சிறிலங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது. போர்க்குற்றங்களும் ஒரே தன்மை கொண்டவையாக உள்ளன. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு சிங்களப் இராணுவம் குற்றவாளிகள் என்றால், லிபியாவில் நடந்த இனப்படுகொலை போர்க்குற்றங்களுக்கு, ஸ்ரீலங்கா அரசின் எஜமானர்களான நேட்டோ படைகள் குற்றவாளிகளாக இருந்துள்ளனர். கடாபிக்கு எதிராக போரிட்ட “கிளர்ச்சிக் குழு”, உண்மையில் நேட்டோப் படைகளின் கூலிப் படையாக செயற்பட்டது.
இலங்கையில், முள்ளிவாய்க்கால் சுற்றி வளைக்கப்பட்டு, அதற்குள் அகப்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். லிபியாவில் கடாபிக்கு ஆதரவான Sirte சுற்றிவளைக்கப் பட்டு, அதற்குள் அகப்பட்ட மக்கள் படுகொலை செய்யப் பட்டனர்.
ஈழத்தின் இறுதிப் போர் ஒரு கடற்கரைப் பிரதேசமான முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்ததைப் போன்று, லிபியாவின் இறுதிப் போரும் (Battle of Sirte), ஒரு கடற்கரையோரப் பிரதேசமான சிர்ட்டில் நடந்தது.
ஈழத்தில் சரணடையவிருந்த பிரபாகரன் கொலை செய்யப்பட்ட அதே பாணியில், லிபியாவில் சரணடையவிருந்த கடாபி கொல்லப் பட்டார். ஈழத்தில் பெண் போராளிகள், ஸ்ரீலங்கா இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப் பட்டனர். ஒரு ஊடகவியலாளராக பணியாற்றிய இசைப்பிரியாவின் கொலை, போர்க்குற்ற ஆவணமாக உலகை உலுக்கியது. அதே மாதிரி, லிபியாவிலும் நடந்துள்ளது.
கடாபியின் மெய்ப் பாதுகாவலர்களான பெண் இராணுவ வீரர்கள், நேட்டோப் படையின் கூலிப் படையினரால், கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். கடாபி பிடிபடுவதற்கு முன்னரே, அவர் தனது பெண் மெய்ப் பாதுகாவலர்களை, எங்காவது தப்பியோடுமாறு கலைத்து விட்டார். ஆனால், “லிபிய முள்ளிவாய்க்கால்” பகுதியில் இருந்தும் யாருமே உயிரோடு தப்ப முடியவில்லை.
கடாபியின் மெய்ப் பாதுகாவலர்களாக தெரிவு செய்யப்பட்ட நானூறு பெண்கள், சிறப்பு இராணுவப் பயிற்சி பெற்றிருந்தனர். உலகில் வேறெந்த நாட்டின் தலைவரும், பெண் மெய்ப்பாதுகாவலர்களை வைத்திருக்கவில்லை. அரபு ஆண்கள், பெண்களை சுடத் தயங்குவார்கள் என்பதாலேயே, கடாபி அவர்களை தெரிவு செய்ததாக சொல்லப் படுகின்றது.
அத்துடன், கடாபி தன்னை ஒரு பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும், பெண்ணியவாதியாக காட்டிக் கொள்ளும் நோக்கமும் இருந்தது. மேலும், கடாபியின் அழகிய மெய்ப்பாதுகாவலர்கள், உலகம் முழுவதும் ஊடகங்களின் விசேட கவனத்தைப் பெற்றனர்.
லிபியப் போர் முடிந்த பின்னர், கடாபியின் பெண் மெய்ப்பாதுகாவலர்களுக்கு என்ன நடந்தது?அது பற்றிய கவலை யாருக்கும் இருக்கவில்லை. ஆனால், லிபியாவின் புதிய ஆட்சியாளர்களும், கடாபியை வெறுக்கும் மேற்கத்திய ஊடகங்களும், பல வதந்திகளை கட்டவிழ்த்து விட்டன. பாலியல் வக்கிரம் கொண்ட வதந்திகளை பரபரப்பான செய்திகளாக வெளியிட்டன.
