அசாமின் நகாவ் மாவட்டம் காசாமாரி பகுதியில், மாடு திருடியதான குற்றச்சாட்டில் கிராம மக்கள் இரண்டு இளைஞர்களை அடித்து கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இறந்துபோன இரண்டு இளைஞர்களும் முஸ்லீம்கள் என்பதால் அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.
கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் மேய்ச்சல் நிலத்தில் இருந்து மாடுகளை திருட்டுத்தனமாக ஓட்டிச் செல்லும் போது அவர்களை கையும்-களவுமாக பிடித்ததாக போலீசாரிடம் மக்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தபோது, கோபம் கொண்ட மக்கள் கும்பலால் மிகவும் மோசமாக தாக்கப்பட்ட நிலையில் இளைஞர்கள் இருந்ததாக, காவ் மாவட்ட காவல்துறை தலைவர் தப்ராப் உபத்யாய் கூறுகிறார்.
“சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலும், பலத்த காயமடைந்திருந்த அவர்களை காப்பாற்ற முடியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
காசிமாரியில் காவல்துறை சரகத்தில் இருந்து ஜஜோரி காவல்துறை சரகம் வரை, ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு மக்கள் கூட்டம் அவர்களை துரத்தித் துரத்தி அடித்திருக்கிறது.
உயிரிழந்தவர்கள் ஷினாகத் அபு ஹனீஃபா மற்றும் ரியாஜுதீன் அலி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த இருவரும் 20 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இதுபோன்ற நிகழ்வு இதுவரை அசாம் மாநிலத்தில் நடைபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருட முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இளைஞர்களை மக்கள் கும்பல் அடித்துக் கொன்றது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
கொல்லப்பட்டவர்களின் உறவினர்களின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தாலும், சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த விவகாரத்தில் பாரபட்சம் இன்றி விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் உறுதியளித்தார்.
பசு பாதுகாவல் அமைப்புடன் தொடர்புடைய எவரும், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களில், நகாவ் காவல்துறை சரகத்தில், மாடு திருட்டு தொடர்பான பல புகார்கள் வந்திருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.