சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகவிருக்கிறார். இளவரசி பிப்ரவரி 5-ம் தேதி விடுதலை செய்யப்படுகிறார். இவர்களில் மற்றொரு நபரான சுதாகரன் விடுதலை மட்டும் இன்னும் உறுதியாகவில்லை.
“1995-ம் ஆண்டு சென்னையில் நடந்த அந்தத் திருமணம், தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது. அன்று அந்தத் திருமணத்தில் கதாநாயகனாக ஜொலித்த மாப்பிள்ளை, இன்று 10 கோடி ரூபாய் பணம் கட்ட முடியாமல் சிறைக்குள் பரிதவிக்கும் பரிதாபநிலை ஏற்பட்டிருக்கிறது.
அந்த மாப்பிள்ளைதான் சசிகலாவின் அக்கா மகனும், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுமான வி.சுதாகரன். ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கின் நான்காவது குற்றவாளி.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வர் மீது நடந்துவந்த சொத்துக்குவிப்பு வழக்கில், கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூர் தனி நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவைத் தவிர பிற மூவருக்கு 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது.
ஜெயலலிதா தரப்பு இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அதில் விடுதலையும் அடைந்தனர்.
இதை எதிர்த்து கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 14-ம் தேதி அளித்தது.
ஜெயலலிதா உயிரோடு அப்போது இல்லை என்பதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்குத் தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இதையெடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். நான்கு ஆண்டு சிறைத் தண்டனை வரும் பிப்ரவரி மாதத்தோடு முடிவடையவிருக்கிறது.
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இந்த வழக்கில் ஏற்கெனவே சிறையில் இருந்த நாள்களையும் கணக்கிட்டு அவர்களது விடுதலைக்கான தேதியை கர்நாடக சிறைத்துறை அறிவித்திருக்கிறது.
அதன்படி சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகவிருக்கிறார். இளவரசி பிப்ரவரி 5-ம் தேதி விடுதலை செய்யப்படுகிறார்.
ஆனால், இதில் மற்றொரு நபரான சுதாகரன் விடுதலை மட்டும் இன்னும் உறுதியாகவில்லை. சுதாகரன் நிலையை எண்ணி ‘உச்’ கொட்டுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பின்படி குற்றவாளிகள் மூவருக்கும் நான்கு ஆண்டு தண்டனையோடு அபராதத் தொகை 10 கோடி ரூபாயையும் நீதிமன்றத்தி்ல் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒருவேளை அபராதத் தொகையைக் கட்ட முடியாவிட்டால், மேலும் ஓர் ஆண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும், நீதிமன்றத்தில் கட்டப்படும் இந்த 10 கோடி ரூபாய்க்கான கணக்குகளையும் சம்பந்தப்பட்டவர்கள் முறைப்படி காட்ட வேண்டிய நெருக்கடியும் இருக்கிறது.
சுதாகரன் திருமணத்தில்
இதன்படி இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே சசிகலாவின் அபராதத் தொகையான 10 கோடி ரூபாயை அவரின் வழக்கறிஞர்கள் பெங்களூர் நீதிமன்றத்தில் கட்டினார்கள்.
அதன் பிறகு இளவரசிக்கான அபராதத் தொகையும் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. ஆனால், இதுவரை சுதாகரனுக்கான அபராதத் தொகை மட்டும் செலுத்தப்படவில்லை.
சுதாகரனின் மனைவி சத்தியலட்சுமி, நடிகர் சிவாஜி கணேசனின் மகள்வழிப் பேத்தி. தமிழகமே பிரமிக்கும் வகையில் இவர்களின் திருமணத்தை 1995-ம் ஆண்டு ஜெயலலிதா நடத்திவைத்தார்.
இப்போது சுதாகரன் சிறையில் இருப்பதற்கான காரணங்களில் அவரது ஆடம்பரத் திருமணமும் ஒன்று. குன்ஹாவின் தீர்ப்பில் அந்த திருமணத்துக்குச் செலவிடப்பட்ட தொகையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பல கோடியில் திருமணம் செய்த சுதாகரனின் நிலையோ இப்போது பரிதாபமாக இருக்கிறது.
சுதாகரனின் உடன் பிறந்தவர்கள் தற்போது அ.ம.மு.க பொதுச்செயலாளராக இருக்கும் டி.டி.வி.தினகரன் மற்றும் வி.பாஸ்கரன்.
இந்த இருவருமே சுதாகரன் குடும்பத்தினருடன் தொடர்பில்லாமல் இருக்கிறார்கள். ஒரு நேரத்தில் `சின்ன எம்.ஜி.ஆர்’ என்று தனக்குப் பட்டம் வைத்துக்கொண்டு பந்தாவாக வலம்வந்தார் சுதாகரன்.
இந்த ஆடம்பரத்தால்ல் அவரிடமிருந்த கரன்சியும் கரைந்துபோனது. இப்போது 10 கோடி அபராதம் செலுத்த முடியாமல் அவருடைய மனைவி சத்தியலட்சுமி திண்டாடிவருகிறார் என்கிறார்கள் சுதாகரனுக்கு நெருக்கமானவர்கள்.
தனது தாய் வீடான சிவாஜி குடும்பத்தினரிடம் கணவரின் அபராத் தொகையை கட்டுமாறு கேட்டிருக்கிறார். அவர்கள் தரப்பிலும் போதிய பணத்தைத் தயார் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
இளவரசி, சசிகலா, ஜெயலலிதா
சுதாகரனுக்கு நவம்பர் மாதமே அபராதத் தொகையைச் செலுத்தியிருந்தால், டிசம்பர் மாதமே அவர் விடுதலையாகியிருப்பார்.
காரணம், இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கில் 96-ம் ஆண்டு நுாறு நாள்களுக்கு மேல் சிறையில் இருந்திருக்கிறார் சுதாகரன்.
அந்த நாள்களையும் சிறைத்துறை கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்பதால், அவரது விடுதலையே முன்கூட்டியிருந்தது. ஆனால், இப்போது பணம் கட்ட முடியாமல் திண்டாடிவருவதால் விடுதலைக் காலம் வந்தும், சிறையைவிட்டு வர முடியாமல் தவிக்கிறார் சுதாகரன்.
சுதாகரனுக்குப் பண உதவி செய்ய சசிகலா குடும்பத்திலும் யாரும் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும், சிறைக்குள் சென்றது முதல் தனது குடும்பத்தினர் யாரும் சிறையில் வந்து தன்னைப் பார்க்க கூடாது என்று சுதாகரன் சொல்லியிருப்பதால், அவரின் மனைவி இதுவரை சிறைக்குச் சென்று பார்க்காமல் இருக்கிறார்.
சுதாகரனின் நிலை குறித்து சசிகலா தரப்பிடம் கேட்டால், “அவர் விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது. ஆரம்பம் முதலே அவர் சின்னம்மாவுக்கு ஒத்துவர மாட்டார்” என்று முடித்துக்கொள்கிறார்கள்.
சுதாகரனுக்கு 10 கோடி ரூபாய் பணத்தைக் கட்டுவார்களா அல்லது இன்னும் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்கப்போகிறாரா சுதாகரன் என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்.
விகடன் பரிந்துரைக்கும் மற்ற கட்டுரைகள்…