“சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் முரட்டு ஆட்சியாளர்கள் ஒருபக்கம், பெருகிவரும் பயங்கரவாதம் ஒரு பக்கம் என, உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அவர்களைத் தோற்கடிப்பதற்கான அமெரிக்காவின் முயற்சியில் அனைத்து நாடுகளும் இணைய வேண்டிய நேரம் இது” என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
நூற்று ஐம்பது நாடுகள் பங்கேற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில், தனது முதலாவது ஐ.நா. உரையைச் சற்று முன் நிகழ்த்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தனது ஜனாதிபதிப் பிரசாரத்தின்போது ஐ.நா.வை ‘செயற்படாத அமைப்பு’ என்று குறை கூறியிருந்த ட்ரம்ப், அதே ஐக்கிய நாடுகளின் அமர்விலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவரது உரையில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
“பயங்கர ஆபத்து நம்மைச் சூழ்ந்திருக்கும் நேரத்தில், மகத்தான ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டிய உன்னதமான நேரத்தில் நாம் அனைவரும் சந்தித்திருக்கிறோம்.
இந்த உலகத்தைப் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லப் போகிறோமோ அல்லது மீளத் திருத்தியமைக்க முடியாத ஒரு அதல பாதாளத்தில் தள்ளிவிடப் போகிறோமா என்பது நம் தீர்மானங்களைப் பொறுத்ததே.
“வடகொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் உலக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்கின்றன. இதை எதிர்க்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை அந்நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதித்திருப்பதை நான் பாராட்டுகிறேன்.
“அதேவேளை, அந்நாடுகள் தொடர்ந்தும் அமெரிக்காவையும் அதன் சார்பு நாடுகளையும் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தால், கிழக்காசியாவில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கி வந்தால், எனது நாட்டைக் காப்பாற்றுவதற்கு எந்த பதிலடியையும் கொடுக்கத் தயார். அதன்போது வடகொரியாவை நிர்மூலமாக்குவதைத் தவிர வேறெந்த வழியும் இருக்காது.”
இதன்போது, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை ‘ரொக்கெட் மேன்’ (ரொக்கெட் மனிதன்) என்று குறிப்பிட்ட ட்ரம்ப், அமெரிக்காவை அச்சுறுத்துவதாக நினைத்துக்கொண்டு அவர் தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.