தினம்தோறும் என் மனைவியை குளிக்கச் சொன்னால் வீட்டில் இருவருக்கும் சண்டை வருகிறது. எனக்கு என் மனைவியுடன் வாழ விருப்பம் கிடையாது,
மனைவி தினமும் குளிப்பதில்லை என காரணம் கூறி கணவர் முத்தலாக் கொடுத்து விவாகரத்து செய்துள்ள விநோத சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தின் சண்டூஸ் எனும் கிராமத்தைச் சேர்ந்தவருக்கும், குவார்ஸி எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த இஸ்லாமிய தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்றும் இருக்கிறது. இந்நிலையில் தனது மனைவி தினமும் குளிப்பதில்லை, குளிக்கச்சொன்னாலே சண்டை வருகிறது என்ற காரணத்தை கூறி அந்த நபர் தனது மனைவியை முத்தலாக் கூறி பிரிந்திருக்கிறார்.
அந்த நபரின் மனைவி இச்சம்பவம் குறித்து மகளிர் பாதுகாப்பு பிரிவுக்கு எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை தந்துள்ளார்.
அதன்படி நான் தினமும் குளிக்கவில்லை என எனது கணவர் விவாகரத்து கேட்கிறார். ஆனால் நான் இந்த திருமணத்தை முறிக்க விரும்பவில்லை, என் கணவருடன் சேர்ந்து வாழ வையுங்கள் என அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கணவன் – மனைவி மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மகளிர் பாதுகாப்பு பிரிவினர் கவுன்சிலிங் அளித்து வருகின்றனர்.
இத்தம்பதியருக்கு கவுன்சிலிங் அளித்து வரும் மனநல ஆலோசகர் இது குறித்து கூறுகையில், அந்தப் நபர் எங்களிடம் பேசுகையில், தினம்தோறும் என் மனைவியை குளிக்கச் சொன்னால் வீட்டில் இருவருக்கும் சண்டை வருகிறது.
எனக்கு என் மனைவியுடன் வாழ விருப்பம் கிடையாது, எங்களை பிரித்து விடுங்கள் என விடாப்பிடியாக பேசுகிறார்.
அதே நேரத்தில் என் கணவருடன் நான் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன். என்னால் பிரிந்து செல்ல முடியாது என அவரின் மனைவி உறுதியுடன் கூறுகிறார்.
இதெல்லாம் மிகவும் சின்ன பிரச்னை, இது போன்ற காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டால் அல்லது பிரச்னைகளை பெரிதுபடுத்தினால் உங்களின் குழந்தையின் எதிர்காலம் தான் பாதிக்கப்படும் என இருவரையும் அழைத்து சமாதானப்படுத்தியுள்ளோம். தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனைகள், அறிவுரைகள் கூறி வருகிறோம்.
மேற்கொண்டு, குளிக்கவில்லை என்பதெல்லாம் விவாகரத்து பெற தகுந்த காரணமாக இருக்க கூடாது என அவர்கள் இருவருக்கும் கால அவகாசம் அளித்துள்ளோம்.
இது கிரிமினல் நடவடிக்கையின் கீழும் வராது என கவுன்சிலிங் அளித்த மனநல ஆலோசகர் கூறினார்.
வெளிநாடுகளில் தான் குறட்டை விடுகிறார், சரியாக உடை உடுத்துவதில்லை என இதுபோன்ற சின்னஞ்சிறிய காரணங்களுக்காக விவாகரத்து பெறுகிறார்கள் என்றால் நம்மூரிலுமா?