மட்டக்களப்பு, வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலைய சந்தியில் பஸ்தரிப்பு நிலையம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் முச்சக்கர வண்டி கள் நிறுத்தப்பட்டதனால் அப்பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரு சமூகத்தின ருக்கு இடையில் பெரும் முறுகல் நிலையும் பதற்றமும் ஏற்பட்டிருந்தது.
நேற்று முற்பகல் முதல் இரு சமூகத்தினருக் குமிடையில் 7 மணி நேரம் இடம்பெற்ற போராட்டமானது வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் தடை உத்தரவிற்கமைய முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலைய சந்தியை அண்மித்த பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பஸ் தரிப்பிடம் அமைப்பதற்காக நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (26) கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.
அடிக்கல் நடப்பட்ட இடத்தினை மணலினால் மூடி ஓட்டமாவடியைச் சேர்ந்த ஆட்டோ சாரதிகள் தமது ஆட்டோக்களை நிறுத்தியுள்ளனர். குறித்த பகுதி பஸ் தரிப்பு நிலையத்துக்கு ஒதுக்கப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அடையாளமிடப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் ஆட்டோக்கள் தரித்து நிற்க முடியாது என ஒரு சாரார் கூறியுள்ளனர். இதை ஆட்டோ சாரதிகள் ஏற்க மறுத்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் இரு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் கூடியதாலும் வாய்த்தர்க்கம் முற்றிப்போனதாலும் அங்கு பெரும் பதற்றநிலை ஏற்பட்பட்டது.
குறித்த இடத்திலிருந்து ஆட்டோக்களை அகற்றி பஸ் தரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடமளிக்குமாறு வீதியை மறித்து ஒரு சாரார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்துக்கு தடை ஏற்படாதவகையில் வீதியில் இருமருங்கிலும் கூடி நின்று போராட்டம் நடத்தப்பட்டது. நீண்ட நேரம் இந்த போராட்டம் நீடித்திருந்தது.
போராட்டம் நடைபெறும் போது அங்கு நின்ற தமிழ் இளைஞன் ஒருவர் மீது கல்வீச்சுத் தாக்குதலும் இடம்பெற்றது. இதையடுத்து கல் வீச்சுத் தாக்குதல் செய்தவரை கைதுசெய்யுமாறு கோசமிட்டு மீண்டும் வீதியை மறித்து போராட்டம் இடம்பெற்றது.
இதனால் மட்டக்களப்பு – திருமலை வீதியுடான போக்குவரத்து தடைப்பட்டது. பொலிஸார் மாற்றுப் பாதையுடாக வாகனங்களை நெறிப்படுத்தினர்.
இதேவேளை மேற்படி போராட்டம் தொடர்பில் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து நீதிமன்றமானது பஸ் தரிப்பிடத்தை அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்துவதற்கான தடை யுத்தரவை பிறப்பித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை வரை கட்டுமான வேலைகளை நிறுத்துமாறு வாழைச்சேனை மாவட்ட நீதிவான் ஏ.சி.ரிஷ்வான் உத்தரவிட்டதையடுத்து இருதரப்பினரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
குறித்த இடத்துக்கு வந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமந் யட்டவரஇரு சாராரையும் அழைத்து தங்கள் பக்கமுள்ள நியாயங்களை கேட்டறிந்தார்.
இங்கு பாராளுமன்ற உறுப்பனிர் சீ.யோகேஸ்வரன் தெரிவிக்கையில்,
– கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச செயலகப் பிரிவுக்குச் சொந்தமான குறித்த இடத்தில் பயணிகளின் நலன் கருதி கறுவாக்கேணி மக்களின் வேண்டுகோளுக்கு அமைய எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இரண்டு இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்திருந்தேன்.
இது தொடர்பாக பிரதேச செயலகத்தினதினால் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கோறளைப்பற்று பிரதேசசபை வாழைச்சேனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக அடிக்கல் நடப்பட்டது.
ஆனால் எங்களால் நாட்டப்பட்ட அடிக்கல் மூடப்பட்டு இந்த பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டது சட்டத்திற்கு முரணானது.
இது தொடர்பாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஆராயப்பட்டு மீண்டும் குறித்த இடத்தில் பஸ் தரிப்பிடம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் பிரதியமைச்சர் அமீர்அலி மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் பங்ககேற்றிருந்தனர்.
தற்போது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன். என்றார்.