மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்;ட மண்டூர் பிரதேசத்தில், இன்று திங்கட்கிழமை அதிகாலை, வீட்டு சுற்று மதில் இடிந்து வீழ்ந்ததில் குறித்தப் பகுதியைச் சேர்ந்த 18 வயதான பேரின்பராஜா பேணுஜன் என்பவர் சம்பவ இடத்தில் பலியானதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இரவு உணவை முடித்துக்கொண்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் இன்று அதிகாலை வீட்டார் அவரின் வீட்டுக்கு பின்னால் உள்ள சுற்று மதில் பக்கம் சென்றபோது சுற்று மதில் உடைந்த நிலையில் கற்களுக்குள் சிக்குண்டு இறந்த நிலையில் காணப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவானின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, தடயவியல் பொலிஸார் மற்றும் வெல்லாவெளி பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.