கடாபி தனது பெண் மெய்ப்பாதுகாவலர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, வன்புணர்ச்சி செய்ததாக கதைகளை கட்டி விட்டனர். அநேகமாக, அந்தத் தகவல்கள் எல்லாம், கடாபிக்கு எதிராக போரிட்ட, இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருந்தே வந்தன. பொதுவாகவே, பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க விரும்பும் பழமைவாதிகள், கடாபியின் பெண் மெய்ப்பாதுகாவலர்களை எவ்வாறு ஜீரணித்துக் கொள்வார்கள்?
லிபிய இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், கடாபியின் லிபரல் கலாச்சாரத்தை வெறுத்து வந்தனர். கடாபி தனது மெய்ப்பாதுகாவலர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வது போன்ற பல கதைகள், அவர்கள் மத்தியில் உலாவின. கடாபி ஆட்சி நடக்கும் பொழுதே, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் அந்தப் பெண் மெய்பாதுகாவலர்களை, “கடாபியின் விபச்சாரிகள்” என்ற பெயரில் அவமானப் படுத்தி வந்தனர்.
தற்போது, மேற்கத்திய ஊடகவியலாளர்களும் “கடாபியின் விபச்சாரிகள்” பற்றிய கதைகளை வாங்கி, சர்வதேச மட்டத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அண்மையில், BBC தொலைக்காட்சி, இன்னும் ஒரு படி மேலே சென்று, பழமைவாதிகளின் பெண்களுக்கு எதிரான அவதூறுகளை தொகுத்து, ஒரு ஆவணப் படமாக தயாரித்துள்ளது. (Mad Dog: Gaddafi’s Secret World) இது தான், மேலைத்தேய ஜனநாயக நாடுகளின் “பெண் உரிமை.”
உண்மையில், கடாபியின் பெண் போராளிகளுக்கு என்ன நடந்தது? தனது ஆண் நண்பருடன் தப்பிச் செல்ல முயன்ற ஒருவர், கிளர்ச்சிப் படைகளால் கைது செய்யப் பட்டு, இருவரும் சுட்டுக் கொல்லப் பட்டனர். சில மெய்ப் பாதுகாவர்கள், மாறுவேடம் பூண்டு, மக்களோடு மக்களாக வெளியேற முயன்றார்கள். ஆனால், அவர்களும் அகப்பட்டுக் கொண்டனர். நேட்டோ தலைமையிலான கூலிப் படையினர், அந்த இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, சித்திரவதை செய்து கொன்றனர். அவர்களது சடலங்கள், புதர்களுக்குள் வீசப் பட்டு, நாட்கணக்காக அழுகி நாறின.
லிபியாவில், கடாபியின் பெண் மெய்ப்பாதுகாவலர்களுக்கு நடந்த கொடுமை ஒரு அப்பட்டமான போர்க்குற்றம் ஆகும். ஆனால், மேற்குலக நாடுகள், லிபிய போர்க்குற்றங்களை விசாரித்து, போர்க் குற்றவாளிகளை தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களை தப்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
“ஆபாசப்படம் பார்த்துகொண்டே சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய கடாபி”, “கடாபியின் இரகசிய உலகம் ஆவணப்படத்தால் அதிர்ச்சி” போன்ற உணர்ச்சிவசமான பரபரப்புச் செய்திகளை வெளியிடுவதன் மூலம், லிபிய போர்க்குற்றங்களில் இருந்து, உலக மக்களின் கவனத்தை திசை திருப்புகின்றன.
லிபிய போர்க்குற்றங்கள், சர்வதேச நீதிமன்றம் ஒன்றில் விசாரணைக்கு கொண்டு வரப் பட்டால், நேட்டோ படைகளின் பெயரும் கெட்டுப் போகும். ஏனென்றால், லிபியாவின் இறுதிப் போரில் நடந்த இனப் படுகொலைக்கு, நேட்டோப் படைகளும் பொறுப்பேற்க வேண்டி இருக்கும்.
