புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழமையாக நடைபெறும் இவ்வழக்கு விசாரணைக்கு வருகைதரும் வித்தியாவின் தாயார் வழக்கு விசாரணை முடிவடைந்ததும் சந்தேக நபர்களின் உறவினர்கள் அங்கிருந்து விலகிச் செல்லும் வரையும் நீதிமன்ற வளாகத்திற்குள் காத்திருந்துவிட்டு, அவர்கள் சென்றதன் பின்னர் வீடு திரும்புவது வழமையாக இருந்தது.
இதே போன்று நேற்று நடைபெற்ற வழக்க விசாரணை முடிந்த பின்னரும் நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த வித்தியாவின் தாயார் நீண்ட நேரத்தின் பின்னர் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறியிருந்தார்.
இதன் போது கொலை வழக்கிச் சந்தேக நபர்களின் உறவினர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்து வெளியே வந்த வித்தியாவின் தாயாரை அங்கு காவல் கடமைகளில் நின்று கொண்டிருந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார்.
அங்கு அமைதியின்மை ஏற்படுவதை கண்டு சுதாகரித்துக் கொண்ட பொலிஸார் வித்தியாவின் தாயாரை மீண்டும் நீதிமன்ற வளாகத்திற்குள் அழைத்து வந்ததுடன், அவரை திட்டியவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறியிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பாக வித்தியாவின் தாயாரால் நீதிமன்ற உத்தியோகஸ்தர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.