அதி சொகுசு காரில் தொடர்ந்த கடத்தலுக்கு களனியில் வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி
சரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒற்றன். அடிக்கடி பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கும் சரன் இற்றைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு தொடர்பினை ஏற்படுத்துகின்றார்.
‘ சேர்… நான் சரன்… பெரியளவில் போதைப் பொருள் வியாபாரம் ஒன்று இடம்பெற்று வருகின்றது… காரில் போகிறார்கள், வருகிறார்கள்….சுற்றிவளைப் பொன்றை மேற்கொண்டால் கைது செய்யலாம்…’ என பல தகவல்களை வழங்கியதும் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
தமக்கு மிக விசுவாசமான ஒற்றன் வழங்கிய தகவல்களை சரிபார்த்துக்கொண்ட அதிரடிப்படை புலனாய்வுப் பிரிவு நடவடிக்கைகளுக்காக அந்த தகவல்களை நடவடிக்கை பிரிவுக்கு கைமாற்றியது.
இந் நிலையில் நடவடிக்கை பிரிவானது மிக சூட்சுமமாக நடவடிக்கையினை முன்னெடுத்தது. பல முறை இந்த போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்ய சென்ற போதும் அவர்கள் அதிரடிப்படையின் வலையில் சிக்கவில்லை.
எனினும் அதிரடிப்படையினர் தளரவில்லை. திட்டம் மேல் திட்டம் வகுத்தனர். ‘ ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவில் வாடிக்காத்திருக்குமாம் கொக்கு என்பதைப் போல் சரியான சந்தர்ப்பத்துக்காய் அதிரடிப்படையினர் காத்திருந்தனர்.
அன்று புதன் கிழமை. சரனிடமிருந்து புலனாய்வுப் பிரிவுக்கு மீண்டும் அழைப்பு வந்தது. ‘ சேர்…அவர்கள் ஏதோ செய்ய போகின்றார்கள்…திட்டமிட்டால் கைது செய்யலாம்..’ என்ற தோரணையில் பேசியதும் தகவல் நடவடிக்கை பிரிவுக்கு வழங்கப்பட்டது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பதில் கட்டளை அதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் பத்மசிறிக்கு தகவல் வழங்கப்பட்டதும் நடவடிக்கை குழுவை உடன் தயார் செய்தார்.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் மூன்று சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர்களைக் கொண்ட 40 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் பத்மசிறி நியமித்தார்.
ஒற்றன் சரனின் தகவலுக்கு அமைய களனி- பியகம பிரதான பாதையில் விசேட திட்டத்துடன் 40 பேர் கொண்ட அதிரடிப்படை குழு தயாரானது. களனி விஹாரையை அண்மித்த பகுதியில்பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உத்தியோகபூர்வ சீருடையில் சிலர் நிறுத்தப்பட்டு அங்கு தற்காலிக சோதனை சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் பத்மசிறியின் ஆலோசனையின் கீழ் அதிரடிப்படையின் திட்டத்தின் பிரகாரம் பலர் சிவில் உடைகளிலும் சிலர் உத்தியோக பூர்வ சீருடையிலும் பியகம முதல் களனி வரையான பாதையில் பல இடங்களிலும் விளிப்புடன் காத்திருந்தனர்.
இந் நிலையில் பியகம பகுதியில் இருந்து சிவப்பு நிற முச்சக்கரவண்டியொன்று களனிப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்தது. டப்ளியூ.பீ. 201 – – 9637 என்ற இலக்கத்தை கொண்டிருந்த அந்த முச்சக்கரவண்டியில் இருவர் இருந்தனர். நடுத்தர வயது மதிக்கத்தக்க அவ்விருவரில் ஒருவர் அந்த முச்சக்கர வண்டியை செலுத்திய நிலையில் மற்றையவர் பின்னாசனத்தில் இருந்தார்.
களனிப் பிரதேசத்தை நோக்கி பயணித்த அந்த முச்சக்கர வண்டி அந்த பாதையின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது. இதன் போது அப்பகுதியில் ஏற்கனவே கிடைத்த புலனாய்வுத்தகவல்களின் அடிப்படையில் சிவில் உடையில் அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
முச்சக்கர வண்டி நிறுத்தப்பட்ட இடத்தில் டப்ளியூ.பீ கே.எஸ் – 0358 என்ற இலக்கத்தை உடைய வெள்ளை நிற ‘ஹைப்ரட்’ ரக அதி சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
அதி சொகுசு காரில் தொடர்ந்த கடத்தலுக்கு களனியில் வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி
முச்சக்கர வண்டியில் பின் ஆசனத்தில் அமர்ந்து வந்த நபர், முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கி அந்த அதி சொகுசு காரின் சாரதி ஆசனத்தில் அமர்வதை அங்கிருந்த அதிரடிப்படையினர் அவதானித்தனர்.