‘காமக் கொடூரன் கடாபியின் கன்னி வேட்டை!’ – ஒரு BBC ஆபாசப் படம்!!
30-01-2013
ஆபாசப் படங்கள், ஆபாசக் கதைகள், இன்றைக்கும் உலகம் முழுவதும், அதிகளவில் விற்பனையாகும் பண்டங்களாக உள்ளன. சமூகத்தில் மதிப்புக்குரியதாக கருதப்படும், அல்லது அப்படி காட்டிக் கொள்ளும், « கௌரவமான » ஊடகங்கள் கூட அதற்கு விதி விலக்கல்ல.
‘ஆபாசப்படம் பார்த்துகொண்டே சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய கடாபி‘, ‘கடாபியின் இரகசிய உலகம் ஆவணப்படத்தால் அதிர்ச்சி’ என்று, மஞ்சள் பத்திரிகைகளுக்கு நிகராக, பாலியல் கதைகளை வெளியிடும் அளவிற்கு, நமது ‘ மதிப்புக்குரிய’ தமிழ் ஊடகங்களும் தரம் தாழ்ந்து போய் விட்டன. ‘கடாபி என்ற காமக் கொடூரனின் கன்னி வேட்டை’ பற்றிய கிளுகிளுப்பூட்டும் கதைகளை, ஆவணப் படமாக எடுத்து வெளியிடவுள்ள, BBC தொலைக்காட்சியே இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்றால், நமது தமிழ் ஊடகங்களை நோவதில் பயனில்லை.
பிரெஞ்சு எழுத்தாளரான Annick Cojean எழுதிய நூல் ஒன்றை (Gaddafi’s Harem) அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆவணப் படம் தயாரிக்கப் பட்டுள்ளது. அந்த நூல், கடந்த வருடமே வெளியான போதிலும், அது பலரை சென்றடையவில்லை. தற்போது.
‘பெரும் மதிப்புக்குரிய’ பிரிட்டிஷ் தொலைக்காட்சியான BBC, ‘சர்வதேச ஜொள்ளுப் பிரியர்கள் பார்த்து மகிழும் வண்ணம்,’ அதனை ஒரு ஆவணப் படமாக எடுத்துள்ளது. (Mad Dog: Gaddafi’s Secret World) அதனை ஒரு ஆவணப்படம் என்பதை விட, ஒரு ஆபாசப்படம் என்பதே பொருந்தும்.
Gaddafi’s Harem நூலை எழுதிய Annick Cojean, தனக்கு கிடைத்த தகவல்களை ‘உறுதிப் படுத்துவதற்காக’ பிரான்சில் வாழும் ஒருவரிடம் விசாரித்து இருக்கிறார். அவர் யார் என்றால், கடாபியின் ஆட்சியை கவிழ்க்க போரிட்ட கிளர்ச்சிக் குழுவின் உறுப்பினர். (இந்த தகவலை சம்பந்தப் பட்ட எழுத்தாளரே, ஒரு பத்திரிகை பேட்டியில் கூறி இருந்தார்.)
Annick Cojean, அதை விட இன்னொரு ஆதாரத்தையும் காட்டுகிறார். ஏற்கனவே, கடாபியினால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான, மேலைத்தேய பெண் பத்திரிகையாளர்களையும் தனக்குத் தெரியும் என்கிறார். லிபியாவில், கடாபியின் சர்வாதிகார ஆட்சியில் வாழ்ந்த பெண்களுக்குத் தான், தமக்கு நேர்ந்த கொடுமைகளை கூறும் தைரியம் இல்லை. சுதந்திரமான மேற்கு நாடுகளிலும் நிலைமை அப்படியா? எதற்காக, மேலைத்தேய நாடுகளை சேர்ந்த பெண்கள், இதுவரை காலமும், தமக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லாமல், மௌனமாக இருந்தார்கள்?
