வரமுடியாது என்பதே எங்களின் நிலைப்பாடு எனவும் பொது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறிய பின்னரே நாங்கள் இது குறித்து முடிவெடுக்க முடியும் நாங்கள் இந்த விவகாரம் குறித்து எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை எனவும் பொது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.