‘வடபகுதியில் தேர்தலை பகிஸ்கரித்த படியாலேயே தமிழ் மக்களுக்கு இந்த அழிவு ஏற்பட்டது. இத்தவறை திரும்பவும் செய்யாதீர்கள்’ லண்டனில் புலி ஆதரவாளர்களுக்கு ரணில்…
“எல்ரிரிஈ வடபகுதியில் தேர்தலைப் பகிஸ்கரித்த படியாலேயே தமிழ் மக்களுக்கு இந்த அழிவு ஏற்ப்பட்டது” என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தன்னைச் சந்தித்த எல்ரிரிஈ ஆதரவாளர்கள் உட்பட்ட குழுவிற்குத் தெரிவித்துள்ளார்.
“இந்தத் தவறைத் திரும்பவும் செய்ய வேண்டாம்” எனவும் அவர் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
பிரித்தானியாவின் ஆளும் கொன்சவேடிவ் கட்சியின் மாநாட்டிற்கு ஒக்ரோபர் முற்பகுதியில் வந்திருந்த இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சில தனிப்பட்ட சந்திப்புக்களை மேற்கொண்டு இருந்தார். இவர் லண்டனில் LTTE ஆதரவாளர்கள் உட்பட வெவ்வேறு தமிழ் குழுக்களைச் சந்தித்ததார்.
ரணில் விக்கிரமசிங்க லண்டனில் நின்ற போது லண்டன் வந்திருந்த தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜாவையும் தனித்து சந்தித்து இருந்தார்.
மாவை சேனாதிராஜா ரணில் விக்கிரமசிங்காவை சந்திப்பதற்கு முன்னதாக பிரிஎப் (BTF) தலைவர் ரூட் ரவி மற்றும் ராஜ்குமார் ஆகியோரையும் ஜிரிஎப் சுரேன் சுரேந்திரனையும் சந்தித்து இருந்தார்.
ரணில் தனது வெற்றிக்கான கணக்கில் சிறுபான்மை இனங்களின் முழுமையான ஆதரவு அவசியம் என்பதை தன்னைச் சந்தித்த மாவை சேனாதிராஜா உட்பட தமிழ் குழுக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்.
மாவை சேனாதிராஜவுடனான சந்திப்பு ஒக்ரோபர் 3 இல் சவுத்தோல் பகுதியில் உள்ள சட்டத்தரணி சிறிஹரனுடைய இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளைத் தலைவர் ரட்ணசிங்கமே மாவை சேனாதிராஜாவை இச்சந்திப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மாவை சேனாதிராஜா ரணிலுக்கான ஆதரவை தெரியப்படுத்தி இருந்த போதும் வெளிப்படையாக ரணிலை ஆதரிப்பதற்கான நிலைப்பாடு தமிழரசுக் கட்சிக்குளோ தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளோ இருப்பதாகத் தெரியவில்லை.
மாவை சேனாதிராஜா உடனான ரணிலின் சந்திப்பிற்குப் பின் சார்ள்ஸ் அன்ரனிதாஸ், டொக்டர் புவி, டொக்டர் சச்சி, டொக்டர் ஞானக்கோன் உட்பட ஒன்பது பேர் வரை கொண்ட குழுவை ரணில் சந்தித்தார்.
இக்குழுவில் இருந்த பெரும்பாலானவர்கள் எல்ரிரிஈ உடன் மிக நெருக்கமானவர்கள்.
இச்சந்திப்பிலேயே “வடபகுதியில் தேர்தலை பகிஸ்கரித்தபடியாலேயே தமிழ் மக்களுக்கு இந்த அழிவு ஏற்பட்டது” என ரணில் தெரிவித்து உள்ளார்.
பிரித்தானியாவின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் கலாநிதி றொஜர் ஏற்பாடு செய்த இச்சந்திப்பு ஒக்ரோபர் 3இல் நடைபெற்றது.
இச்சந்திப்பில் வெகு விரைவில் வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்ரிரிஈ 2005இல் வடக்கு கிழக்கில் தேர்தலை பகிஸ்கரித்ததன் மூலம் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அதனால் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ச பதவியேற்றார்.
இதனைச் சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க அவ்வாறான ஒரு சம்பவம் வருகின்ற தேர்தலில் இடம்பெறாமல் இருக்க எல்ரிரிஈ ஆதரவு அமைப்புகளின் ஆதரவை எதிர்பார்த்து உள்ளார்.
இச்சந்திப்பில் 7 அம்சத்திட்டத்தின் அடிப்படையிலேயே தாங்கள் கூட்டுமுன்னணி ஒன்றை அமைக்க உள்ளதாகவும் அதில் மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படும் என்றும் மாகாணங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் மாகாண சபைகளுக்கே வழங்கப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டம் தானா தமிழர்களுக்கான தீர்வு என்று கேள்வி எழுப்பப்பட்ட போது?
இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த கோரிவருகின்றன என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வட கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் பற்றி கேட்கப்பட்ட போது..அவை பிரிந்தே இருக்கும் எனவும் தேவையானால் இரு மாகாண சபைகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைத்து செயற்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் ரணில் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்கள் பற்றி கேட்கப்பட்ட போது.. அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து உள்ளார்.
ரணில் தனது லண்டன் விஜயத்தின் போது முன்னாள் பிரித்தானியாவுக்கான இலங்கைத் து}துவர் கிறிஸ் நோநிஸ் உடனும் இரகசியச் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
மிகச் செல்வச் செழிப்பு மிக்க வர்த்தகரான கிரிஸ் நோனிஸ் அமைச்சர் சஜித் வாஸ் குணவர்த்தனவினால் தாக்கப்பட்டதை அடுத்து தனது பதவியை ராஜினாமாச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ரணில் – நோநிஸ் சந்திப்பு லண்டனில் உள்ள ஹொட்டல் ஒன்றில் இடம்பெற்றது.