யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் இரு தம்பதியினர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்று பிற்பகல் 2 மணியளவில் கொட்டடி சீனிவாசகர் வீதியில் வசிக்கும் சாம்பசிவம் மற்றும் அவரது மனைவியான சரோயினிதேவி ஆகிய இருவர் மீதுமே இந்த கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகில் குடியிருக்கும் குணரத்தினம் குணரஞ்சன் வயது 40 என்பவரே இந்த கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என ஆதாரபூர்வமாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக எமது ஊடக விசாரணையில் தெரியவந்ததாவது,
கணவன் மனைவி தனியாக வசித்துவரும் நிலையில் மேற்படி நபர் இவர்களுடன் நெருங்கி பழகிவந்துள்ளார்.மேலும் வயதான தம்பதிகள் எனும் காரணத்தினால் இவர்களும் அவரை ஆதரித்து வீட்டில் அணைத்து வந்துள்ளனர்.
மேலும் இவரது மூன்று பிள்ளைகளையும் வளர்க்க இவர்களே உதவிசெய்து வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் மின்னியல் தொழிலை செய்துவரும் குணரஞ்சன் வழக்கம் போல சாம்பசிவம் வீட்டிற்குள் நுளைந்துள்ளார். அங்கு சாம்பசிவத்தின் மனைவியான சரோயினிதேவியே தனிமையில் இருந்துள்ளார்.
சாம்பசிவம் அருகிலுள்ள கடைக்கு சென்றிருந்ததை அறிந்துகொண்ட குணரஞ்சன் சரோயினிதேவியின் பின்னால் சென்று கதவிற்கு போடும் வார் கட்டையால் தலையிலேயே பலமுறை கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதனால் நிலைகுலைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த சரோயினிதேவியின் தங்கநகைகளை வலுக்கட்டாயமாக கழற்ற முற்பட்ட வேளை அவர் தடுக்க முற்பட்டதால் கழுத்தை நெரித்து கொலை முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதேவேளை கடையிலிருந்து திரும்பிய சாம்பசிவம் வீட்டை நெருங்கிய போது அயல் வீட்டுக்கார பெண் உங்கள் வீட்டில் யாரோ கத்துவது போல கிடக்கின்றது என தெரிவித்துள்ளார்.
பதறிப்போன சாம்பசிவம் கடையில் வேண்டியதை வழியிலேயே போட்டுவிட்டு வீட்டிற்குள் நுளைந்துள்ளார்.
அங் கே தனது மனைவியை குணரஞ்சன் கொல்லமுனைவதை கண்டதும் பதறிப்போய் அவனை தள்ளிவிட்டு மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார்.
நிலைமை பிழைத்ததை உணர்ந்த குணரஞ்சன் பின்னர் சாம்பசிவத்தையும் கொடூரமாக தாக்க முயன்றுள்ளார்.இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த சாம்பசிவத்தின் மேலே ஏறியிருந்து அவரது கழுத்தை வாளால் அறுத்துள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் அயல் வீட்டுக்கார பெண் உள்ளே நுளைந்துள்ளார்.அவர் தன்னை பார்த்துவிட்டதை உணர்ந்த குணரஞ்சன் அவரையும் கொடூரமாக தாக்கி மூர்ச்சையாக செய்துவிட்டு வீட்டிலே கிடந்தவற்றை சுருட்டிக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் உடைமாற்றிக்கொண்டு அடித்த நகைகள் மற்றும் பணத்துடன் வன்னிப்பகுதிக்கு செல்வதாக கூறி தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் ஒருவாறு உயிரை கையில் பிடித்துக்கொண்டு எழுந்த சாம்பசிவம் வெளியில் வந்து அயலவர்களை அழைத்துள்ளார்.
பின்னர் அயலவரின் உதவியுடன் மூவரும் யாழ் போதனாவைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக யாழ் பொலிசாரிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய உடனடியாக களத்தில் இறங்கிய பொலிசார் குணரஞ்சன் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்ட அதேவேளை அவரின் முன்று பிள்ளைகளையும் கைதுசெய்துள்ளனர்.
யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூவரின் நிலையும் பாதகமாக காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருந்தும் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை மூவரும் கடந்துள்ள நிலையில் சாம்பசிவத்தின் மனைவியின் நிலையே பாரதூரமாக காணப்படுவதாக மேலும் தெரியவருகின்றது.