சென்னை : பெங்களூரில் மூளைச்சாவு ஏற்பட்ட பெண்ணின் இதயம் சென்னையில் உள்ள நோயாளிக்கு பொருத்துவதற்காக விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.
ஆம்புலன்ஸ் மூலம் 7 நிமிடத்தில் மருத்துவமனைக்கு இதயம் கொண்டு செல்லப்பட்டது. பரபரப்பான நிமிடங்களாக நடந்த இந்த பயணத்தில் சென்னை போலீசார், விமான நிலைய அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்கள், விமான பைலட்கள் என பலரது ஒத்துழைப்பும் இருந்தது.
பெங்களூரில் கடந்த 1ம் தேதி நடந்த ஒரு சாலை விபத்தில் 32 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் படுகாயமடைந்தார். அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்தனர்.
ஆனாலும் அவருக்கு நேற்று மதியம் மூளைச்சாவு ஏற்பட்டது.அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து அவரது இதயம், கல்லீரல், கிட்னி, கண் மற்றும் தோல் ஆகியவற்றை எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர்.
சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மும்பையை சேர்ந்த ஒரு நோயாளிக்கு இதயம் தேவைப்பட்டது. அவருக்கு, மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் சரியானது என்பதை அறிந்த பெங்களூர் மருத்துவர்கள் சென்னை அடையாரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக, அந்த நோயாளி தயார் படுத்தப்பட்டார். இதயத்தை எப்படி சென்னைக்கு எடுத்து வருவது, எவ்வளவு நேரத்திற்குள் வருவது என்பது குறித்து சென்னை, பெங்களூர் மருத்துவர்கள் ஆலோசித்தனர்.
சென்னையிலிருந்து 4 பேர் அடங்கிய மருத்துவர்கள் குழுவை அதிகாலையிலேயே அனுப்புவது என்றும், காலை 7 மணிக்குள் இதயத்தை பெற்று உடனே சென்னை கொண்டு வருவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இதற்காக, அதிகாலையில் மருத்துவ குழுவினர் சென்னையிலிருந்து கிளம்பியவுடன் அங்கு அறுவை சிகிச்சையை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், காலையில் 5 நிமிடம் தாமதமானதால் மருத்துவர் குழு செல்ல முடியவில்லை. இதனால் மதியமே குழு பெங்களூர் செல்ல முடிந்தது. பின்னர் மதியம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் பாதுகாக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்ட இதயம் சென்னை மருத்துவ குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட குழு பெங்களூருவில் உள்ள 18 சிக்னல்களை போலீசார் உதவியுடன் கடந்தது. இதற்காக அனைத்து சாலைகளில் உள்ள சிக்னல்களும் கிரீன் சிக்னல்களாக மாற்றப்பட்டன.
பெங்களூரில் இதுபோல் நடப்பது இதுதான் முதல்முறை என்பதால் வழியெங்கும் பரபரப்பு நிலவியது. பொதுமக்கள் சாலையில் திரளாக நின்று வேடிக்கை பார்த்தனர்.
20 நிமிட பயணத்துக்கு பின் கெம்பே கவுடா விமான நிலையத்தில் மாலை 3.30 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானம் மூலம் கொண்டுவர முடிவு செய்திருந்தனர். விமானி பிரேம் ஆஸ்கர் மற்றும் அவரது விமான குழுவினர் தயாராக இருந்தனர்.
சரியாக 3.30க்கு பயணிகளை ஏற்றி புறப்படும் விமானம் இதயத்தை கொண்டு செல்ல இருந்ததால், அதில் பயணிக்க இருந்த 85 பேரும் முன்கூட்டியே தகவல் கொடுத்து 3.20 மணிக்கே விமானம் தயாராக இருந்தது.
இதயம் வந்தவுடன் 3.22க்கு புறப்பட்டது. 8 நிமிடத்துக்கு முன்பு புறப்பட்ட விமானத்தின் பயண நேரம் ஒரு மணி நேரம். ஆனால், அதிலும் விமானி நேரத்தை குறைத்து 6 நிமிடம் முன்னதாக 4.16க்கே சென்னை விமான நிலையத்தில் தரை இறக்கினார்.
சென்னையில் ஏற்கனவே போக்குவரத்து போலீசார் முன்கூட்டியே போக்குவரத்தை சரிசெய்து 4.15 மணி முதல் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்தை நிறுத்தி இருந்தனர்.
பின்னர் விமானத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இதயம் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு அடையாரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் நோயாளிக்கு பொருத்தும் பணியை மருத்துவர்கள் தொடங்கினர்.
தகவல் தருவதில் குழப்பம் தவித்துப்போன போலீசார்
சென்னைக்கு இதயத்தை கொண்டுவர பலரும் அவரவர்களால் முடிந்த அளவுக்கு நேரத்தை மிச்சப்படுத்தி உதவி புரிந்தாலும் சென்னை விமான நிலையத்துக்கு வந்த இதயத்தை சர்வதேச விமான நிலைய பாதை வழியாக மருத்துவ குழுவினர் கொண்டு வரவேண்டும் என்ற திட்டப்படி மருத்துவ குழுவினர் டாக்டர் பவுலின், ராஜி, கிருஷ்ண முரளி, சவுத்ரி ஆகியோர் குழு நேராக வாசலுக்கு வந்துவிட்டனர்.
ஆனால் போலீசாருக்கு வேறு திட்டம் கொடுக்கப்பட்டதால் விமானம் அருகில் ஆம்புலன்சை கொண்டு சென்று விட்டனர். இதற்காக விமான நிலயத்திலிருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கார்கோ பாதையில் சென்றனர்.
வாசலுக்கு வந்த மருத்துவ குழுவினர் ஆம்புலன்சை காணாமல் பதைத்து போய் கேட்க, பின்னர் போலீசார் ஆம்புலன்ஸை விமான நிலையத்திற்கு கொண்டுவந்தனர். இதனால் 4 நிமிடம் தாமதமானது.
பின்னர் ஆம்புலன்ஸ் டிரைவரின் சாமர்த்தியமான ஓட்டும் திறமையால் 14 கிலோ மீட்டர் தூரத்தை 7 நிமிடத்தில் கடந்து மருத்துவமனையை அடைந்தார்.