நாடாளுமன்றத் தேர்தல் பொதுக்கூட்டத்துக்காக காஞ்சிக்கு வந்த கருணாநிதி, பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்துக்குச் சென்று கண்கலங்க பழைய நினைவுகளில் மூழ்கினார். அவர் பலமுறை வந்து சென்ற இடம்தான் அது என்றாலும் ஒவ்வொரு முறையும் அங்குள்ள பொருட்களையும் புகைப்படங்களையும் உற்று கவனிப்பார் கருணாநிதி.
அந்தளவுக்கு அண்ணா மீது அவருக்குப் பாசம்!
கருணாநிதி வருகை தர இருந்ததால், கடந்த 17-ம் தேதி மாலையில் அண்ணாவின் வீட்டைத் துடைத்து பளிச்சென மாற்றி இருந்தனர். சக்கர நாற்காலி ஏறும் அளவில் வாயில்கள் சரிசெய்யப்பட்டு, சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. ‘ஆரத்தி எடுக்கக் கூடாது.
கலைஞர் வரும்போது அமைதி காக்க வேண்டும்’ என்று காஞ்சிபுரம் நகர தி.மு.க. சார்பில் கட்டுப்பாடு விதித்து இருந்தனர். ஆனாலும், ஆர்வத்துடன் பலரும் ஆரத்தி தட்டுடன் வந்துவிட்டார்கள்.
தனது பிரசார வாகனத்தில் இருந்து மெதுவாக உள்ளே வந்தார் கருணாநிதி. அவருடன் வந்த துரைமுருகன், ஜெகத்ரட்சகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் உள்ளே வந்து காத்திருந்தனர். ராஜாத்தி அம்மாள் சக்கர நாற்காலியைப் பிடித்தவாறே பின்தொடர்ந்தார்.
அண்ணா வீட்டுக்குள் நுழையும்போது ஒவ்வொன்றையும் உற்றுக் கவனித்து வந்தார் கருணாநிதி. ஒவ்வொரு படங்களாகப் பார்த்துக்கொண்டே வந்தவர், அண்ணாவுடன் சேர்ந்து தான் இருக்கும் படங்களை கூடுதல் கவனத்துடன் அமைதியாக உற்றுப் பார்த்தார்.
அப்போது இருந்தே அண்ணா வீடு முழுக்க கனத்த அமைதி. சுற்றி இருந்தவர்கள் யாரும் அவரிடம் எதுவும் பேசவில்லை. அண்ணாவின் சிலை அருகே வந்ததும் மாவட்டச் செயலாளர் தா.மோ.
அன்பரசன் மாலையை எடுத்துக் கொடுக்க… அதை துரைமுருகனிடம் கொடுத்து அண்ணாவுக்கு அணிவிக்கச் செய்தார் கருணாநிதி. தட்டில் கொடுத்த உதிரிப்பூக்களை அண்ணாவின் சிலைக்கு கருணாநிதி தூவ… துரைமுருகனும், அதைத் தொடர்ந்து ராஜாத்தி அம்மாளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தலையைத் தாழ்த்திக்கொண்டு பழைய நினைவுகளில் மூழ்கினார். சிலையை உற்றுப்பார்த்துக்கொண்டே இருந்தார். சக்கர நாற்காலியைத் திருப்பியபோதும், கழுத்தைத் திருப்பி சற்று நேரம் அண்ணா சிலையை பார்த்துக்கொண்டிருந்தார்.
அவரை முன்னிறுத்தி ராஜாத்தி அம்மாள், துரைமுருகன், ஜெகத்ரட்சகன், த.மோ.அன்பரசன் ஆகியோர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். ஆனால், அதையெல்லாம் அவர் பெரிதாக விரும்பாமல், வீட்டின் மேற்புறமும் கீழ்புறமுமாக சுற்றிச் சுற்றி பார்த்துக்கொண்டிருந்தார்.
‘விகடனில் இருந்து வந்திருக்கிறார்கள். உங்களின் பழைய நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா எனக் கேட்கிறார்கள்?’ என உதவியாளர் சண்முகநாதன் கேட்க, மறுப்பு ஏதும் இல்லாமல் தலையசைத்தார் கருணாநிதி. அவரிடம் அரசியல் சாராத காஞ்சிபுரம் நினைவுகளைப் பற்றிய சில கேள்விகளை மட்டும் முன்வைத்தோம்.
