வடமராட்சி கிழக்கில் அத்துமீறி தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு வருகை தந்த தமிழரசின் தலைவர் மாவை சேனாதிராசாவை மீனவர்கள் வெளியேற்றியுள்ளனர்.
கடற்தொழில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ் பிரதான வீதியிலுள்ள கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 8.45 மணிக்கு பேரணி ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டிருந்த்து.
இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அங்கு மாவை சேனாதிராசாவும் வருகை தந்திருந்தார்.
இதன் போது சமாச அலுவலகத்திற்குச் சென்று சமாசப் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.
அதற்கு வெளியில் நின்றுந்த மீனவர்கள் இங்கு அரசியல் வாதிகள் வேண்டாம் என்றும் மாவை சேனாதிராசாவை வெளியேற்ற வேண்டுமென்றும் கோசமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து மாவை சேனாதிராசாவும் அலுவலகத்திலிருந்து வெளியேறியிருந்தார். அத்தோடு பேரணியிலும் கலந்து கொள்ளாது சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அரசியல் தலைவர் மாவை சேனாதிராசாவை திட்டமிட்டு வெளியேற்றவில்லை என்றும் விரும்பத்தகாத வகையில் நடைபெற்ற அந்த சம்பவத்திற்கு தாம் வருந்துவதாகவும் கடற்தொழிலாளர் சமாசத்தின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.