அமெரிக்க மாணவரான ஓட்டோ வார்ம்பியர் வட கொரியாவிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்தபோது இருந்த அவருடைய நிலைமையைப் பற்றிய நெஞ்சை உலுக்கும் விவரங்களை அவரது பெற்றோர்கள் பகிர்ந்துள்ளனர்.
ஃபிரெட் மற்றும் சிண்டி வார்ம்பியர் ஆகியோர் ஃபோக்ஸ் அண்ட் ஃப்ரண்ட்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வட கொரியர்கள் தங்கள் மகனை திட்டமிட்டு சித்திரவதை செய்த பயங்கரவாதிகள் என்று கூறியுள்ளனர்.
ஓட்டோ வார்ம்பியர், வட கொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, தான் தங்கியிருந்த ஒரு விடுதியில் இருந்த பிரச்சார பதாகையை திருடியதாக 2016-ஆம் ஆண்டு பியாங்யாங்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். ஆனால் வீட்டிற்கு திரும்பிய சில நாட்களிலேயே உயிரிழந்தார்.
வார்ம்பியர் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வட கொரியா மறுத்து வந்துள்ளது.
அவர் சிறையில் இருந்தபோது ஒரு வகையான நச்சு பாக்டீரியா தொற்றால் ஏற்பட்ட உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருந்ததாக அந்நாடு கூறியது. ஆனால், அதற்கான அடையாளங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அமெரிக்க மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அவரது மரணத்திற்குப் பின்னர் அவரது பெற்றோர் ஒன்றுக்கு அளிக்கும் முதல் நேர்காணலில், ஓட்டோவின் நிலைமை பற்றிய உண்மையைச் சொல்வதற்கு சரியான நேரம் இதுதான் என்று தாங்கள் உணர்வதாக ஃபாக்ஸ் நியுஸ் செய்தித் தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர்.
ஓட்டோ “விழித்திருக்கும்போதும் செயல்பட முடியாத” நிலையில் இருப்பதாக முன்பு அமெரிக்க மருத்துவர்கள் கூறியதாகவும், அதைக் கோமா நிலை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் சிண்டி வார்ம்பியர் தெரிவித்தார்.
வீடு திரும்பிய தன் மகனைப் பார்த்தபோது, அவர் சுற்றித் திரிந்ததாகவும், கடுமையாக நடந்துகொண்டதாகவும், மனிதர்களின் இயல்புக்கு மாறான ஒலிகளை எழுப்பி ஊளையிட்டதாகவும் ஓட்டோவின் தந்தை ஃபிரெட் வார்ம்பியர் கூறினார்.
“அவரது தலை மொட்டையடிக்கப்பட்டு இருந்தது. அவர் பார்க்கும் இழந்திருந்தார். அவரது கைகள் மற்றும் கால்கள் முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்தன. மேலும் அவரது காலில் ஒரு பெரிய வடு இருந்தது,” என்றும் அவர் கூறினார்.
மேலும் சிலரால், ஒரு ஜோடி இடுக்கியை வைத்து அவரது கீழ் பற்களை மாற்றியமைத்தது போல இருந்ததாகவும் அவர் கூறினார்.
கொடுமைகள் விபத்தாக நடந்தவை அல்ல
கிம் ஜாம் உன் ஆட்சியில் ஓட்டோ முறையாகத் திட்டமிடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, வேண்டுமென்றே காயப்படுத்தப்பட்டதாகவும், இது தவறாகவோ தெரியாமலோ நடந்தவை அல்ல என்று ஃபிரெட் வார்ம்பியர் கூறினார்.
அவரது மகன் அவரது குடும்பத்தினர், நாடு மற்றும் உலகம் ஆகியவற்றால் கைவிடப்பட்டதாகவும், அரசாங்கம் அவரது மரணம் பற்றிய தகவலை கூட தங்களுக்கு வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஓட்டோ தங்கள் நாட்டில் இறப்பதை விரும்பாத காரணத்தினாலேயே வட கொரியா அவரை வீட்டுக்கு அனுப்பியது என்று ஓட்டோ வார்ம்பியரின் தாய் கூறினார்.
ஓட்டோ ஏற்கனவே அளவுக்கு அதிகமாக கொடுமைப்படுத்தபட்டு பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் நினைத்ததால் பிரேத பரிசோதனைக்கு அவர்கள் மறுத்துவிட்டனர்.
மக்கள் யாரும் வட கொரியாவிற்கு செல்ல வேண்டாம் என்றும் இது வட கொரியாவின் பிராசாரத்துடன் விளையாடுவதை போன்றது என்றும் அவர் கூறினார். அமெரிக்க குடிமக்கள் இப்போது வட கொரியாவிற்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அமெரிக்காவிலுள்ள ஒரு உள்ளூர் செய்தித்தாள் ஒன்று வார்ம்பியர் குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
சின்சினாட்டி என்கொய்ரர் என்ற அந்த செய்தித்தாள் ஓட்டோ வார்ம்பியரின் மருத்துவ அறிக்கையின் நகலில் ஓட்டோவின் உடலின் வெளிப்புறப் பரிசோதனை அடிப்படையில், அவரது உடலில் பல சிறிய வடுக்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் ஒன்றும் இல்லை என்றும் கூறியுள்ளது.
அந்த செய்தித்தாள் ஹாமில்டன் கவுண்டிக்கான பிரேத ஆய்வாளரின் அறிக்கையை மேற்கோள் காட்டி வார்ம்பியரின் பற்கள் இயற்கையானவை மற்றும் நல்லமுறையில் மறுசீரமைக்கப்பட்டவை என்றும் ஆக்ஸிஜனின் பற்றாக்குறையால் ஏற்பட்ட மூளைக் கோளாறு காரணமாக இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
டிரம்பின் ட்விட்டர் பதிவு
இந்நிகழ்ச்சியை பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இது ஒரு சிறந்த பேட்டி என்றும் மேலும் நம்ப முடியாத அளவுக்கு வட கொரியாவில் ஓட்டோ சித்திரவதை செய்யப்பட்டார் என்றும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய வாரங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் குற்றச்சாட்டுகளையும் அச்சுறுத்தல்களையும் நாடுகளும் பரிமாறிக் கொண்டிருக்கும் நிலையில் வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அதிகரித்துவரும் பதற்றங்களை தூண்டிவிடும் விதமாக அவரது இந்த கருத்து அமைந்துள்ளது
இரு நாட்டுத் தலைவர்களும் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்று நேரடியாக ஒருவரை ஒருவர் மிரட்டிக்கொண்டனர். அவர்களின் இந்த வார்த்தை போரைக் குறைத்துக் கொள்ளும்படி சர்வதேச சமூகம் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.