‘‘மக்களால் நான்… மக்களுக்காகவே நான்!’ – தேர்தல் மேடைகளில் மட்டுமல்ல.. பொது நிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதா சொல்லும் தாரக மந்திரம் இது.
அந்த வார்த்தையை சொன்ன அம்மா இனி இல்லை என தெரிந்தபோது கதறினார்கள் ஓட்டுப் போட்ட மக்களோ மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதார்கள்.
ஓட்டு வாங்கி மக்கள் பிரதிநிதிகளோ இந்த அளவுக்கு கண்ணீர் சிந்தவில்லை.
அப்போலோ தொடங்கி எம்.ஜி.ஆர் சமாதி வரையில் ஜெயலலிதாவை சுற்றி வளையம் அமைத்தது மன்னார்குடி. இது மக்கள் ஆட்சியா? மன்னார்குடி ஆட்சியா? என ஜெயலலிதாவின் சமாதி ஈரம் காய்வதற்குள் கதறல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன.
ஜெயலலிதாவை எட்டடி தூரத்தில் நின்று 60 டிகிரி கோணத்தில் உடலை வளைத்து வணக்கம் வைத்தவர்கள் எல்லாம் ஜெயலலிதாவின் உடலுக்கு அருகே நின்றபோது பழைய பவ்யம் இல்லை.
ஆனால் அவரது உடலை சுற்றி நின்ற சசிகலா உறவுகளிடம் ஏனோ கம்பீரம் தெரிந்தது. ஆட்சிக்கு கட்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லாதவர்கள் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவுகள் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
‘செயற்குழு உறுப்பினர்’ என்பதால் சசிகலா மட்டும் விதிவிலக்கு. அவரது உறவுகளுக்கு என்ன சம்மந்தம்? ஆனால் அவர்கள் ஜெயலலிதாவின் உடலை சுற்றி நிற்க… அமைச்சர்கள் படிக்கட்டுகளில் கிடந்தார்கள்.
ஜெயலலிதாவை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்வதில் அப்படி என்ன அவர்களுக்கு அக்கறை? பீரங்கி வண்டியில் சசிகலாவும் அவர்களின் உறவுகளும் எந்த புரோட்டோக்காலில் அமர வைக்கப்பட்டார்கள்?
இறுதி சடங்கில் கவர்னர், மத்திய அமைச்சர், முதல்வர் என்கிற முன் வரிசையில் சசிகலா உறவுகள் முன் நிறுத்தப்பட்டது எந்த அடிப்படையில்? இப்படி கட்சியினர் கேள்விகளை எழுப்பி கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை பீடத்துக்கு வந்த ஜெயலலிதாவுக்கு அவரோடு ஏற்கனவே நெருக்கமாக இருந்த சசிகலா எல்லாமும் ஆனார்.
1991-ம் ஆண்டு முதன்முறையாக ஆட்சியை பிடித்தபோது கட்சியிலும் ஆட்சி நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர் சசிகலா குடும்பத்தினர்.
உச்சபட்சமாக தன் குடும்பத்தின் வாரிசை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக்கி அழகு பார்த்தார் சசிகலா. அந்த வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம்தான் அந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதியது.
வழக்குகள் குவிந்தது. சிறையையே பார்க்காத ஜெயலலிதாவை சிறைக் கம்பிகளுக்கு பின்னால் தள்ளியது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு ஜெயலலிதா சொன்ன வாசகம் மிக முக்கியமானது. ‘‘கழகம் இந்த அளவுக்கு தோல்வியை சந்தித்தற்கு காரணம் என்னை சுற்றியிருந்தவர்கள்தான். என்ன நடக்கிறது என்பதை என்னிடம் சொல்லாமல் அவர்கள் மறைத்துவிட்டார்கள்.
இனி எந்தக் காலத்திலும் சசிகலாவோடு ஓட்டும் இல்லை, உறவும் இல்லை’’ என ஜெயலலிதாவிட்ட அறிக்கை அன்றைய செய்தித் தாள்களில் எட்டு காலம் ஆனது. அது எல்லாம் கொஞ்ச காலம்தான். மீண்டும் உறவுகள் கூடின.
இத்தனை வழக்குகள் பாய்ந்தும் இரண்டாவது முறை அல்ல; மூன்றாவது முறையும் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தார். ஏன்? 2011 மற்றும் 2016 என அடுத்தடுத்து ஆட்சியில் அமர்ந்து சாதனை நிகழ்த்தினார்.
ஜெயலலிதாவிற்கு இருந்த மக்கள் ஆதரவுதான் இப்படி அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திக் கொண்டே இருந்தது.
இந்த செல்வாக்கு சசிகலாவுக்கு இல்லை. அவர் வார்டில் நின்றுகூட தனியாக ஜெயிக்க முடியாது என்பதுதான் ரத்தத்தின் ரத்தங்கங்களுக்கு தெரியும்.
மன்னார்குடி தொகுதியில்கூட அ.தி.மு.க.வை ஜெயிக்க வைக்க முடியவில்லை மன்னார்குடி குடும்பத்தால் ஆனால் 2011 டிசம்பரில் இரண்டாவது முறையாக சசிகலா குடும்பம் கார்டனைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட பிறகும் மீண்டும் உள்ளே வர மட்டும் முடிகிறது. இந்த மந்திரம் வேறு யாருக்கும் கை கூடுவதில்லை.
