முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மலேஷியாவுக்குச் சென்றிருந்த போது, அவருக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களும், மலேஷியாவுக்கான இலங்கைத் தூதுவர் இப்ராகிம் அன்சார் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தாக்கப்பட்ட சம்பவமும், பல்வேறு தரப்பிலும் சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டைப் புறக்கணித்துக் கொண்டு, மலேஷியாவுக்கு மஹிந்த ராஜபக் ஷ மேற்கொண்டிருந்த பயணத்தில் தொடங்கிய சர்ச்சைக்குரிய சம்பவங்கள், மலேஷியாவுக்கான இலங்கைத் தூதுவர் தாக்கப்பட்டது வரை நீண்டிருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது தேசிய மாநாட்டில் பங்கேற்பதை தவிர்ப்பதற்காகவே மஹிந்த ராஜபக் ஷமலேஷியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
கோலாலம்பூரில் ஆசிய அரசியல் கட்சிகளின் ஒன்பதாவது மாநாட்டில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் அதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு தான் விலகி நிற்கிறேன் என்று, தனது ஆதரவாளர்களுக்குக் காட்டிக் கொள்வதில் மஹிந்த ராஜபக் ஷ இதுவரையில் வெற்றியைப் பெற்றிருக்கிறார். மலேஷியப் பயணத்தையும் அதற்காகவே அவர் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
மலேஷியாவுக்கு அவர் சென்றிருந்த போது, கோலாலம்பூரில் அவருக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இலங்கையில் போர்க்குற்றங்களை இழைத்த மஹிந்த ராஜபக் ஷவை வெளியேற்ற வேண்டுமென்று கோரி, அங்குள்ள தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மூன்று நாட்கள் இந்தப் போராட்டங்கள் நீடித்திருந்தன. மஹிந்த ராஜபக் ஷ செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் அவருக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதுடன், அவரது உருவபொம்மைகளும் எரிக்கப்பட்டன.
இந்த நிலையில், ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த அமைச்சர்கள் தயா கமகே மற்றும் அனோமா கமகே ஆகியோரை வழியனுப்புவதற்காக கோலாலம்பூர் விமான நிலையத்துக்குச் சென்றிருந்த இலங்கைத் தூதுவரை சிலர் தாக்கியிருந்தனர்.
மஹிந்த அணியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தன மற்றும் சமன்மலி சகலசூரிய ஆகியோரும் அமைச்சர் தயா கமகே தம்பதிகளுடன் ஒரே விமானத்தில் தான் பயணித்தனர் என்பதால், அவர்களை பாதுகாப்பாக உள்ளே அனுப்பிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போதே, இலங்கைத் தூதுவர் இப்ராகிம் அன்சார் மீது விமான நிலையத்தின் மூன்றாவது மாடியில் இந்த தாக்குதல் இடம்பெற்றது.
இலங்கைத் தூதரக இரண்டாவது செயலாளரும், தூதுவரும் சரமாரியாக முகத்தில் குத்தப்பட்டனர். காலால் எட்டி மிதிக்கப்பட்டனர்.
மஹிந்த ராஜபக் ஷ எங்கே என்று கேட்டே இலங்கைத் தூதுவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கான பதில் தூதுவர் இப்ராகிம் அன்சாரிடம் இருந்து கிடைக்காத நிலையில் தான் அவர் தாக்கப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும், இலங்கைத் தூதுவர் மீதான தாக்குதல் மலேஷியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மஹிந்த ராஜபக் ஷவின் வருகைக்கு எதிராக மலேஷியாவில் திடீரென தொடங்கிய போராட்டங்களும், இலங்கைத் தூதுவர்தாக்கப்பட்ட பின்னணியும், பல்வேறு தரப்பிலும் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
இவையெல்லாம் மஹிந்த ராஜபக் ஷவின் அரசியல் நிகழ்ச்சித் திட்ட ஒழுங்கிற்கு உட்பட்டவையா என்பதே அந்தச் சந்தேகமாகும்.
மலேஷியாவில் தனக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட போது, இது விடுதலைப் புலிகளின் வேலை என்றும், புலிகளை அழித்ததால் தான் அவர்கள் தன் மீது கோபத்தை வெளிப்படுத்துவதாகவும் மஹிந்த ராஜபக் ஷ மலேஷியாவில் இருந்து கூறியிருந்தார்.
அதுமாத்திரமன்றி, தனக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்பது மலேஷியா வருவதற்கு முன்னரே தமக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுபோன்ற ஒரு சம்பவத்தை எதிர்பார்த்தே- அதனைத் தனது அரசியல் நலனுக்குப் பயன்படுத்தும் திட்டத்துடனேயே மலேஷியப் பயணத்தை மஹிந்த ராஜபக் ஷ ஆரம்பித்திருக்கிறார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு பற்றிய செய்திகளை புறந்தள்ளிக் கொண்டு, தன்னைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்றும், தன்னைப் பற்றியே சிங்கள மக்கள் பேச வேண்டும் என்றும் அவர் தனது பயணத்தைக் கவனமாகத் திட்டமிட்டிருக்கிறார் என்பதை தான் இதிலிருந்து ஊகிக்க முடிகிறது.
மலேஷியாவில் தனக்கு எதிராக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதாக வெளிப்படுத்துவதன் மூலம், விடுதலைப் புலிகளின் எதிரியாக இன்னமும் தான் இருக்கிறேன் என்பதை சிங்கள மக்களுக்கு கூறுவதற்கு மஹிந்த ராஜபக் ஷ விரும்பியிருக்கலாம்.
தனது அரசியல் பலம் குறைவடையாமல் பார்த்துக் கொள்வதற்கு அவர் இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்த எண்ணியிருக்கலாம்.
ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருந்த போதும், அதற்குப் பின்னரும், மலேஷியாவில் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள், மஹிந்தவுக்கு எதிராக நடத்தப்பட்டதில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை 1990களின் தொடக்கத்திலேயே மலேஷியா தடை செய்து விட்டது. அதைவிட, தென்கிழக்காசியாவில் இருந்த புலிகளின் வலைப்பின்னலை அழிப்பதற்கான கேந்திரமாகவும், மலேஷியாவையே இலங்கை அரசாங்கம் பயன்படுத்தியது.
அத்தகைய வழிமுறைகளின் ஊடாகத் தான், பிரபாகரனுக்குப் பின்னர் புலிகள் இயக்கத்துக்குத் தலைமையேற்க முனைந்த கே.பியை இலங்கை அரசாங்கம் மலேஷியாவில் கைது செய்து கொழும்புக்கு கொண்டு வந்தது.
எனவே, மலேஷியா ஒருபோதுமே, புலிகளின் புகலிடமாக இருந்ததில்லை. ஆனால், புலிகளின் ஆதரவாளர்கள் அங்கேயும் இருந்தனர் என்பதை மறுக்க முடியாது.
மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராக மலேஷியாவில் திடீரெனக் கிளம்பிய போராட்டங்கள், சாதாரணமான ஒன்றாக பார்க்கப்படவில்லை. இதனை ஒரு அசாதாரண விடயமாகவே பலரும் பார்க்கின்றனர்.
அதனால் தான், இது மஹிந்த ராஜபக் ஷவின் தூண்டுதலின் பேரில் நிகழ்ந்திருக்கலாமோ என்ற சந்தேகத்தை பல்வேறு அரசியல்வாதிகளும் எழுப்பியிருக்கின்றனர்.
மலேஷியாவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு அப்பால், இலங்கைக்கான தூதுவர் தாக்கப்பட்டதும் கூட, திட்டமிட்ட ஒரு சம்பவமாக இருக்கலாமோ என்ற கேள்விகள் இருக்கின்றன.
மலேஷியாவில் மாத்திரமன்றி, பல்வேறு நாடுகளிலும் இலங்கைத் தூதுவர்கள் உரிய பாதுகாப்பை பெற்றிருந்தனர். போர் உச்சத்தில் இருந்த போது கூட, இலங்கைத் தூதுவர்களைத் தாக்குகின்ற அளவுக்கு யாரும் செல்லவில்லை.
மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தாலும், அவை எல்லாமே அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகத் தான் இடம்பெற்றிருந்தன. எல்லையை மீறாமல் தான் எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டன.
எனினும், இப்போது மலேஷியாவில் அவ்வாறாக எதிர்ப்பு வெளிப்படுத்தப்படவில்லை. தூதுவரைத் தாக்கும் அளவுக்கு அங்கு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
அவ்வாறான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இலங்கைத் தமிழர்களோ, புலிகளோ அல்ல.
தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட இந்திய வம்சாவளியினர் ஐவரே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் நால்வர் தேடப்படுகின்றனர்.
இவர்கள் உணர்ச்சி வசப்பட்டு இவ்வாறு நடந்து கொண்டார்களா- அல்லது யாருடைய தூண்டுதலின் பேரிலேனும் இவ்வாறு செயற்பட்டார்களா என்று தெரியவில்லை.
எவ்வாறாயினும் இந்த விவகாரத்தை மஹிந்த ராஜபக் ஷ தனது அரசியல் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு வசதியான விடயமாக மாறியிருக்கிறது.
மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக கிளம்பியவர்கள், அவரின் அரசியல் மீட்சிக்குத் தான் கைகொடுத்திருக்கிறார்கள். புலிப் பீதியைக் கிளப்பி சிங்கள மக்களை உசுப்பேற்றுவதற்கு துணை போயிருக்கிறார்கள்.
தூதுவரைத் தாக்கியவர்கள் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க விரும்பியிருக்கலாம். அல்லது புலிகளின் ஆதரவாளர்களாகக் கூட இருக்கலாம், எனினும், அவர்கள் தமது செயல், சர்வதேச ரீதியாக தமிழர்களின் கோரிக்கையைப் பலவீனப்படுத்தும் என்பதையிட்டுச் சிந்திக்கவில்லை.
தமிழர்களின் போராட்டத்தை வலுப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு அதனைப் பலவீனப்படுத்துவதற்கு துணைபோயிருக்கிறார்கள்.
இதனால் தான், இந்தச் செயலின் பின்னால் எவரேனும் இருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. குறிப்பாக, மஹிந்த ராஜபக் ஷ தனது அரசியல் மறுஎழுச்சிக்கு விடுதலைப் புலிகளையே பயன்படுத்திக் கொள்ள முனைகின்ற சூழலில், அவர்களைத் தொடர்புபடுத்தி நடந்துள்ள நிகழ்வுகள், இன்னமும் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
மஹிந்த ராஜபக் ஷவின் எதிர்பார்ப்பு களை நிறைவேற்றும் வகையில் தான் தமிழர்கள்- அவர்கள் எங்கிருந்தாலும்- செயற்படப் போகிறார்கள் என்றால், அது அவரது மீள் எழுச்சிக்கு மாத்திரமே வழிகோலுமே தவிர, தமிழர்களின் நலன்களுக்கு ஒருபோதும் துணையாக இருக்கமாட்டாது. மலேஷிய சம்பவங்கள் மீண்டும் தமிழர்களுக்கு கற்றுத்தந்துள்ள பாடமும் இது தான்.
– சத்ரியன்