”அண்ணா வீடு என்றாலே பழைய நினைவுகள் என்னென்ன ஞாபத்துக்கு வருகிறது?”
”அண்ணாவைப் பார்க்க தினசரி காஞ்சிபுரம் வந்ததும், இந்த வீட்டிலே அரசியல் பாடம் பயின்றதும், இங்கு தங்கியிருந்தவர்களைச் சந்தித்த நிகழ்வுகளை அசைபோடுவதும் எனக்கு மன ஆறுதல் தருகின்றது. ”
”அண்ணா வீட்டில் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகளாக எதைக் குறிப்பிடுவீர்கள்?”
”ஒன்றா, இரண்டா… எதைச் சொல்வது? தமிழகம் அல்லாது இந்திய அளவிலே நடந்த பல முக்கிய அரசியல் சம்பவங்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த அண்ணா வாழ்ந்த இல்லம்தானே இது?”
”இந்த வீட்டில் உங்களுக்கு நடந்த முக்கிய விருந்தோம்பல்?”
”அண்ணா வீட்டு விருந்தோம்பல் என்று சொன்னாலே, சொல்வதற்கு நிறைய இருக்கிறது. சென்னையிலே இருக்கிற எங்களையெல்லாம் அண்ணா தொலைபேசியில் அழைத்து, விருந்தளிப்பது வழக்கம்.
தொலைபேசியில் தொடர்புகொள்ள இயலாத நிலையிலும்கூட யாரையாவது அனுப்பி எங்களை அழைத்துவரச் சொல்வார். அண்ணாவின் கையால் எங்களுக்குப் பரிமாறியதும், அவருக்குப் பக்கத்திலே அமர்ந்து நண்பர்களுடன் மகிழ்ச்சியாக விருந்துண்டதும் என்றும் மறக்க முடியாதவை.”
”காஞ்சிபுரம் என்றதும் அண்ணாவை தவிர்த்து சட்டென உங்கள் நினைவுக்கு வரும் நபர் யார்?”
”சி.வி.ராஜகோபால். அண்ணாவின் பால்ய நண்பர். எனக்கும் நெருங்கிய நண்பர் அவர்.”
”சம்பத், கண்ணதாசன், எம்.ஜி.ஆர் போன்றவர்களுடன் இங்கே பழகி மகிழ்ந்திருப்பீர்கள். இவர்களுடன் நடந்த சுவையான சம்பவம்?”
”நான் அரசியல் பாடம் பயின்ற இந்த இல்லத்தில், நண்பர்களாக இருந்த அனைவருடனும் நெருக்கமாக பழகி மகிழ்ந்திருக்கின்றேன். அவர்களோடு பழகியதில் மறக்க முடியாத பல சுவையான சம்பவங்களும் உண்டு. சோகமான சம்பவங்களும் உண்டு.”
”காஞ்சிபுரம் என்றாலே நினைவுக்கு வரும் முக்கியமான சம்பவம் எது?”
”அண்ணா நடத்திய தமிழிசை விழாவுக்கு நான் காஞ்சிபுரம் வந்திருந்தேன். என்னோடு என்னுடைய மைத்துனர் சிதம்பரம் ஜெயராமனும் வந்திருந்தார். இந்த வீட்டில், அன்று முழுக்க என்னுடன் பல முக்கிய நிகழ்வுகளை அண்ணா ஆவலாக மனம்விட்டுப் பேசினார்.
அன்று முழுவதும் காஞ்சிபுரம் வீதிகளில் அண்ணாவுடனும் நண்பர்களுடனும் சுற்றித் திரிந்தோம். அன்றைய இரவு அண்ணா ஏற்பாடு செய்த இசை விழாவிலே கலந்துகொண்ட அந்த முக்கியமான நிகழ்வுகள் இன்றும் மறக்க முடியாதவை.”
– அந்த நினைவுகளுடன் சக்கர நாற்காலியை நகர்த்தச் சொல்கிறார் கருணாநிதி!
– பா.ஜெயவேல், படங்கள்: க.பாலாஜி