வட்டரக்க விஜித்த தேரரை கடத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் அதிரடி விசாரணை மேற்கொண்டதில் குறித்த தேரர் தனது உறவினர் ஒருவரை வைத்து இத்தகைய செயலை மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
இதற்கமைய பொய்யான முறைப்பாடொன்றை தாக்கல் செய்தமைக்காக வட்டரக்க தேரரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித்ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த 18 ஆம் திகதி இரவு வட்டரக விஜிததேரரை கடத்தி சென்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதுடன் இரு கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் தேரர் பண்டாரகமவில் வைத்து 19 ஆம் திகதி பண்டாரகம பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு அதிரடி விசாரணை மேற்கொண்ட பொலிஸ் அத்தியட்சர் ருவான் வெதசிங்க தலைமையிலான கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கடந்த 20 ஆம் திகதியான வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வட்டரக்க விஜித தேரரிடம் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொண்டனர்.
குறித்த வாக்கு மூலத்தில் வட்டரக விஜித தேரர்,
மாலம்பே அரங்கல பகுதியில் தனது உறவினரின் வீட்டில்தான் தங்கியிருந்த தனது உறவினர் ஒருவருடன் மாலம்பேயிலிருந்து கொழும்பு நோக்கி லொறியொன்றில் பயணித்த வேளை தலாஹேன பிரதேசத்தில் வைத்து மாலை 7.30 மணியளவில் கிடைக்க பெற்ற தொலைபேசி அழைப்பிற்கு அமைவாக லொறியிலிருந்து இறங்கி குறித்த அழைப்பு விடுத்த நோவா ரக வேனில் ஏறிய போது தனக்கு அழைப்பு விடுத்த நபருக்கு பதிலாக இரண்டு பிக்குகளே உள்ளே இருந்தனர்.
அதன் பின்பு தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
தேரரின் வாக்கு மூலத்தை அடிப்படையாக வைத்து பொது இடங்கள், பெற்றோல் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள சீ.சீ.ரிவி கெமராவினூடாக பார்வையிட்ட போது நோவா ரக வாகனங்கள் அப்பகுதியினூடாக பயணிக்கவில்லையென தெரிய வந்தது.
இதே போன்று தேரரின் வாக்குமூலத்தின் அமைவாக தேரரின் தொலைபேசிக்கு கிடைக்கப்பெற்ற அழைப்புக்களை பரிசோதித்த வேளையில் குறித்த நேரத்தில் எத்தகைய அழைப்புக்களும் கிடைக்கப்பெற வில்லையென தெரிய வந்தது.
இதன்படி சீ.சீரிவி. கெமராவில் கடந்த 19 ஆம் திகதி அதிகாலை 2.30 மணிக்கு குறித்த பகுதியால் லொறி செல்லவில்லை அவரது உறவினரின் வேனோன்றே பயணித்துள்ளது. குறித்த கமரா பதிவுகளை அவரது உறவு முறை சகோதரரிடம் காண்பித்த போது அவர் இதன் உண்மையான சம்பவத்தை குறிப்பிட்டார்.
இதற்கமைய வட்டரக்க தேரரின் வேண்டுகோளின் பிரகாரமே தான் இவ்வாறு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் வட்டரக தேரர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதனால் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தமை மற்றும் பொய்யான முறைப்பாடினை தாக்கல் செய்தமை தொடர்பாக வழக்கு தொடர்ந்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.