மட்டக்களப்பில் உயிரிழந்த பெண்ணின் சடலத்துடன் விசித்திர ஆர்ப்பட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு எதிரில், இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட பெண், வைத்தியர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை வைத்தே, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு, கூழாவடி நான்காம் குறுக்கு வீதியில் விசிக்கும் 45 வயதுடைய திருமதி லதாசிறி சிவகுமார் என்னும் பெண் பிரசவத்திற்காக குறித்த தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரை பிரபல மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் பரிசோதனை செய்து, சத்திரசிகிச்சை செய்யவேண்டும் எனக்கூற, இவர் சத்திர சிகிச்சை மூலம் குழந்தை ஒன்றையும் பிரசவித்துள்ளார்.
எனினும், குழந்தை பிரசவித்த சில மணி நேரங்களில் தாயின் உடம்பில் மாற்றங்கள் ஏற்பட அவரின் நிலைமை மோசமாகியுள்ளது.
இதனால் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லுமாறு வைத்தியர்கள் பணித்துள்ளனர். அத்துடன், பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தனியார் வைத்தியசாலை வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின்போது, அவரது மரணம் மாரடைப்பினால் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
குழந்தை பிரசவத்திற்காக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின்போது ஏற்பட்ட தவறு காரணமாக இரத்தகுழாய் ஒன்றில் ஏற்பட்ட இரத்தக்கசிவினாலேயே, அந்த பெண் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த பெண்ணின் சடலத்தை ஊர்வலமாக கொண்டுச் சென்ற உறவினர்களும், பிரதேச மக்களும், தனியார் வைத்தியசாலைக்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து அவரது சடலம், கள்ளியங்காடு பொதுமயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.