கடந்த 2011ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி பகுதியில் மூன்று நபர்கள் வெள்ளை வேன்களில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சியளிப்பதற்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள் தொடர்பான விவரங்கள் தன்வசம் இருப்பதாக மேர்வின் சில்வா (வலது) தெரிவித்திருந்தார்.
காணாமல் போயுள்ள என்.எ. பிரேமரத்ன, லக்ஷ்மன் பிடர் மற்றும் கான் பிரியஷாந்த ஆகியோர் சார்பில் அவர்களது உறவினர்கள் தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கிறஞர் நுவன் போபகே தெரிவித்தார்.
கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் வெள்ளை நிற வேன்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கடத்தல் சம்பவங்கள் தொடர்பான விவரங்கள் தன் வசம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கடந்த ஜனவரி மாதம் குற்ற புலனாய்வு தினைக்களத்திற்கு புகாரொன்றை சமர்ப்பித்திருந்தார்.
இவ்வாறான கடத்தல் சம்பவங்களுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பதிலளிக்க வேண்டுமென்றும் அவர் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
எனவே இந்த கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை அழைக்குமாறு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட வழக்கில் சாட்சியளிப்பதற்கு எதிர் வரும் நவம்பர் மாதம் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு உத்தரவிட்டது.