கேரளாவில் பெண் ஒருவர் சொத்துக்காக தனது கணவர் குடும்பத்தினரை விஷம் வைத்து கொன்ற சம்பவம் 14 வருடங்களுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரசேரி சேர்ந்த 47 வயது பெண் ஜோலி. சொத்துக்காக தனது கணவர் குடும்பத்தினரை விஷம் வைத்து கொன்றதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜோலிக்கு உதவியாக இருந்த மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜோலியின் கணவரின் சகோதரர் ரோஜோ கொடுத்த புகாரின் பேரில் 14 வருடங்களுக்கு பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2002 முதல் 2016-ம் ஆண்டு வரை ரோஜோவின் குடும்பத்தில் 6 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
முதலில் இயற்கை மரணம் என நினைத்த ரோஜோவுக்கு அடுத்தடுத்தது நடந்த மரணங்கள் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. 2016-ம் ஆண்டு இந்த சம்பவம் தொடர்பாக கோழிக்கோடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். காவல்துறையின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரோஜோவின் குடும்ப பின்னணி
தாமரசேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியையான அன்னமா – டாம் தாமஸ் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். ராய் தாமஸ், ரோஜோ தாமஸ். ராய் தாமஸின் மனைவி தான் ஜோலி. அன்னமா குடும்பத்தின் மூத்த மருமகள் இவர் தான். டாம் தாமஸின் சகோதரர் மகன் சாஜூ. சாஜூவின் மனைவி சிலி. அன்னமாவின் சகோதரர் மேத்தீவ். இந்த வீட்டில் அதிகாரமிக்க நபராக அன்னமா இருந்துள்ளார். குடும்ப பொறுப்புகள் அனைத்தையும் அவர் தான் கவனித்து வந்துள்ளார். அன்னமா சொல்படி தான் அங்கு எல்லாமே நடக்கும். அன்னமாவின் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது.
தொடர் மரணங்கள்!
இந்நிலையில் தான் 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி அன்னமா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். டாம் தாமஸ் மரணம் நடந்தது ஆகஸ்ட் 26-ம் தேதி, 2008-ம் ஆண்டு. ரோஜோவின் சகோதரர் ராய் 2011-ம் ஆண்டு இறந்துள்ளார். இந்த மூன்று மரணங்களின் போது ரோஜோவுக்கு எந்த சந்தேகங்கமும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அடுத்தடுத்த மரணங்கள் அன்னமாவின் சகோதரர் மேத்தீவ் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை மேத்தீவிடம் முறையிட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக மேத்தீவ் மட்டும் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பிப்ரவரி 24, 2014-ம் ஆண்டு மேத்தீவ் மரணமடைந்தார். அடுத்த மூன்று மாதத்தில் சாஜூவின் 2 வயது பெண் குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாள்கள் கழித்து உயிரிழந்தது.
மே 3, 2014-ம் ஆண்டு குழந்தை இறந்தது. இரண்டு வருடங்கள் கழித்து சாஜூவின் மனைவி சிலி பல் மருத்துவமனைக்கு சென்ற போது வாந்தி எடுத்துள்ளார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்துவிட்டார். இதன்பின்னர் இந்தக்குடும்பத்தில் மரணங்கள் நிகழவில்லை. விதவையான ஜோலியை, மனைவி இறந்த ஒரு வருடத்தில் சாஜூ திருமணம் செய்துக்கொள்கிறார்.
திருமணம்
இதனால் சந்தேகமடைந்த ரோஜோ 2016-ம் ஆண்டு இந்த சம்பவம் தொடர்பாக கோழிக்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சுமார் மூன்று வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தான் இறந்தவர்களின் உடலைத் தோண்டி பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதி கிடைத்தது.
