யாழ்ப்பபணத்தில் யாழ்தேவி..! (வீடியோ)
யாழ்தேவியின் பரீட்சார்த்த புகையிரத சேவை இன்று திங்கள் கிழமை இடம்பெற இருந்த நிலையில் யாழ்தேவி புகையிரதம் வெள்ளோட்டமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் யாழ்ப்பாணத்துக்குவருகை தந்தது.
உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 24 வருடங்களாக யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்படைந்திருந்தன. புகையிரத பாதைகளும் முற்றாக சேதமாகி இருந்தன.
உள்நாட்டு யுத்தம் கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்ததை அடுத்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையினை ஆரம்பிக்கும் நோக்குடன் சேதமான புகையிரத பாதைகள் மற்றும் புகையிரத நிலையங்கள் அனைத்தும் துரித கதியில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கான புனரமைப்பு பணிகள் பெருமளவில் பூர்த்தியடைந்துள்ள நிலையில் நேற்று முதல் யாழ்தேவி பரீட்சார்த்த புகையிரத சேவையில் ஈடுபட்டுள்ளது.
எதிர்வரும் மாதம் 13ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் யாழ்ப்பாணத்திற்கான யாழ்தேவி புகையிரத சேவை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப் புகையிரத சேவையானது மணித்தியலத்திற்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் தனது சேவையை வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை ஒக்டோபர் 13இல் ஆரம்பம்
21-09-214
யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டுடன் அஸ்தமித்திருந்த வடக்குக்கான ரயில் சேவை, யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து ஓமந்தை, பளை, கிளிநொச்சி வரை படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு தற்போது யாழ்ப்பாணம் வரை சேவை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவையை விஸ்தரிக்கும் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு, இன்று (22) பரீட்சார்த்த ரயில் சேவை இடம்பெறவுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு பளையிலிருந்து ஆரம்பமாகும் பரீட்சார்த்த புகையிரதம், 10.30 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடையும் என புகையிரத திணைக்களம் தெரிவித்தது.
தொடர்ந்து ஒக்டோபர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் என்று புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்தது.