வேலூரில் வீடு புகுந்து அண்டா திருடிய இளைஞரைப் பெண் ஒருவர் விரட்டிப்பிடித்தார். பொதுமக்கள் அந்த நபரைக் கம்பத்தில் கட்டிவைத்துத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரின் மனைவி வேளாங்கண்ணி. இவர், இன்று மதியம் தன்னுடைய வீட்டைப் பூட்டாமல் பக்கத்து வீட்டுக்குச் சென்றிருந்தார்.
அந்த நேரத்தில் வேளாங்கண்ணியின் வீட்டுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், அண்டா உள்ளிட்ட பாத்திரங்களைத் திருடி மூட்டைகட்டினார். பின்னர்,
எந்தவித பதற்றமும் இல்லாமல் சாவகாசமாக வீட்டிலிருந்து வெளியே வந்தார். இதைக் கவனித்த கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் நபர்,
வேளாங்கண்ணிக்குத் தகவல் கொடுத்தார். அந்தப் பெண் வேகவேகமாகப் பாய்ந்துவந்து வீடு புகுந்து திருடிய இளைஞரைப் பிடித்து குத்துவிட்டார்.
அப்பகுதி மக்களும் சூழ்ந்துகொண்டனர். பொருள்களைத் திருடிய இளைஞரை மின்கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாகத் தாக்கினர். தகவலறிந்ததும், வேலூர் வடக்குப் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இளைஞரை மீட்டனர்.
விசாரணையில் அந்த வாலிபர், வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த கலிஷா என்பது தெரியவந்தது. ஏற்கெனவே, சிறு சிறு திருட்டுச் சம்பவத்தில் கலிஷா ஈடுபட்டு பொதுமக்களால் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதும் தெரியவந்திருக்கிறது. பிடிபட்ட அந்த இளைஞரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.