புதைக்கப்பட்ட அனைவரது உடல்களும் தோண்டி வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் நடந்த பரிசோதனையில் இறந்த 6 பேரின் உடலில் விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்த வழக்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல் மாதிரிகளும் தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
முன்னுக்கு பின் முரணான தகவல்
இந்த வழக்கு விசாரணையின் போது ஜோலி அளித்த தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தான் ஒரு பொறியியல் பட்டதாரி என்.ஐ.டியில் விரிவுரையாளராக பணியாற்றுவதாக கூறியுள்ளார்.
ஆனால் ஜோலி வணிகவியல் தான் படித்துள்ளார். போன் கால்களை ஆய்வு செய்த போது பல மணிநேரம் சாஜூ மற்றும் ஜோலி பேசியது தெரியவந்துள்ளது. அனைத்து மரணங்களின் போது ஜோலி தான் இருந்துள்ளார். அவர் தான் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதுதான் காவல்துறையினருக்கு அவர் மீது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதன்காரணமாக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணங்கள்
அன்னமா தான் வீட்டின் அனைத்து பொறுப்புகளையும் கவனித்து வந்துள்ளார். ஜோலி வீட்டில் இருந்ததால் அவருக்கு எந்த வருமானமும் இல்லை. இதனால் ஜோலிக்கு தாழ்வு மணப்பான்மை ஏற்பட்டுள்ளது. வீட்டில் அனைத்து அதிகாரங்களும் அன்னமாவிடம் இருந்தது ஜோலியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இதன்காரணமாக அன்னமாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார். மட்டன் சூப் குடித்த போது அன்னமா வீட்டில் வாந்தி எடுத்துள்ளார். அப்போது ஜோலி மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். அக்கம்பக்கத்தினரின் உதவியோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டார்.
டாம் தாமஸ் தனது விவசாய நிலத்தை விற்று அதில் வந்த பணத்தை ஜோலியிடம் கொடுத்துவிட்டு இதற்கு மேல் எந்த பங்கும் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த ஜோலி, தனது மாமனார் டாம் தாமஸை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். வீட்டில் கிழங்கு சாப்பிட்ட தாமஸ் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். அப்போதும் வீட்டில் ஜோலி மட்டும் இருந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார்.
வீட்டில் மூத்த உறுப்பினர்கள் உயிரிழந்ததால் ஜோலி தனது விருப்பம் போல் வாழ்ந்து வந்துள்ளார். ஜோலியின் நட்பு வட்டம் அவரது கணவர் ராய் தாமஸுக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து ராய் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இது ஜோலியின் சுதந்திரத்தை பறிப்பது போன்று இருந்துள்ளது. அந்த வீட்டில் ராய் தாமஸ், ஜோலி மற்றும் அவரது மகள் மூவர் மட்டுமே வசித்து வந்துள்ளனர். சாப்பிட்டு முடித்துவிட்டு பாத்ரூம் சென்றவர் அங்கே வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.
பாத்ரூம் கதவுகள் மூடி இருந்ததால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக்கொண்டு அவரை வெளியில் மீட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார். ஜோலி முதலில் தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறினார். மருத்துவ அறிக்கையில் உடலில் விஷம் கலந்து இருந்தது தெரியவந்தது.
ராய் தாமஸ் மரணம் தொடர்பாக வெளியான மருத்துவ அறிக்கை அவரது மாமா மேத்தீவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் ஜோலியிடம் அடிக்கடி கேட்டுவந்துள்ளார். தனது அக்கா மற்றும் மாமா மரணத்திலும் மேத்தீவ்-க்கு சந்தேகம் ஏற்பட்டது.
மேத்தீவை தீர்த்துக்கட்டினால் எல்லாம் முடிந்துவிடும் இல்லையென்றால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அடுத்த கொலையை அரங்கேற்றியுள்ளார். இவரது வீட்டின் அருகாமையில் தான் மேத்தீவ் வசித்து வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத போது மேத்தீவ் வாந்தி எடுத்து மயங்கி கிடந்தார்.
ஜோலி கூறியதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே இறந்துவிட்டார். மேத்தீவ் மரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. அது சஸ்பென்ஸாகவே உள்ளது.
