அமெரிக்காவின் மியாமி கடற்கரைப் பகுதியில் சீட்டுக்கட்டு போல் சரிந்த 12 மாடி கட்டிடத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் உள்ளது.
லத்தீன் அமெரிக்காவின் பராகுவே, கொலம்பியா, வெனிசுலா, அர்ஜெண்டினா, உருகுவே நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதில் அதிகம் தங்கி இருந்தனர். 1981 களில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது.
இதற்கிடையே, இந்தக் கட்டிடம் நேற்று அதிகாலை 1 மணியளவில் சீட்டுக்கட்டு போல் திடீரென சரிந்து விழுந்தது. கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதும் சரிந்தது. குடியிருப்பின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சுமார் 55 குடியிருப்புகள் இடிந்து சரிந்தது.
இந்த கோர விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டார் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் துரிதப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக இடிபாடுகளில் சிக்கிய 12 வயது சிறுவன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
பலர் காயமடைந்துள்ளனர் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
மியாமி கட்டிட விபத்து
கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து மியாமி-டேட் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், மியாமி குடியிருப்பு கட்டிட விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர். மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள 159 பேரின் நிலைமை என்ன என்பது குறித்து தெரியவில்லை என மியாமி-டேட் பகுதி மேயர் டேனியல்லா லெவின் காவா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகள் முழுமையடைந்த பின்னரே உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர் மற்றும் சேதம் குறித்த விவரங்கள் வெளியாகும் என தெரிகிறது.
1981-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் 1990-களில் இருந்து ஆபத்தான கட்டிடமாக உள்ளது என 2020-ம் ஆண்டில் பூமி மற்றும் சுற்றுச்சூழல் துறையின் பேராசிரியரான ஷிமோன் வோடோவின்ஸ்கி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராகுவே ஜனாதியின் உறவினர்கள் உள்பட பராகுவேவை சேர்ந்த 51 பேரை காணவில்லை என பராகுவே வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.