தேவையற்ற ஒன்றுக்காக முச்சக்கர வண்டி சாரதிக்கும் பால் விற்பனையாளருக்கு இடையே இடம்பெற்ற மோதலில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மேற்கு இந்தியாவின் ராஜஸ்தான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ராஜஸ்தான் பகுதியில் உள்ள சந்தையொன்றில், முச்சக்கர வண்டி சாரதியொருவர் தனது முச்சக்கர வண்டியை பாதையின் மறுபுறமாக திருப்ப முற்பட்டார்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் எதிரே வந்த பால் விற்பனையாளர் முச்சக்கர வண்டி சாரதியை திட்டியுள்ளார்.
பின்னர் பால் விற்பனையாளர் முச்சக்கர வண்டி சாரதியை தாக்க முற்பட்ட போது, அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.
பின்னர், பால் விற்பனையாளர் தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு முச்சக்கர வண்டி சாரதியை திட்டியுள்ளார்.
மீண்டும் கோபமடைந்த முச்சக்கர வண்டி சாரதி கூரிய ஆயுதமொன்றினால் பால் விற்பனையாளரை குத்த முயன்றுள்ளார்.
எனினும் அருகில் இருந்தவர்கள் இதனை தடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் பால் விற்பனையாளர் கீழே கிடந்த கொங்ரீட் துண்டு ஒன்றை எடுத்து முச்சக்கர வண்டி சாரதியின் தலையில் மீது எறிந்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த 36 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதுடைய பால் விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.