“என்னையும், எனது குழந்தையையும் கொலை செய்வதாக திருமாவளவன் கட்சியினர் மிரட்டுகின்றனர்” என்று டிஜிபி ராமானுஜத்திடம் புகார் கொடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த இளம்பெண் கவிதா.
கோவை மாநகர் கணபதியைச் சேர்ந்தவர் கவிதா (34). இவர் டிஜிபி ராமானுஜத்தை சென்னையில் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் என்னுடன் தொடர்பில் இருந்தார்.
என்னைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியதால், அவரை நம்பி எனது கணவரை விவாகரத்து செய்தேன். இந்நிலையில், சாதியை காரணம் காட்டி என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவில் சில மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்திருந்தேன்.
திருமாவளவன் என்னுடன் தொடர்பில் இருந்த நேரத்தில் எனக்குச் சொந்தமான ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்தை ஜெயந்தி, கார்த்திக் ஆகியோருக்கு அதிகாரப் பத்திரம் எழுதிக் கொடுத்தேன்.
ஜெயந்தியும், கார்த்திக்கும் நகைக்கடை நடத்துவதாகவும், தற்போது பணத்துக்கு பிரச்னை இருப்பதால், சில நாட்கள் கழித்து முழு தொகையையும் கொடுப்பதாகவும் கூறினர்.
இதை நம்பி நானும் எழுதிக் கொடுத்தேன். ஆனால், கூறியபடி அவர்கள் எனக்குப் பணம் கொடுக்கவில்லை. இது குறித்து கேட்டால் என்னை மிரட்டுகின்றனர்.
திருமாவளவன் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு சில நாட்களுக்கு முன் கோவைக்கு வந்து என்னைச் சந்தித்தார். அப்போது, ‘திருமாவளவனுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
சொத்துக்கான முழு தொகையையும் பெற்றுக் கொண்டேன்’ என்று எழுதிக் கொடுக்கும்படி என்னை மிரட்டினார். இதற்கு மறுத்ததால் என்னையும், எனது 4 வயது பெண் குழந்தையையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்.
மேலும் ஜெயந்தி, கார்த்திக், சந்துரு, விஜயகுமார், ரேகா, சீனிவாசன் ஆகியோரும் என்னைத் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
திருமாவளவனை நம்பி எனது குடும்பத்தை இழந்துவிட்டேன். அவரது கட்சியினரை நம்பி எனது சொத்துகளையும் இழந்துவிட்டேன். இப்போது என்னையும், எனது குழந்தையையும் கொலை செய்ய திட்டமிடுகின்றனர்.
எனவே, எனக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும், மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளேன்” என்று கூறினார்.
இந்தப் புகார் தொடர்பாக நாம் வன்னியரசுவை தொடர்பு கொண்ட கேட்டபோது, “எங்கள் மீது கூறப்பட்டுள்ள புகார் பொய்யானது. மனநலம் பாதிக்கப்பட்டதால் அந்தப் பெண் இப்படி பேசுகிறார். கடந்த ஆண்டுகூட இது போன்ற பொய்ப் புகாரை அளித்திருந்தார். அதில் உண்மை இருந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.
அந்தப் பெண்ணுக்கும் தலைவருக்கும் (திருமாவளவன்) பெரிய அளவில் பரிச்சயம் இல்லை. ஒரே ஒரு விழாவில் ஒரேயொரு முறை அவரைப் பார்த்திருக்கிறார்.
அந்த பெண் ஒருவருக்கு நிலத்தை கிரயம் செய்து கொடுத்துவிட்டார். அதற்கு இப்போது கூடுதல் தொகை கேட்டு வருகிறார். அவ்வளவுதான் பிரச்னை” என்றார் வன்னியரசு.
கடந்த ஆண்டும் இதே கவிதா கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், “கோவை கவிதா தியேட்டர் உரிமையாளரின் மகளான எனக்கும் செந்தில் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம். அதன் பின்னர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன்.
குழந்தையை தத்தெடுப்பது தொடர்பாக டெல்லி சென்றபோது திருமாவளவனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்வதாக கூறியிருந்தார்.
கோவை ரேஸ்கோர்சில் உள்ள எனது வீட்டுக்கு வந்து செல்வார். பின்னர் சில காரணங்களைக் கூறி என்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறுகிறார்.
இதனால் நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன். மேலும் எனக்கு மிரட்டல்களும் வருகின்றன. எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது சொத்துகளை திருமாவளவனின் பெயரைக்கூறி விஜயகுமார், சீனிவாசன், கார்த்தி, ஜெயந்தி ஆகியோர் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது” என புகாரில் கூறியிருந்தார்.
பின்னர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப் பிரிவிலும், பாண்டிச்சேரி காவல் நிலையத்திலும், சென்னையில் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இரண்டு முறையும் இதே புகாரை கவிதா அளித்திருந்தார். இப்போது, மீண்டும் ஒரு ரவுன்ட் வரப்போகின்றன இந்தப் புகார்கள்!