சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கொலை செய்யப்பட்டு அவரின் உடல் அமிலத்தில் கரைக்கப்பட்டதாக துருக்கி அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது.
சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்குக் கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி சென்றார்.
பிறகு அவர் திரும்பி வரவேயில்லை. இதையடுத்து ஜமால் கொலை செய்யப்பட்டுவிட்டதாகத் துருக்கி அறிவித்தது இதை அமெரிக்காவும் உறுதி செய்தது.
அதிலிருந்து துருக்கிக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. தங்கள் நாட்டில் நடைபெற்ற கொலையைக் கண்டுபிடித்து சவுதியின் சதியை வெளியில் கொண்டுவருவோம் என துருக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஜமால் கொலையில் உள்ள பல மர்மமான விஷயங்களைத் துருக்கி அரசும், அந்நாட்டு ஊடகங்களும் கண்டுபிடித்து தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
பின்னர் சவுதி தூதர் வீட்டுக்கு அருகில் உள்ள காட்டில் வீசப்பட்டது போன்ற பல்வேறு தகவல்களை வெளியிட்டது. இதனால் சவுதிக்கு மற்ற நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய செய்தியை வெளியிட்டுள்ளது துருக்கி.
முன்னதாக ஜமாலைக் கொலை செய்வதற்காக சவுதி மன்னரின் பாதுகாவலர்கள் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய 15 பேர் தனித் தனி விமானங்களில் துருக்கி வந்ததாகவும் ஜமால் கொலை செய்யப்பட்ட அன்றைய தினமே அவர்கள் அனைவரும் மீண்டும் நாடு திரும்பியதாகவும் துருக்கி அரசு தகவல் தெரிவித்திருந்தது.
பின்னர் ஜமால் கொலை செய்யப்பட்டதைக் கண்டறியும் நோக்கில் துருக்கியைச் சேர்ந்த பல புலனாய்வுத்துறை அதிகாரிகள் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதர் வீட்டை ஆய்வு செய்தனர்.
அவர் வீட்டில் உள்ள ஒரு கிணற்றில் ஜமாலின் சிறிய உடல் பாகங்கள் கிடைத்ததாகவும் செய்தி வெளியானது.
தற்போது அந்த உடல் பாகங்களை ஆய்வு செய்ததில் அதில் ஹைட்ரோஃபுளோரிக் அமிலம் இருந்ததாகவும் அது மனித உடலைக் கரைக்கும் தன்மை உடையது எனவும் கண்டறியப்பட்டுள்ளதாக துருக்கி ஊடகமான அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
ஜமாலின் உடல் கரைக்கப்பட்டு தூரர் வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டம், கிணறு ஆகியவற்றில் வீசப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜமால் கொலை விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து சவுதி தூதரகத்தில் பணியாற்றியவர்கள் அங்குள்ள சிசிடிவி கேமராவை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை உறுதி செய்ய சவுதி தூதரக அதிகாரியின் வீட்டை முழுமையாகச் சோதனையிட உத்தரவிட வேண்டும் என துருக்கி அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.