அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது நானும் பார்க்க சென்றேன். என்னாலும் அவரை பார்க்க முடியவில்லை என்று அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் கூறி உள்ளார்.
முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார்.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 72 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா எப்படியும் உயிர் பிழைத்து திரும்பி விடுவார் என்றே அ.தி.மு.க.வினரும் தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு ஏற்ற வகையிலேயே ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்திகள் வெளிவந்தன.
அவர் இட்லி சாப்பிட்டதாகவும், தன்னை சந்தித்து உடல்நிலை பற்றி விசாரித்த முக்கிய பிரமுகர்களை பார்த்து கை அசைத்ததாகவும் அவ்வப்போது சாதகமான தகவல்களே வெளியாகி கொண்டிருந்தன.
இதன் காரணமாக அ.தி.மு.க. தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்பட்டனர். தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு காத்துக்கிடந்த அ.தி.மு.க.வினரை உற்சாகப்படுத்தும் வகையில் கட்சி நிர்வாகிகளும் அமைச்சர்களும் அவ்வப்போது பேட்டியும் அளித்தனர். அப்போது அவர்கள் அனைவரும் அம்மாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதையெல்லாம் பொய்யாக்கும் விதத்தில் ஜெயலலிதாவின் உயிர் திடீரென பிரிந்தது. இது அ.தி.மு.க.வினரை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஜெயலலிதா மரணம் அடைந்தபோது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வெளியில் வந்ததும், இந்த பிரச்சினையை பூதாகரமாக கிளப்பினார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டை முதலில் கூறியவர். இதனை மையமாக வைத்தே தனி அணியாக ஆதரவாளர்களை திரட்டினார். ஜெயலலிதா மரணத்தில் நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸ்.சும் கடந்த மாதம் கை கோர்த்தனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால் விசாரணை இன்னும் தொடங்கவில்லை.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மர்மம் நீடித்து வரும் நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்பத்திரியில் இருந்த போது, ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று கூறியது எல்லாம் பொய். அவரை யாரும் பார்க்கக்கூட அனுமதிக்கப்படவில்லை. மக்களிடம் பொய் சொன்னதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் பொது மேடையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். திண்டுக்கல் சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. அவை தலைவர் மதுசூதனனும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக புதிய தகவல்களை நேற்று வெளியிட்டுள்ளார்.
தண்டையார்பேட்டையில் அ.தி.மு.க. வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜேஷ் தலைமையில் நடந்த தசரா விழாவில் கலந்து கொண்ட மதுசூதனன், இது தொடர்பாக அளித்த பேட்டி வருமாறு:-
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை, சசிகலா குடும்பத்தினர்தான் கொன்று விட்டனர். தசரா விழாவில் சூரனை வதம் செய்தது போல துர்க்கை அம்மன், சசிகலா குடும்பத்தினரையும் பழி வாங்குவார்.
ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இப்போதுதான் கூறியுள்ளார். இதனை நான் அன்றே தெரிவித்தேன்.
ஆஸ்பத்திரியில் அம்மா சிகிச்சை பெற்றபோது நானும் பார்க்க சென்றேன். என்னாலும் அவரை பார்க்க முடியவில்லை. இதனை வெளியில் வந்து நான் உடனடியாக தெரிவித்தேன்.
இதனை அப்போதே தி.மு.க. தலைவர் கருணாநிதி குறிப்பிட்டு, அ.தி.மு.க. அவைத் தலைவராலேயே ஜெயலலிதாவை பார்க்க முடியாத நிலை உள்ளது. மற்றவர்கள் எப்படி போய் பார்க்க முடியும்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
தசரா பண்டிகை முடிவதற்குள் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சட்டசபைக்குள் நுழைய முடியாது. அவர்களின் கதை முடிந்து விட்டது. இரட்டை இலை சின்னத்தை நாங்கள் பெற்ற பின்னர் அரசியலில் பல மாற்றங்கள் நிகழும்.
இந்த நிலையில் அ.தி.மு.க. உறுப்பினர் இல்லாத தினகரன் அ.தி.மு.க.வை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. 2011-ம் ஆண்டு கட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்ட தினகரனை பின்னர் ஜெயலலிதா கட்சியில் சேர்க்கவே இல்லை.
தினகரன் கட்சியை கைப்பற்ற நினைக்கிறார். எதற்காக அவர் இப்படி துடித்துக் கொண்டிருக்கிறார். ஆட்சியில் இருப்பவர்கள் மாதா மாதம் கப்பம் கட்ட வேண்டும் என்று நினைக்கிறாரா? கட்சி நிதி குடும்பத்துக்கு சேர வேண்டும் என்று எண்ணுகிறாரா? இப்படி பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே தினகரன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது எண்ணங்கள் ஒரு போதும் ஈடேறாது.
இவ்வாறு மதுசூதனன் கூறியுள்ளார்.