ஐதராபாத்தை சேர்ந்த எம்.பி.ஏ. மாணவி தனது நண்பருடன் வீடியோ போனில் பேசிக்கொண்டிருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஹனீஷா சவுத்ரி என்ற மாணவி எம்.பி.ஏ. படித்து வந்தார்.
இவர் நேற்று தக்ஷீத் படேல் என்ற நண்பருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஹனீஷா சவுத்ரி சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு சென்றது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த ஹனீஷா தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும் போதே தூக்கிட்டு தற்கொலையும் செய்து கொண்டார்.
இதனை பார்த்த தக்ஷீத் உடனடியாக ஹனீஷா தங்கியிருந்த விடுதிக்கு வந்து கதவை உடைத்தார். தூக்கில் தொங்கிய ஹனீஷாவை உடனடியாக கீழே இறக்கி மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்.
ஹனீஷாவை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மாணவி தற்கொலை குறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்