யாழ்ப்பாணத்தில் குறுகிய காலப் பகுதியில் அதிகளவான வாள் வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. கோறைப் புற்கள் போன்று முளைவிடும் இந்த வாள் வெட்டுச் சம்பவங்கள் வைரஸ் தொற்று நோயாக யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் பரவிக் கிடக்கின்றன.
கடந்த யுத்தத்தின் போது தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப, துயரங்கள், அதனோடு இல்லாதொழிக்கப்பட்ட சொத்துக்கள் என தமது அன்றாட வாழ்வாதாரத்துக்கே தத்தளித்துக் கொண்டிருக்கும் இந் நிலையில், இவ்வாறான சம்பவங்களும் இடம்பெறும் நிலையில் தமிழ் மக்கள் எக் காலத்திலும் நிம்மதியாக இருக்க முடியாத ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் காட்டி நிற்கின்றது.
இவ் வாள் வெட்டுச் சம்பவத்தினால் உயிர்கள் பறிக்கப்பட்டு, மீண்டும் ஒரு யுத்த நிலையைத் தமிழ் மக்கள் எதிர்கொள்வதை எக் காரணம் கொண்டு ஏற்றுக் கொள்ள முடியாது. இதனைத் தடுப்பதற்கு அரச தரப்பு அதீத கவனம் எடுத்து நம்பியிருக்கும் தமிழ் மக்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது தலையாய கடமையாகும்.
தேசிய பாதுகாப்பில் முழு மூச்சாக இருக்கும் அரசு, தமிழ் மக்களின் நாளாந்தப் பாதுகாப்பிலும் கவனம் எடுத்துச் செயற்படுமாக இருந்தால் தமிழ் மக்கள் பிறிதொரு உதவியை எக் காலத்திலும் நாடிச் செல்லமாட்டார்கள்.
இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்வதற்கு மூன்று விடயங்களை அரசு ஏற்படுத்திக் கொடுக்குமாக இருந்தால் தமிழ் மக்கள் எக் காலத்திலும் அரசை வாழ வைத்துக் கொண்டிருப்பார்கள்.
அதாவது,
01. கலாசாரச் சீரழிவிலிருந்து பாதுகாத்தல்
02. கதவைத் திறந்து விட்டு இரவில் நிம்மதியாகத் தூங்குதல்
03. ரவுடிகளின் அட்டகாசத்திலிருந்து மக்களையும், இளம் பெண்களையும் காப்பாற்றுதல்
மேற்படி மூன்று விடயங்களும் அரசாங்கத்தால் நிவர்த்தி செய்யப்படுமாக இருந்தால் தமிழ் மக்கள் இலங்கையில் ஒரு நிம்மதியான வாழ்வை வாழக்கூடிய நிலை வரும். அதேநேரம் தமிழ் மக்கள் மத்தியில் பிறிதொரு அமைப்பொன்று உருவாகுவதை முற்றுமுழுதாக தடுத்தும் விடலாம்.
எனவே காலத்தின் தேவை அறிந்து தமிழ் மக்களின் நிலையினைக் கருத்தில் கொண்டு அரசு செயற்படுமாக இருந்தால் எந்த சக்தியாலும் அரசை அடக்கி விட முடியாது. இலங்கையில் பெரும்பான்மை இனமாக சிங்கள மக்கள் இருந்தாலும் கூட, தேர்தல் காலங்களில் வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிப்பது தமிழ் மக்களின் வாக்குகள் என்பதை தென்னிலங்கை அரசியல்வாதிகள் அறிந்திராதவர்கள் அல்ல.
எனவே இன்றைய காலத்தில் இன்றியமையாதது தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வினை அரசு காண வேண்டும். அதுவே நிலையான அரசு அமைப்புக்கு உந்துசக்தியாக இருக்கும்.