ஜோலிக்கு அவரது உறவினரான சாஜூ மீது ஒரு கண் இருந்துள்ளது. சாஜூ வேறுயாரும் இல்லை ஜோலியின் கணவர் ராய் தாமஸுன் சித்தப்பா மகன் தான். சாஜூ ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது அமைதியான சுபாவம் குறித்து அடிக்கடி புகழ்ந்து பேசிவந்துள்ளார். சாஜூ மனைவி மிகவும் அதிர்ஷ்டசாலி என கூறியுள்ளார். இந்நிலையில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சாஜூ, அவரது மனைவி சிலி மற்றும் 2 வயது குழந்தை ஆல்பைன் இவர்களுடன் ஜோலியும் சென்றுள்ளார்.
அங்கு ஏதோ உணவை சாப்பிட்ட குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குணமடையாததால் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மூன்று நாள்கள் கழித்து சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டது.
குழந்தை இறந்த சோகத்தில் சாஜூ மற்றும் அவரது மனைவி சிலி இருந்துள்ளார். இந்நிலையில் தாமரசேரியில் உறவினர் திருமணத்திற்கு ஜோலி மற்றும் சிலி சென்றனர். சாஜூவும் உடன் சென்றுள்ளார். சாஜூ சிகிச்சைக்காக பல் மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் சிலி, ஜோலி இருவரும் உடன் சென்றனர்.
சாஜூ மருத்துவரை பார்க்க உள்ளே சென்றுவிட்டார். ஜோலு மற்றும் சில்லி வெளியில் இருந்துள்ளனர். சிலியின் சகோதரர் மருத்துவமனை வந்து பார்த்தபோது சிலி, ஜோலியின் மடியில் மயங்கி கிடந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். இந்தத் தகவல்கள் அனைத்தும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தங்கத்தை பிரித்தெடுக்க சைனைடு!
இத்தனை கொலைகளையும் ஜோலி தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை என காவல்துறையினர் சந்தேகித்தனர். இதுதொடர்பாக விசாரித்ததில் ஜோலிக்கு உதவிய இரண்டு நபர்கள் குறித்து தெரியவந்தது. நகைக்கடையில் பணியாற்றும் மேத்தீவ் மற்றும் பிராஜி குமார் இருவரும் இந்த கொலைகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
இவர்கள் தான் தங்கத்தை பிரித்தெடுக்கும் சயனைடை ஜோலிக்கு கொடுத்துள்ளனர். இதனை உணவில் கலந்து கொடுத்து தான் இத்தனை கொலைகளையும் செய்ததாக காவல்துறையில் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கொலையில் சாஜூக்கு தொடர்பும் இருப்பதாக இதுவரை காவல்துறையினர் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஜோலியின் பூர்வீகம் இடுக்கி மாவட்டம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்கு சென்று தனது உறவினர்களை சந்தித்து வந்துள்ளார். ஜோலியின் தந்தை ஜோசப் தனது மகளின் செயல்கள் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை. தனது மகள் குடும்பத்தில் நிகழ்ந்த மரணங்கள் குறித்தும் அவர்களுக்கு சந்தேகம் எழவில்லை. ஜோலிக்கு சேர வேண்டிய சொத்துகள் பங்கீட்டு தரவில்லை. அவர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று மட்டும் தான் அவர்களுக்கு தெரிந்துள்ளது.
இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், “முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது. நல்ல வேளையாக அவர் கைது செய்யப்பட்டுவிட்டார். இன்னும் அவர் எத்தனை கொலைகளை செய்யத் திட்டமிட்டிருந்தார் என்பது விசாரணையில் தான் தெரியவரும்.
கணவர் உட்பட 5 பேருக்கு விஷம் கொடுத்ததை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்” என அதிர்ச்சியுடன் தெரிவித்தனர். ஜோலி மற்றும் 2 பேரை தாமரசேரி முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் 2 வாரங்கள் ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.