பொதுவாக, பிற அரபு நாடுகளில் காண முடியாத பெண்களுக்கான சுதந்திரம், கடாபி ஆட்சி செய்த லிபியாவில் தாராளமாக இருந்தது. மேற்குலக பெண்களுக்கு நிகராக, லிபியப் பெண்களும் சுதந்திரத்தை அனுபவித்தார்கள். கடாபியின் புரட்சிக்குப் பின்னர், பெண்கள் உயர்கல்வி கற்று, உயர் பதவி வகிக்கும் வாய்ப்பைப் பெற்றனர். பல்கலைக்கழகங்களில் ஆண் மாணவர்களை விட, பெண் மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. இதையெல்லாம், கடாபிக்கு முந்திய மன்னராட்சிக் காலத்தில், நினைத்துக் கூட பார்க்க முடியாது.
பெண்களை வீட்டுக்கு வெளியே போக விடாத, பழமைவாத கலாச்சாரத்தில் ஊறிய அரபு நாடுகளின் மத்தியில், பெண்களை இராணுவத்தில் இணைத்துக் கொண்டதன் மூலம், கடாபி ஒரு பெரிய கலாச்சாரப் புரட்சியை உண்டாக்கி இருந்தார். கடாபியின் பெண் மெய்ப்பாதுகாவலர்கள் சர்வதேசப் புகழ் பெற்றனர். நிச்சயமாக, இஸ்லாமிய மதவாதிகள், பழைமைவாதிகள் அதையெல்லாம் விரும்பப் போவதில்லை.
தற்போது, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், பழமைவாதிகளும் ஆட்சி செய்யும் லிபியாவில், பெண்களின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப் படுகின்றன. கடாபியின் காலத்தில் பெண்கள் அனுபவித்த சுதந்திரத்தை, உரிமைகளை, இனிமேல் எந்தக் காலத்திலும் திரும்பப் பெற்று விடக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர். அது மட்டுமல்ல, ‘கிளுகிளுப்பூட்டும், கடாபியின் செக்ஸ் கதைகளை’ உலக மக்களுக்கு பிரச்சாரம் செய்வதன் மூலம், கடாபியின் புரட்சியை ஆதரிக்கும் மக்களுக்கு வாய்ப் பூட்டு போடப் படுகின்றது.
ஒரு திறமையான வியாபாரி, காலம், நேரம் பார்த்து விற்பனை செய்யத் தெரிந்து வைத்திருப்பான். இன்று லிபியாவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. லிபியாவின் தெற்குப் பகுதியில், கடாபிக்கு விசுவாசமான படைகள் இன்னமும் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன்னர், சகாராப் பாலைவனத்தை அண்டிய சபா நகரத்தில் உள்ள விமானத் தளத்தை தாக்கி அழித்து, அந்தப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். லிபிய அரசு, கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்காக விமானத் தாக்குதல் நடத்தி வருகின்றது. லிபியாவின் பிற பகுதிகளிலும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. நூற்றுக் கணக்கான ஆயுதக் குழுக்கள், தமக்குள் போரிட்டுக் கொண்டிருக்கின்றன.
லிபியா ஒரு தோல்வியுற்ற தேசம் அல்லது செயலாற்ற அரசாங்கத்தை கொண்டிருப்பதாக, வெளிநாட்டு இராஜதந்திரிகளே குறைப் படுகின்றனர். வெளியுலகில், அதைப் பற்றி எல்லாம் யார் கதைக்கிறார்கள்? அதைப் பற்றி யாருக்கு கவலை? ஆனால், கடாபியின் ஆபாசப் படம் வெளியாகிறது என்றவுடன், காய்ந்து போய்க் கிடந்த ஜொள்ளு மன்னர்கள், அந்த தகவலை தமக்குள் கிளுகிளுப்பாக பகிர்ந்து கொள்கின்றனர்.
என்ன இருந்தாலும், ஆபாசப் படங்கள், ஆபாசக் கதைகள், எந்தக் காலத்திலும் அமோகமாக விற்பனையாகும். அதன் மூலம், மக்களுக்கு கிடைக்க வேண்டிய, பிரயோசமான தகவல்களை இருட்டடிப்பு செய்ய முடியும். பாலியல் வேட்கை நிரம்பிய மக்களை காலம் முழுவதும் முட்டாள்களாக வைத்திருக்க முடியும்.
-கலையரசன்-