பதின்மூன்று வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்திய நபர் ஒருவரை நெல்லியடிப் பொலிஸார் நேற்று மாலை கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது; கிணற்றில் நீர் அள்ளச்சென்ற சிறுமிக்கு மாம்பழம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பற்றைக்குள் கூட்டிச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் கரவெட்டி மேற்கு இராஜ கிராமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் மாம்பழத்தினைக் கொடுத்து சிறிது தூரம் கூட்டிச்சென்ற பின் சிறுமியின் வாயினைப் பொத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிணற்றில் நீர் அள்ளச் சென்ற சிறுமியினைக் காணாத பெற்றோர் தேடிப்பார்த்தபோது பற்றைக்குள் குறித்த சிறுமி இருப்பதனைப் பார்த்துள்ளனர். சிறுமி நடந்த சம்பவத்தினை பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் நெல்லியடி பொலிஸில் செய்த முறைப்பாட்டினை அடுத்து அதே பகுதியினைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் நேற்று மாலை கரவெட்டி பகுதியில் வைத்து நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நபர் இரண்டு திருமணங்கள் செய்து வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தற்போது சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி குற்றத்தடுப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடலில் அமிழ்த்தி நண்பனை கொலை செய்ய முயற்சி; இருவர் கைது
யாழ்ப்பாணம், கசூரினாக் கடலில் நண்பனை நீரில் அமிழ்த்தி கொலை செய்ய முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்ததாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கடலினுள் அமிழ்த்தப்பட்ட நபர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கொலை முயற்சியில் ஈடுபட்ட மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் அடங்கிய நண்பர் குழுவொன்று, கசூரினாக் கடற்கரையில் மது அருந்தியுள்ளனர். இதன்போதே, இவர்களில் நால்வர் இணைந்து, மற்றைய நபரைத் தூக்கிச் சென்று கடலினுள் அமிழ்த்திக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இதனை அவதானித்துள்ள, கடலில் ஆபத்தில் சிக்குபவர்களைக் காப்பாற்றும் பணியாளர்கள், குறித்த நபரைக் காப்பாற்றி கரை சேர்த்ததுடன், இவ்விடயத்தினை அங்கு கடமையில் நின்ற பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து, மேற்படி நால்வரும் தப்பித்து ஓட முயன்ற போதும், அவர்களில் இருவர் பொதுமக்களால் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.