அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 20 ஆண்டுகளைக் கடந்த ராஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ராஜிவ் கொலை வழக்கில் தமிழக அரசு தமக்கு உள்ள 161ஆவது பிரிவை பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்து விடும் என்றே கூறப்படுகிறது.
முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரே ராஜிவ் கொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட ஏழு தமிழ் கைதிகளாவர்.
அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழமையாக இருந்து வந்தது. எனினும் இதை எதிர்த்து 2008ஆம் ஆண்டு சுப்பிரமணியன் சுவாமியால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் குறித்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. 2008 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வழக்கு 9 வருடங்கள் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 16ஆம் திகதியே முடிவுக்கு வந்தது. தற்போது, மீண்டும் அண்ணா பிறந்தநாளில் சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.
முதல் கட்டமாக 30 ஆண்டுகள், 20 ஆண்டுகளை கடந்த சிறைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, 26 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் உள்ள சிலரும், ராஜிவ் கொலை வழக்கின் 7 தமிழர்கள் 25 ஆண்டுகாலமாக சிறையில் உள்ளனர். இவர்களுடன் 19 ஆண்டுகளைக் கடந்த சிலர் உட்பட 80 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் முந்தைய ஆட்சிகாலங்களைப் போல ஆயிரக்கணக்கான சிறைக் கைதிகளை விடுதலை செய்யவும் வாய்ப்பிருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.