கோலாலம்பூர்: 239 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் காணாமல் போயுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 5 மர்ம பயணிகள் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. அதில் அலி என்ற பெயரில் பயணித்த ஒரு பயணி குறித்த சந்தேகமும் வலுவடைந்துள்ளது.
மேலும் இந்த விமானம் கடத்தப்பட்டிருக்கக் கூடும் என்பதற்கான சாத்தியக்கூறுகளும் பிரகாசமாகியுள்ளதாக தெரிகிறது. மாயமான மலேசிய விமானம்… யார் அந்த அலி?…. ஹைஜாக் சந்தேகம் வலுக்கிறது இந்த விவகாரத்தில் தற்போது இன்டர்போல் போலீஸாரும், ம்லேசிய விசாரணையாளர்களும் மற்றும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளும் படு தீவிரமாக இறங்கியுள்ளனர்.
விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடலில் தீவிர தேடுதல் நடந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த ஒரு பாகமும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்ற நம்பிக்கை தகர்ந்து வருகிறது.
இதற்கிடையே அந்த விமா்னத்தில் கடைசி நேரத்தில் 5 பயணிகள் விமானத்தை விட்டு தங்களது உடமைகளுடன் இறங்கியது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடைசி நேரத்தில் இவர்கள் ஏன் இறங்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
மேலும் போலி பாஸ்போர்ட்டுடன் விமானத்தில் பயணித்த சில பயணிகள் குறித்த விசாரணையும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரானைச் சேர்ந்த வி்மான ஏஜென்ட் அலி என்பவரிடமிருந்து இந்த போலி பாஸ்போர்ட்டில் பயணித்தவர்கள் டிக்கெட் வாங்கியுள்ளனர்.
இதுவும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளதாம். எனவே இந்த விமான விவகாரத்தில் தீவிரவாதிகளின் கை இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு தாய்லாந்தில் இந்த போலி பாஸ்போர்ட்டுகள் ஆஸ்திரியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் கோஸல் மற்றும் இத்தாலியரான லூஜி மரால்டி ஆகியோரின் பெயரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் மரால்டி தான் வைத்துள்ள பாஸ்போர்ட்டை தற்போது செய்தியாளர்களிடம் காண்பித்து தான் வைத்திருப்பதுதான் ஒரிஜினல் என்றும் தனது பெயரில் பயன்படுத்தப்பட்டுள்ளது போலி என்றும் நிரூபித்து விட்டார். இதனால் அலி மீதான சந்தேகம் வலுத்துள்ளது.
இதற்கிடையே, அலி டிக்கெட் வாங்க பயன்படுத்திய டிராவல்ஸ் நிறுவனத்தின் அதிபர் கூறுகையில், அலியிடம் இருந்தது போலி பாஸ்போர்ட்டா என்பது எனக்குத் தெரியாது. மேலும் அந்த குறிப்பிட்ட விமானத்தில்தான் டிக்கெட் வேண்டும் என்றும் அவர் கேட்கவில்லை.
மாறாக மலேசியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் செல்ல குறைந்த விலை கட்டணம் கொண்ட விமானத்தில் டிக்கெட் தேவை என்றுதான் அணுகினார் என்று விளக்கியுள்ளார். தற்போது அலி குறித்த விசாரணையை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.
யார் இந்த இருவர்?
இதற்கிடையே, ஈரான் நாட்டைச் சேர்ந்த 19 வயது இளைஞர் மற்றும் இன்னொரு நபரின் அடையாளத்தை மலேசியப் போலீஸாா் கண்டறிந்துள்ளனர். இவர்கள் இருவரும் போலி பாஸ்போர்ட் மூலம் சம்பந்தப்பட்ட விமானத்தில் பயணித்துள்ளனர்.
இதில் ஈரான் நபரின் பெயர் போரியா நூர் முகம்மது மஹராத் என்று தெரிய வந்துள்ளது. இந்த நபர் ஈரான் நாட்டிலிருந்து தப்பி வந்து புகலிடம் கோரியவர் என்றும் தெரிய வந்துள்ளது.