கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்தின் உயிராக விளங்குவது பேச்சிப்பாறை அணை. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் மூலம் குமரி மாவட்டத்தில் இரு போக சாகுபடிகள் நடக்கிறது.
இந்த அணை1897-ம் ஆண்டு தொடங்கி 1906-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அணை கட்டி 111 ஆண்டுகள் ஆன பின்னரும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இது முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டது.
இதைக் கட்டியவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இன்ஜினீயர் ஹம்ப்ரே அலெக்ஸ்சாண்டர் மிஞ்சின். இவர் இங்கிலாந்து நாட்டின் ஐரீஸ் பகுதியில் கடந்த 1868-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி பிறந்துள்ளார்.
அலெக்ஸ்சாண்டர் மிஞ்சின் தந்தை ஜாண் வில்லியம் மிஞ்சின், ஊட்டியில் தேயிலைத் தோட்ட அதிகாரியாக பணியாற்றினார். அலெக்ஸ்சாண்டர் மிஞ்சின் இன்ஜினீயரிங் படித்து முடித்தவர்.
எனவே, மகனை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வில்லியம் மிஞ்சின் அழைத்து வந்தார். இந்தியா வந்ததும் மதுரையில் அரசாங்க இன்ஜினீயராக பணியில் சேர்ந்தார்.
அப்போது, தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை கட்டத் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கான திட்டமும் உருவானது. இதற்கு அலெக்ஸ்சாண்டர் மிஞ்சின் இன்ஜினீயராக நியமிக்கப்பட்டார். நாகர்கோவில் கலெக்டர் ஆபீஸ் அருகே அவருக்கு பங்களாவும் ஒதுக்கப்பட்டது.
அங்கிருந்து பேச்சிப்பாறை அணை கட்டுமானப் பணிகளைக் கவனித்துவந்தார். 1906-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டது.
மொத்த நீளம் 425.51. இதனால் குமரி மாவட்டத்தின் கடைவரம்பு நிலங்களும் பயன் அடைந்தன . இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாக இருந்தது. பின்பு 1964-ம் ஆண்டு மேலும் 6 அடிகள் அதிகப்படுத்திட முடிவுசெய்து 1969-ம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக உயர்த்தப்பட்டது.
பேச்சிப்பாறை அணையை உருவாக்கிய இன்ஜினீயர் ஹம்ப்ரே அலெக்ஸ்சாண்டர் மிஞ்சின் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் 1913-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி இறந்தார்.
அவர் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த திருவிதாங்கூர் மன்னர் அலெக்சஸ்சாண்டர் மிஞ்சின் உடலை பேச்சிப்பாறை அணைப் பகுதியிலேயே அரசு மரியாதையுடன் அடக்கம்செய்து, அந்த பகுதியில் கல்லறை கட்டவும் உத்தரவிட்டார்.
அதன்பேரில் அங்கு கல்லறை கட்டப்பட்டு இன்று நினைவுச் சின்னமாக காட்சியளிக்கிறது:
அணைக் கட்டுக்கு வேலைசெய்ய நெல்லை மாவட்டம் பணகுடி, வள்ளியூர்க்காரர்களும் கடுக்கரை மலை தாண்டிப்போய் வேலையில் சேர்ந்தார்கள்.
மிஞ்சின் என்பதை மக்கள் ”மூக்கன் துரை” என்று அழைத்தனர். அணை கட்டப் போன தெற்கு வள்ளியூர் அம்மச்சி கோயில் சின்ன பெருமாளும் மற்றும் அவரது உறவினர்களும் ஊருக்குதிரும்பி வந்து,
ஏற்கனவே தாங்கள் வணங்கி வந்த பேச்சியம்மன் சுடலை மாடசாமி கோவிலில் கூடுதல் பீடம் ஓன்று போட்டு மூக்கன் துரை மிஞ்சினையும் வழிபடத் தொடங்கினர்.
கொடை விழா எடுத்தனர்.
வெள்ளக்கார சாமி, மூக்கன் துரை சாமி என்றும் மக்கள் அழைக்கின்றனர். ஹம்ப்ரே அலெக்ஸ்சாண்டர் மிஞ்சினின் 150-வது பிறந்த நாள் விழா தற்போது குமரியில் விவசாயிகளால் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.