அடுத்து கண் இமைக்கும் சில வினாடிகளுக்குள் நின்றிருந்த ‘ஹைப்ரட்’ கார் முன்னால் பயணிக்க முச்சக்கர வண்டியோ காரின் பின்னால் தொடர்ந்து பயணித்தது.
விடயம் களனி சோதனை சாவடியில் உள்ள அதிரடிப்படை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. உசார் நிலையில் இருந்த அதிரடிப்படையினர் சோதனை சாவடியில் காரையும் முச்சக்கரவண்டியையும் நிறுத்தினர்.
இரு வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இரு சாரதிகளும் இறங்கினர். தமது அனுமதிப்பத்திரங்களை காண்பித்தனர்.
அதிரடிப்படையினரோ அனுமதிப்பத்திரங்களை பரிசோதிக்க நிறுத்தவில்லை என்பதை அடுத்த சில கணங்களில் அவ்விருவரும் புரிந்து கொண்டனர். காரின் அருகே சென்ற அதிரடிப்படை வீரர் ஒருவர் காரை திறந்து அதனுள் இருந்த ஒரு உரமூடையை வெளியே எடுத்தார்.
அதில் ஏதேதோ சில பொதிகள் இருந்தன. அவற்றை சோதனை செய்த போது அவை போதைப் பொருளை ஒத்திருந்தது. உடன் செயற்பட்ட அதிரடிப்படையினர் இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்துக்கு விசேட விசாரணைகளின் நிமித்தம் கொண்டுவரப்பட்டனர்.
அதிரடிப்படையினரின் தலைமையகத்துக்கு கொண்டு வரப்பட்டு விசாரணை செய்ததில் காரை செலுத்தி வந்தவர் 37 வயதான மருதானை பிரதேசத்தை சேர்ந்த செல்வதுரை ரவிகுமார் எனவும் முச்சக்கர வண்டியில் பின் தொடர்ந்து வந்தவர் 38 வயதுடைய கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த அவரது அண்ணனான செல்வதுரை சுந்தரராஜ் எனவும் தெரியவந்தது.
அத்துடன் காரில் இருந்தவை சுத்தமான ஹெரோயின் போதைப் பொருள் என தெரியவந்ததுடன் அவை 85.5 கிலோ கிராம்கள் என கண்டறியப்பட்டது.
மூன்று கிலோ கிராம்கள் கொண்ட 25 பொதிகள், ஒரு கிலோ கிராம் கொண்ட 10 பொதிகள் மற்றும் 500 கிராம் கொண்ட ஒரு பொதி என அவை பொதியிடப்பட்டிருந்தன.
SSP ரஞ்சித் பத்மசிறி
இலங்கையில் கைப்பற்றப்படும் மிக கூடிய தொகை கொண்ட போதைப் பொருளின் வரிசையில் இது இரண்டாம் இடத்தை வகிக்கின்றது. கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதியானது சுமார் 68 கோடியே 31 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த இரு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
உலகின் கறுப்புப் பணம் புழங்கும் முதற்தர வர்த்தகமாக விளங்கும் போதைப் பொருள் வர்த்தகத்தை நாட்டிலிருந்து தூரப்படுத்த இலங்கையில் உள்ள 435 பொலிஸ் நிலையங்களுக்கு மேலதிகமாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, அதிரடிப்படை,சுங்கப் பிரிவு என பல நிறுவகங்கள் பங்களிப்பு செய்து வருகின்றன.
SSP அஜித் ரோஹன
விசேட அதிரடி படையினால்
2011 இலிருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட ஹெரோயின்களின் விபரம்
2011
சம்பவங்களின் எண்ணிக்கை – 15
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் நிறை 213g
ஹெரோயினின் பெறுமதி – 17,01,870 ரூபா
கைது செய்யப்பட்டவர்கள் 23 பேர்
2012
சம்பவங்களின் எண்ணிக்கை – 163
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் நிறை 3kg 163g
ஹெரோயினி பெறுமதி – 25272370 ரூபா
கைது செய்யப்பட்டவர்கள் 197 பேர்
2013
சம்பவங்களின் எண்ணிக்கை – 97
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் நிறை 2kg 521g
ஹெரோயினின் பெறுமதி – 20,14,2790 ரூபா
கைது செய்யப்பட்டவர்கள் 113 பேர்
2014 (இதுவரை)
சம்பவங்களின் எண்ணிக்கை – 34
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் நிறை 85 kg 788g
ஹெரோயினின் பெறுமதி – 685446120 ரூபா
கைது செய்யப்பட்டவர்கள் 38 பேர்
எவ்வாறாயினும் போதைப் பொருள் தொடர்பில் ஏனைய நிறுவகங்களால் முன்னெடுக்கப்பட்டும் அனைத்து நடவடிக்கைகளினதும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் உரிமை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கே உள்ளது.
