வடக்கில் அரச மற்றும் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள முப்படைகளும் இந்த வருட இறுதிக்குள் வடக்கிலிருந்து வெளியேறவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானம், வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (09) நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆதரவும் தெரிவிக்காமல், மக்களின் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் காணி பிரச்சினைகள் தொடர்பிலான விசேட அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் வியாழக்கிழமை (09) இடம்பெற்றது.
இதன்போது, வடமாகாணத்தில் தனியார்களின் மற்றும் அரச காணிகளில் நிலைகொண்டுள்ள தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன இந்த வருட இறுதிக்குள் வெளியேற வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், 13 பிளஸ்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபையின் கீழுள்ள காணிகள் தொடர்பிலான அதிகாரத்தை வடமாகாண சபைக்கு கீழ் வழங்குவதற்கு அரசாங்கம் ஆவண செய்ய வேண்டும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
புத்தரும் போவார்: சிவாஜிலிங்கம்
09-10-2014
வடக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேறினால் புத்தரும் அவர்கள் கூடவே சென்றுவிடுவார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாண காணி பிரச்சினைகள் தொடர்பிலான விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபை கட்டிட தொகுதியில் வியாழக்கிழமை (09) நடைபெற்றது.
இதில் முப்படைகளும் வடக்கிலிருந்து இவ்வருட இறுதிக்குள் வெளியேற வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
பொதுமக்களின் காணிகளில் இராணுவத்தினர் இராணுவ முகாம் அமைத்து இருக்கும் போது, புத்தர் சிலையொன்றையும் அதில் நிறுவி வழிபாடுகள் செய்து வந்தனர்.
தொடர்ந்து, இராணுவ முகாம் அகற்றப்படும் போது வழிபாட்டிற்காக வைத்திருந்த புத்தர் சிலையையும் கையோடு எடுத்து சென்றனர். அந்தவகையில், வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறும் போதும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் 67,000 ஏக்கர் காணி’
09-10-2014
வட மாகாணத்தில் 67 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வியாழக்கிழமை (09) தெரிவித்தார்.
வடமாகாண காணிப்பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் வியாழக்கிழமை (09) இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
2009ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இருந்து இன்று வரை முப்படைகளாலும் வடமாகாணத்தில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன.
இதனால், பலர் காணிகள் இல்லாமல் இருக்கின்றனர். அத்துடன், காணிகள் இல்லாதவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு காணிகள் இல்லை. அவை இராணுவத்தின் வசமிருக்கின்றது.
காணியின் உரிமை அந்தந்த மாகாணங்களிற்கு உண்டு. ஆகவே அந்தந்த மாகாணங்களிற்கு காணி உரிமைகள் வழங்கப்படுவதன் ஊடாக காணி இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யலாம் என்று தெரிவித்தார்.
மேலும் அடுத்த வடமாகாண சபை அமர்வு எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் என அவைத்தலைவர் அறிவித்தார்.
ஜெ.வுக்காக 100 பேர் இறந்ததில் உண்மை என்ன?: இது திமுக பிரமுகரின் ‘திடுக்’ தகவல்