தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் வெள்ளத்தில் தத்தளித்து உயிருக்கு போராடிய நாயை அங்கிருந்த 4 பேர் மிகவும் ஆபத்தான வகையில் காப்பாற்றினர்.
ஹைதராபாத் நகரில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கிய கனமழை, தொடர்ந்து 5 மணி நேரமாக விடாமல் வெளுத்து வாங்கியது. வெளுத்து வாங்கிய மழையால் அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. மழை நீர் ஆர்ப்பரித்து ஓடும் ஆற்று நீர் போல ஓடி தாழ்வான பகுதிகளில் நிரப்பியது.
வாகனங்கள் மழை நீரில் செல்ல முடியாமல் திணறிப் போயின. தாழ்வான பகுதிகளில் இருந்த குடியிருப்புகள், அலுவலங்கள் அனைத்திலும் மழைநீர் புகுந்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்துப் போயினர்.
கடந்த மாதம் மும்பையில் பெய்த மழையைக் காட்டிலும் ஹைதராபாத்தில் ஒரே நாளில் அதிக அளவு மழை பெய்தது.
ஒரு ஆற்றில் அடித்து வரப்பட்ட நாய் உயிருக்கு போராடுவதை அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோர் பார்த்தனர். உடனே அவர்கள் மிகவும் சிரமப்பட்டு அந்த நாயை உயிருடன் மீட்டனர்.
கரணம் தப்பினாலும் மரணம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மனிதாபிமானத்துடன் இவர்கள் காப்பாற்றிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.