முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் இன்று முற்பகல் 11.45 அளவில் தனியார் பஸ்சின் மிதிப் பலகையில் இருந்து தவறிவிழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ்சில் பயணித்த 19 வயதான இளைஞனே முறிகண்டி கோயிலுக்கு அருகே தவறிவிழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த இளைஞன் வவுனியா கோவில் புளியங்குளம் பகுதியச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
a
இதேவேளை, மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த பஸ்சொன்று, சைக்கிளில் வீதியை கடந்துகொண்டிருந்த ஒருவர் மீது இன்று மாலை 5 மணியளவில் மோதியுள்ளது.
பஸ் மோதியதில் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கோட்டக்கல்லாறு பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
யாழ். – கொழும்பு தனியார் சொகுசு பஸ்ஸில் 13.5 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது:சாரதி, நடத்துனர் உட்பட மூன்றுபேர் கைது
15-09-2014
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணிகள் சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ்வண்டிகள் ஊடாக கேரள கஞ்சா கடத்தப்படும் வர்த்தகம் ஒன்றினை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் முறியடித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பஸ் வண்டி ஒன்றிலிருந்து 13.5 கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவினை கனகராயன் குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இடத்தில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்ததன் மூலம் குறித்த வர்த்தகம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் கடமை நேர சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜே.கே.ஆர்.ஏ.பெரேராவுக்கு நேற்று முன் தினம் இரவு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த திடீர் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமக்கு கிடைத்த தகவ்லின் பிரகாரம் ஏ.9 வீதியில் கனகராயம் குளம் பொலிஸ் பிரிவில் தற்காலிக வீதி சோதனை தடை ஒன்று ஏற்படுத்தப்பட்டு குறித்த பஸ் வண்டி சோதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன் போதே பஸ் வண்டியிலிருந்து 25 இலட்சம் ரூபா வரை பெறுமதி கொண்டது என கணிக்கப்படும் 13.5 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் பஸ் வண்டியின் சாரதி, நடத்துடன் மற்றும் பிறிதொரு நபரையும் கைது செய்த விஷேட அதிரடிப்படையினர் அவர்களையும் கஞ்சாவையும் மேலதிக விசாரணை நடவடிகைகளின் பொருட்டு கனகராயன்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கடத்தப்படும் கேரள கஞ்சா பயணிகள் பிரயாண பஸ்வண்டிகள் ஊடாக கொழும்புக்கு கடத்தப்படுவது தொடர்பில் ஏற்கனவே பொலிஸாருக்கு தகவல் கிட்சைத்திருந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கனகராயன் குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை பஸ் வண்டி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சாரதி, நடத்துனர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு பஸ் வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அதில் பயணித்த பிரயாணிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்ததாக தெரியவருகின்றது.
இந்த பஸ்ஸில் பயணித்த பிரயாணி ஒருவர் கேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் நான் பயணித்த சொகுசு பஸ்ஸை 100 க்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்டையினரும் பொலிஸாரும் கனகராயன் குளப்பகுதியில் மறித்தனர்.
இதில் பயணித்த 45 பயணிகளையும் அவர்கள் இறக்கியதுடன் பஸ்ஸை சோதனையிட்டனர். பஸ்ஸிலிருந்து கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டது. பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்ட பயணிகளை வேறு பஸ்களில் ஏற்றி அனுப்புவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் சில மணி நேரம் காத்திருந்து பின்னால் வந்த பஸ்களில் ஏறி நின்ற வண்ணமே கொழும்பு நோக்கி நாம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.