அவுஸ்திரேலிய அரசாங்கம் தற்காலிக பாதுகாப்பு விசாக்களை மீண்டும் அறிமுகப்படுத்த தயாராகிறது.
அகதி அந்தஸ்து நிரூபிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிரந்த விசாக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது தவறானதென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஏ.பி.சி. செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
தற்காலிக பாதுகாப்பு விசா வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் செனட் சபையில் முடக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் வருடமொன்றில் 2,773 விசாக்களை மாத்திரம் வழங்குவதெனத் தீர்மானித்திருந்தார்.
இந்தத் தீர்மானம் செல்லுபடியற்றதென உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்திருந்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டது தான் என அமைச்சர் மொரிசன் தெரிவித்தார். இந்தப் பிரச்சினையை சமாளிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதன் பிரகாரம், முன்னாள் பிரதமர் ஜோன் ஹொவார்ட்டின் ஆட்சிகாலத்தில் அமுலில் இருந்த தற்காலிக பாதுகாப்பு விசா நடைமுறையை மீண்டும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார்.
தற்காலிக பாதுகாப்பு விசாவைப் பெறும் ஒருவர், தமது அகதி அந்தஸ்து மீள்பரிசீலனை செய்யப்படும் வரையில் அவுஸ்திரேலியாவில் மூன்று வருடங்கள் தங்கியிருக்கலாம்.
எவ்வாறாயினும், இந்த தற்காலிக பாதுகாப்பு விசா நடைமுறையானது அகதிகளுக்கு உளவியல் ரீதியான தாக்கங்களை மேலும் அதிகரிக்கும் என பசுமைக்கட்சி மற்றும் அகதிகளுக்கான குழுக்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, அவுஸ்திரேலியாவின் கொள்கைகளில் மாற்றமில்லையென தெரிவித்துள்ள அந்நாட்டு அரசாங்கம், படகுகளில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் வருபவர்களுக்கு நிரந்தர வதிவிட விசாக்கள் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளது.