ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேனின் இறுதி நிமிடங்கள் பற்றி சிலிர்க்க வைக்கும் கடிதம் ஒன்றை அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
பேராபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்கள் ஈராக்கில் இருப்பதாக கூறி சதாம் உசேனை அமெரிக்கா அநியாயமாக கொலை செய்த கொடுமையை இந்த உலகம் அறியும்.
சதாம் தூக்கிலிடப்படும் போது அவர் அருகில் இருந்த அமெரிக்க ராணுவ வீரர் அவரது வாழ்க்கையின் இறுதி நிமிடங்களைப் பற்றிய தகவலை தற்போது வெளியிட்டுள்ளார்.
ஒரு முஸ்லிம் வாழ்வு எப்படி இருந்தாலும் அவனது வாழ்வின் இறுதி கட்டம் சிறப்பானதாகவும் இறைவனுக்கு விருப்பம் உள்ளதாகவும் இருப்பது முக்கியம்.
அதன் அடிப்படையில் சதாம் உசேனின் இறுதி நிமிடங்கள் ஒரு உண்மையான முஸ்லிம் ஒருவரை பிரதிபலிப்பதாக இருந்துள்ளது.
சதாம் உசேனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய தினம் அவரை சுற்றி இருந்த காவலர்களில் ஒருவரை அழைத்துள்ளார்.
அவரிடம் தான் கைது செய்யப்படும் போது அணிந்திருந்த குறித்த கனத்த அங்கியை தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு காரணம் என்ன ? என்று காவலர் கேட்கவே, அதிகாலையில் எனது உயிரை பறிக்க நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள்.
நான் மரணத்தை கண்டு பயப்படவும் இல்லை, நடுங்கவும் இல்லை. ஆனால் ஈராக்கில் அதிகாலை நேரம் நடுங்க வைக்கும் குளிரை கொண்டதாக இருக்கும்.
அந்த நேரம் என்னை தூக்கு மேடைக்கு நீங்கள் அழைத்து செல்லும் போது குளிரினால் எனது உடல் நடுங்கலாம் அதை பார்ப்பவர்கள் சதாம் மரணத்துக்கு அஞ்சக்கூடியவன் என்று எண்ணக் கூடாது.
நான் தூக்கு மேடையை நோக்கி நடந்து செல்லும்போது குளிரினால் கூட எனது உடல் நடுங்கக்கூடாது என்று நான் கருதுவதால் என்னை குளிரில் இருந்து காக்கும் அந்த கனத்த ஆடையை அணிய விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
சதாம் உசேன் தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள் நள்ளிரவில் தனக்கு பிடித்தமான கோழி இறைச்சி மற்றும் சாதத்தை மகிழ்ச்சியோடு கேட்டுப் பெற்று சாப்பிட்ட பின்னர் அவரது குழந்தை பருவத்தில் இருந்தே வென்னீரில் தேன் கலந்து குடிக்கும் பழக்கத்துக்கு ஏற்ப அன்று பல கோப்பைகளில் தேன் கலந்து அருந்தியுள்ளார்.
பிறகு தொழுகை செய்துவிட்டு தனது கட்டிலில் அமர்ந்து திருகுர்ஆனை ஓதியுள்ளார். அவரை தூக்கு மேடையில் ஏற்றப்படுவதற்கு முன்னர் மாவீரனைப் போல் எந்த சலனமும் இல்லாமல் மலர்ந்த முகத்துடன் தூக்கு மேடையை நோக்கி சென்றுள்ளார்.