மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தமான சிவன் ஆலயங்களில் ஒன்றான தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேரோட்ட உற்சவத்தின் போது தேர் சில்லில் அகப்பட்டு ஒருவர் பலியானதாக கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
முனைக்காடு வாசியான எஸ். ஜீவானந்தம் (வயது 42) என்பவரே தேர் சில்லில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மேலும் காயம்பட்ட நால்வர் உடனடியாக மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பிள்ளையார் வலம் வந்த தேர், ஆலய உள் வீதியில் உலா வரும்போது அக்கினி மூலையில் வைத்து ஜீவானந்தம் தேரின் பின்புறச் சில்லுக்குள் அகப்பட்டு மரணமாகியுள்ளார்.
சற்று மழை பெய்து கொண்டிருந்ததால் ஜீவானந்தமும் காயம் பட்ட ஏனைய நால்வரும் வழுக்கி விழுந்து தேரின் மரச் சில்லுக்குள் அகப்பட்டிருக்கலாம் என்று கூடவே தேரோட்டத்தில் கலந்துகொண்ட அடியார்கள் தெரிவித்தனர்.
தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்ட உற்சவ வரலாற்றில் தேர்ச் சில்லுக்குள் அகப்பட்டு ஒருவர் மரணமடைந்திருப்பது இதுவே முதன் முறையாகும் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் நாளை திங்கட்கிழமை இடம்பெறவிருக்கிறது.
முஸ்லிம்கள் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காண்பதில் முரண்பாடு
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடத்தில் 24 வருடங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகளினால் கடத்தி, படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் புதைகுழிகள் என அடையாளம் காணப்பட்ட இடங்கள் தொடர்பில் முரண்பாடுகள் எழுந்துள்ளன.
இந்த முரண்பாடு காரணமாக இன்று அந்த இடத்தை பார்வையிட்டு, அகழ்வுப் பணிகள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக வருகை தந்திருந்த நிபுணர்கள் குழு எந்தவொரு தீர்மானமும் இன்றி கொழும்பு திரும்பியது.
புதைகுழிகள் தொடர்புடைய வழக்கொன்றின் முறைப்பாட்டாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினரான மஜீத் ஏ. றவூப் ஒரு இடத்தை அடையாளம் காட்டிய அதேவேளை கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பாறுக் மொகமட் ஷிப்லி வேறு மூன்று இடங்களை அடையாளம் காட்டிய போது அந்த இடங்கள் தொடர்பாக முரண்பாடு ஏற்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிபுணர் குழுவின் தலைவரான சட்ட மருத்துவ நிபுணர் டாக்டர் அஜித் தென்னக்கோன் குறித்த இடம் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையுடன் அகழ்வுப்பணிகளுக்கான திட்டமிடலை மேற்கொள்வதற்காக வந்திருந்த போதிலும் அந்த இடம் தொடர்பான முரண்பாடுகளினால் இது தொடர்பாக சரியாக திட்டமிட முடியவில்லை என்றார்.
இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்துமாறு போலிஸாரை கேட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
நீதிமன்றத்தின் முடிவின் பிரகாரமே சரியான இடத்தை அடையாளம் கண்டு திட்டமிட்டு இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்து அமைப்புகள் அச்சம்
அதேவேளை, இந்த அகழ்வுப் பணிகளின் போது அந்தப் பகுதியில் சுனாமியின் போது அவசர அவசரமாக இந்து சமய ஆசாரப்படி புதைக்கப்பட்ட சடலங்களுக்கு களங்கம் ஏற்படலாம் என உள்ளூர் இந்து அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
நிபுணர்களை அந்த இடத்திற்கு வருகை தந்து சந்தித்த குருக்கள்மடம் இந்து இளைஞர் பேரவையின் தலைவரான எஸ். சுதர்சனன், சுனாமியின் போது உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் தங்களால் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரமே இந்த அகழ்வு பணி இடம் பெறவிருப்பதால், இது தொடர்பாக நீதிமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டியிருப்பதால் நீதிமன்றத்தை நாடுமாறு சட்ட மருத்துவ நிபுணர் குழுவின் தலைவரான டாக்டர் அஜித் தென்னக்கோன் பதில் அளித்தார்.
1990ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்தம் முறிந்து, மீண்டும் போர் ஆரம்பமான போது விடுதலைப்புலிகளினால் முஸ்லிம்கள் கடத்தப்பட்டு, புதைக்கப்பட்ட ஒரு சம்பவமாக, இந்தப் புதைகுழி சம்பவமும் அப்பகுதி மாகாண முஸ்லிம்களால் அடையாளப்படுத்தப்படுகின்றது.
1990ம் ஆண்டு ஜுலை 12ம் திகதி தமது வியாபாரம் , தொழில் மற்றும் தனிப்பட்ட தேவைகளின் நிமித்தம் மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் பயணம் செய்த, குறிப்பாக காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் 150 பேர் குருக்கள்மடம் என்னுமிடத்தில் விடுதலைப்புலிகளினால் வழிமறிக்கப்பட்டு, கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முஸலிம்கள் கூறுகின்றார்கள்.
படுகொலையானதாகக் கூறப்படும் தமது உறவினர்கள் அந்த பகுதியிலுள்ள கடலோரத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக அநேகமான முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்.
புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ள தமது உறவுகளின் சடலங்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய மார்க்க முறைப்படி அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸில் சிலர் முறைப்பாடுகளை ஏற்கனவே பதிவு செய்துள்ளனர்.
முறைப்பாட்டார்களால் அடையாளம் காட்டப்பட்ட இடங்களிலே அகழ்வுப் பணிகள் இடம் பெறவுள்ளன.