”2014 ஆம் ஆண்டு மலேஷியாவுக்கு சாபக் கேடான ஆண்டாக அமைந்துள்ளது” இவ்வாறு கடந்தவாரம் மலேஷிய பிரதமர் நஜீப் அப்துல் ரஸ்ஸாக் தெரிவித்திருந்தார்.
எம்.எச்.17 என்ற மலேஷிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று கடந்தவாரம் கிழக்கு உக்ரேன் பகுதியில் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியதையடுத்தே மலேஷிய பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
மலேஷிய பிரதமர் மட்டுமல்ல அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் விமான விபத்துக்கள் முழு உலகத்தையும் ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
2014 ஆம் ஆண்டு என்பது உலகத்தின் விமான சேவைகளுக்கு துரதிர்ஷ்டவசமான ஆண்டாக அமைந்துள்ளதா என்று எண்ணத்தோன்றும் வகையிலேயே அண்மைய விமான விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
நேற்று முன்தினம் அல்ஜீரியாவில் இடம்பெற்ற விமான விபத்துடன் பலர் அதிர்ச்சி வெளியிட்டுவருகின்றனர். உலகத்தில் என்ன நடக்கின்றது? விமானங்களுக்கு என்ன நடக்கின்றன ? தொடர்ச்சியாக கோரவிபத்துக்கள் எவ்வாறு இடம்பெறுகின்றன ? என்ற வாசகங்களையே சமூக வலைத்தளங்களில் காணமுடிகின்றது.
பல்வேறு நாடுகளுக்கு செல்லும் நோக்கில் பயணிகள் பல கனவுகளுடனேயே விமானப் பயணங்களை மேற்கொள்கின்றனர். மற்றுமொரு நாட்டின் மண்ணை மிதிக்கும் எதிர்பார்ப்புடனேயே பயணிகள் செல்கின்றனர். கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதி காணாமல் போன மலேஷிய விமானத்தில் 239 பேர் இருந்தனர்.
அதன் பின்னர் கிழக்கு உக்ரேனில் தாக்குதலுக்கு உள்ளான மலேஷிய விமானத்தில் 298 பேர் உயிரிழந்தனர். கடந்த புதன்கிழமை தாய்வானில் அவசரமாக தறையிறக்கப்பட்ட விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 51 பேர் பலியானார்கள். இறுதியாக அல்ஜீரியாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நவீன தொழில்நுட்பங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற காலகட்டத்தில் விமானப் பயணங்களும் அதிநவீன தொழில்நுட்பவசதிகளுடனேயே இடம்பெறுகின்றன. ஆனாலும் அவை எல்லாவற்றையும் மீறி இந்த விபத்துக்கள் இடம்பெற்றுவிடுகின்றன.
கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் மலேஷியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து பீஜிங் நோக்கி பயணத்தை ஆரம்பித்த மலேஷிய விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச். 370 விமானம் வியட்னாம் எல்லைப் பகுதியில் வைத்து காணாமல் போனது.
அந்த விமானத்துக்கு என்ன நடந்தது என்பதற்கு இதுவரை பதில் கிடைக்காமலேயே உள்ளது. விமானத்தை தேடும் பணிகளில் அதி நவீன முறைகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் விமானத்துக்கு என்ன நடந்தது என்பதனை அறிய முடியவில்லை.
பிரிட்டனும் அவுஸ்திரேலியாவும் விமானத்தை தேடும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டன. எனினும் பலன் கிடைக்கவில்லை. அவுஸ்திரேலியா இந்து சமுத்திரத்தில் பாரிய தேடுதல்களை மேற்கொண்டபோதும் ஒரு துரும்பு கூட கிடைக்கவில்லை. அந்தவகையில் 239 பேருடன் சென்ற மலேஷியாவின் எம்.எச். 370 விமானத்துக்கு என்ன நடந்தது என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.
அதனையடுத்து இம்மாதம் 17 ஆம் திகதி நெதர்லாந்தின் அம்ஸ்டர்டேம் விமான நிலையத்திலிருந்து மலேஷியா நோக்கி பறந்து வந்த எம்.எச். 17 என்ற பயணிகள் விமானம் கிழக்கு உக்ரேன் பகுதியில் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியது. இதன்போது விமானத்தில் இருந்த 298 பேரும் பரிதாபகரமாக பலியாகினர்.
கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களினால் இந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக குற்றம் சாட்டப்படுவதுடன் உலக நாடுகள் இதற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளன. அந்தவகையில் கிழக்கு உக்ரேனின் வான் பகுதியில் விமானங்களை செலுத்தவேண்டாம் என்று தற்போது கூறப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த சம்பவத்தில் பரிதாபகரமான நிலையில் 298 உயிர்கள் காவு கொள்ளப்பட்டுவிட்டன. இதற்கு பின்னரும் இவ்வாறான கோர சம்பவங்கள் இடம்பெறாமல் நடவடிக்கை எடுக்கவேண்டியது சம்பந்தப்பட்ட தரப்பினரின் கடமையாகும். இது இவ்வாறு இருக்க கடந்த புதன்கிழமை தாய்வானில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 51 பேர் உயிரிழந்தனர்.
தாய்வானின் உள்ளூர் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று பெங்கு விமான நிலையத்தில் அவசரமாக தறையிறக்கப்பட்டபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த விமானம் அவசரமாக தறையிறக்கப்பட்டுள்ளதாகவும் அதன்போதே விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அல்ஜீரியாவின் ஏ.எச்.5017 என்ற விமானம் மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பசோவின் தலைநகர் ஒகடாகோவில் இருந்து அல்ஜியர்ஸ் நோக்கி பறந்தபோது காணாமல் போனது.
பின்னர் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. இதில் பயணித்த 116 பேரும் உயிரிழந்துள்ளனர். விமானம் கிளம்பிய 50 ஆவது நிமிடத்தில் ராடரில் இருந்து விமானம் மறைந்துவிட்டது. இதை அடுத்து அவசரகால நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் தங்கள் நாட்டில் கிடைத்திருப்பதாக மாலி அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் பார்க்கும்போது 2014 ஆம் ஆண்டு விமானப் பயணங்களுக்கு துரதிர்ஷ்டவசமான காலமோ என எண்ணத்தோன்றுகின்றது. இந்த மாதத்தில் மட்டும் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதுடன் இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.
பயணிகளை கதி கலங்க வைத்துள்ள இந்த விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப் பட்டு இதற்கு பின்னர் இவ்வாறான கோர விபத்துக்கள் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.