தொண்டர்கள் விஷயத்தில் மிகவும் அக்கறையோடு நடந்து கொள்வார் ஜெயலலிதா.
ஆனால், கடைசி வரை அவர் விரும்பிய தொண்டர்களோடு அளவாள முடியாமலேயே போனதற்கு யார் காரணம்? அவரின் இறுதிப் பயணம் வரையில் இது தொடர்ந்ததே ஏன்?
செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் ஜெயலலிதா அட்மிட் ஆனபிறகு அவரோடு இருந்தது சசிகலா குடும்பம் மட்டும்தானே!
கவர்னர் வித்தியாசாகர் ராவ், மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் உட்பட யாரையுமே ஜெயலலிதாவை பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் ஜெயலலிதாவின் உடன் பிறந்த அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரைக்கூட ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை பார்க்கவிடவில்லை.
ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என்று அப்போலோ ஆஸ்பத்திரி முன்பு பல நாட்கள் காத்திருந்தார்களே கட்சியின் அடிமட்ட தொண்டர்கள், அவர்களுக்கு சிகிச்சை பெறும் தலைவியின் படத்தையாவது காட்ட விட்டார்களா?
அப்போலோவை சுற்றி அரண் அமைத்தவர்கள் மன்னார்குடி குடும்பம்தானே? அதை தட்டிக் கேட்டால் பதவிகள் போகும் என்பது கட்சியின் நிர்வாகிகளுக்கு தெரியாதா? அதற்கு நடமாடும் உதாரணமாக செங்கோட்டையன் இருக்கிறாரே!
‘நீர்சத்து குறைபாடு, காய்ச்சல்தான். ஒரு வாரத்தில் வீடு திரும்புவார்’ என சொன்னார்களே… என்ன ஆனது?
அதற்கு முந்தைய நாள் வரையில் கோட்டைக்கு சென்று தனது அன்றாட பணிகளை செய்து வந்தார் ஜெயலலிதா. அவரின் உடல்நிலை மீது சுற்றியிருந்தவர்கள் ஏன் அக்கறை காட்டவில்லை என்கிற கடைமட்ட தொண்டனின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை.
ஜெயலலிதா திடீரென்று நிலைகுலைந்து இந்த அளவுக்கு சிகிச்சை எடுத்த அவசியம் இதுவரை மர்மமாகவே உள்ளது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இதெல்லாம் கடைசி வரை தெரியாமலேயே போய்விட்டது.
சசிகலாவை பக்கத்திலேயே வைத்துக் கொண்ட ஜெயலலிதா, அவரின் கணவர் நடராஜனை மட்டும் கடைசி வரையில் கார்டன் பக்கமே ஜெயலலிதா சேர்க்கவில்லை.
சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு நிலையும் இதுதான். டாக்டர் வெங்கடேஷ், டி.டி.வி. தினகரன், பாஸ்கரன் என கட்சியில் ஒரு காலத்தில் கோலோச்சியவர்கள் அதன்பிறகு கார்டன் பக்கமே தலை வைக்கவில்லை.
ஆனால் அவர்கள்தான் ஜெயலலிதாவின் உடலை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த வந்தபோது சசிகலாவிடம்தானே ஆறுதல் சொல்ல முதலில் போனார்.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஓரம்கட்டப்பட்டது யாரால்? அல்லது தன்னையே தாழ்த்திக் கொண்டாரா முதல்வர். முதல்வரால்கூட ஜெயலலிதாவின் உடலுக்கு அருகில் நிற்கமுடியாமல் ராஜாஜி ஹாலின் நீண்ட படிக்கட்டுகளின் ஓரத்தில் ஒதுங்கி கிடந்தார்.
‘மக்களால் நான்… மக்களுக்காகவே நான்!’ என சொன்ன தலைவியை பார்க்க வந்த தொண்டர்களும் மக்களும் நூறடிக்கு அப்பால் ஜெயலலிதாவின் முகத்தைக்கூட பார்க்க முடியாத தூரத்தில் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
‘‘முதல்வராக இருந்தவரின் இறுதிச் சடங்கு இது. ஒன்னறை கோடி தொண்டர்களின் தலைவிக்கு நடந்த அஞ்சலி இது. சசிகலா வீட்டு குடும்ப நிகழ்ச்சி இல்லை இது’’ – இறுதி ஊர்வலத்தில் நடந்து வந்த கட்சியினரின் ஆதங்கம் இன்றோடு ஓயுமா?
ஜெயலலிதாவுக்கு இறுதிசடங்கு செய்தது யார்?
நேற்று (05.12.2016) இரவு 11.30 மணி அளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார். இன்று முழுவதும் ராஜாஜி அரங்கத்தில், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.
4.30 மணியளவில் ராஜாஜி அரங்கத்தில் இருந்து மெரினா கடற்கரை நோக்கி ஜெயலலிதா கொண்டு வரப்பட்டார்.
மாலை 6.00 மணிக்கு, அவரது உடல் மெரினா கடற்கரையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சமாதி அருகே அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது, சசிகலாவுடன் இறுதிச்சடங்குகள் செய்தவர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக்.ஜெயக்குமார்.