இந் நிலையிலேயே சந்தேக நபர்கள் அப்பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹணவின் தகவல்களின் பிரகாரம் தற்போது இலங்கை நீதிமன்றங்களில் போதைப் பொருள் தொடர்பில் 1006 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் 421 வழக்குகள் மேல் நீதிமன்றங்களிலும் 585 வழக்குகள் நீதிவான் நீதிமன்றங்களிலும் உள்ளன. அத்துடன் கடந்த 5 வருடங்களில் 175 பேருக்கு ஆயுள் தண்டனையும் 55 பேருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் 394 பேருக்கு பல வருட சிறை தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இதனை விட கடந்த வருடம் மட்டும் 1 கோடியே 75 இலட்சத்து 200 ரூபா பணம் அரசுக்கு போதைப் பொருள் குற்றவாளிகளிடமிருந்து தண்டப்பண வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.
அத்துடன் கடந்த 6 மாதங்களில் மட்டும் தெவுந்தர தமிழ் உள்ளிட்ட 9 சர்வதேச போதைப் பொருள் வலைப்பின்னலுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் தற்போது பாகிஸ்தானில் அல்லது டுபாயில் மறைந்திருக்கின்றார் என சந்தேகிக்கப்படும் பிரதான சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரான மாளிகாவத்தையை சேர்ந்த சித்தீக் என்பவரையும் மேலும் பலரையும் கைது செய்ய சிவப்பு அறிவித்தல் சர்வதேச பொலிஸாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இந்த 85.5 கிலோ கிராம் நிறையுடைய போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.இலங்கைக்குள் போதைப் பொருள் கடத்தப்படும் மார்க்கமாக கடந்த நாட்களில் தங்காலை உள்ளிட்ட கடல் மார்க்கங்களும் துறைமுகம் மற்றும் விமான நிலையம் எனபன அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் பாகிஸ்தானிலிருந்தே பெரும்பாலும் போதைப் பொருள் கடத்தப்படும் நிலையில் பிரவுன் சுகர் எனப்படும் ஹெரோயின் ரக போதைப் பொருள் அதில் பிரதானமானதாகும்.
கடந்த நாட்களில் கராச்சியிலிருந்து கொள்கலன் ஊடாக கட்டிட உபகரணங்கள்
என்ற போர்வையில் 110 கிலோ கிராம் நிறை உடைய ஹெரோயின் நாட்டுக்குள் கடத்தப்பட்டிருந்தது. இதுவே இலங்கையில் கைப்பற்றப்பட்ட அதி கூடிய நிறை கொண்ட போதைப் பொருளாகும்.
இது தொடர்பில் சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை கூட நிறைவடைந்துள்ள நிலையில் பிரதான சந்தேக நபரான பாகிஸ்தானை சேர்ந்த சர்தாரி கானை மட்டும் கைது செய்ய இராஜ தந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் தற்போது கைப்பற்றப்பட்டுள்ள போதைப் பொருள் பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு களஞ்சியப்படுத்தவோ அல்லது விநியோகிக்கவோ இவ்வாறு எடுத்துச் சென்றிருக்கலாம் என விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அந்த போதைப் பொருள் தொகை எவ்வாறு இவர்களின் கைகளுக்கு கிடைத்தது என விசாரணை செய்யும் அதே சமயம் அவை யாருக்கெல்லாம் விநியோகம் செய்யப்படவிருந்தன, எங்கிருந்து எவ்வாறு இவர்களுக்கு பரிமாற்றப்பட்டது, இதன் பின்னணியில் யார் உள்ளார் போன்ற அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்த பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தடுப்புக்காவலில் கேள்விகளை தொடுத்து விசாரணைகளை செய்து வருகின்றது.
இலங்கையை போதைப் பொருள் மத்திய நிலையமாக பயன்படுத்த சில சர்வதேச போதைப் பொருள் வர்த்தகர்களும் சதிகாரர்களும் முயற்சிக்கும் நிலையில் நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதைப் பொருளை ஒழிக்க பொலிஸாருக்கு பொதுமக்களாகிய நாமும் ஒத்துழைக்க வேண்டும்.