வவுனியாவில் மரம் கடத்திச் சென்ற ஹன்ரர் ரக வாகனத்தை விசேட அதிரடிப்படையினரும், வன இலாகா அதிகாரிகளும் விரட்டிச் சென்ற போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
ஓமந்தை, குஞ்சுக்குளம் பகுதியில் இருந்து பெறுமதியான மரங்களை ஏற்றிச் சென்ற மூடிய நிலையில் உள்ள ஹன்ரர் ரக வாகனம் வவுனியா நகரம் நோக்கி பயணித்த போது பெரியமுடு பகுதி விசேட அதிரடிப்படையினரும், வனஇலாகா அதிகாரிகளும் குறித்த வாகனத்தை மறித்து சோதனையிட முயன்றுள்ளனர்.
இதன்போது குறித்த வாகனம் நிறுத்தப்படாது தப்பிச் சென்றுள்ளது. விசேட அதிரடிப்படையினரும், ஓமந்தை வன இலாகா அதிகாரிகளும் குறித்த வாகனத்தை பின்தொடர்ந்து துரத்திய நிலையில், வவுனியா, பேயாடிகூழாங்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட குறித்த வாகனம் அப் பகுதியில் விபத்துக்குள்ளாகி தடம் புரண்டது.
சாரதியும், அதில் பயணித்தவர்களும் தப்பியோடிய நிலையில் வாகனமும் அதில் இருந்த பெறுமதியான மரங்களும் விசேட அதிரடிப்படையினராலும், ஓமந்தை மற்றும் வவுனியா வனஇலாகா அதிகாரிகளாலும் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.