அண்டார்டிக்காவில் உள்ள `அமெரி’ பனியடுக்குப் பாறையில் இருந்து 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று ‘பிறந்துள்ளது’.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
புத்தகத்தில் வைத்த மயிலிறகு குட்டி போடுவது போல இது கற்பனை அல்ல. இந்த பனியடுக்குப் பாறை குட்டி போட்டிருப்பது உண்மை. ஆங்கிலத்தில் இதனை ‘கால்விங்’ என்கிறார்கள்.
பனியடுக்கின் மேற்பகுதிகளில் அடுத்தடுத்து பனிப்பொழிவு ஏற்பட்டு அதன் அளவு பெருக்கும்போது அதன் கீழ்ப் பகுதியில் ஒரு பெரும் பாறை பிரிந்து சென்று பெருங்கடலில் சேரும் நிகழ்வே பனியடுக்குப் பாறை குட்டி போடுதல் அல்லது கால்விங் என்று அழைக்கப்படுகிறபது.
சரி இதில் இப்போது என்ன அதிசயம் என்கிறீர்களா?
அன்டார்டிக்காவில் உள்ள மூன்றாவது பெரிய பனி அடுக்குப் பாறையான அமெரி 1960களுக்குப் பிறகு போட்ட குட்டிகளிலேயே தற்போது போட்டிருப்பது மிகப்பெரியது. இப்போது போட்டிருக்கும் இந்த பனிக்குட்டியின், அதாவது பிரிந்து சென்ற பனிப்பாறையின், அளவு 1,636 சதுர கி.மீ. ஆகும். இதற்கு டி28 என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இத்தனை பெரிய பனிப்பாறையால் எதிர்காலத்தில் கப்பல் போக்குவரத்துக்கு ஆபத்து ஏற்படும் என்றும் எனவே அது கண்காணிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
1960ல் அமெரி போட்ட பனிக் குட்டியின் அளவு என்ன தெரியுமா? 9 ஆயிரம் சதுர கி.மீ.
விஞ்ஞானிகளுக்கு இம்மாதிரியான நிகழ்வு நடைபெறும் என்று தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் தற்போது பிரிந்துள்ள பனிப் பாறைக்கு சற்று தள்ளி கிழக்கு திசையில் கண்காணித்து வந்தனர். அந்த பகுதி பனிப்படலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம் குழந்தையின் ஆடும் பற்கள் போன்று தோன்றியதால் அதற்கு `ஆடும் பல்` என்று பெயரிட்டிருந்தனர்.
“பருவநிலை மாற்றத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை கோடைக்காலத்தில் பனிப்பாறைகள் அதிகப்படியாக உருகி வந்தாலும், அமெரி பாறை சமநிலையுடன்தான் உள்ளது” என்று பெருங்கடல் சார்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்றின் ஆய்வாளர் ஃபிரிக்கர் தெரிவித்துள்ளார்.
“அண்டார்டிகா பனிப்பாறைகள் குறித்து நாம் கவலை கொள்ள வேண்டியிருந்தாலும் இந்த குறிப்பிட்ட பனிப்பாறைகள் குறித்து நாம் கவலை கொள்ள வேண்டாம்.” என ஃபிரிக்கர் தெரிவித்துள்ளார்.