கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்கப் போர்க்கப்பலுக்குச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதனைச் சுற்றிப் பார்வையிட்டுள்ளார்.
அமெரிக்கக் கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் கட்டளைக் கப்பலான யுஎஸ்எஸ் புளூரிட்ஜ், நேற்றுமுன்தினம் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தது.
இந்தக் கப்பலுக்கு இன்று மதியம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவுடன் சென்று பார்வையிட்டார். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பும், இதன்போது உடனிருந்தார்.
சிறிலங்கா அதிபரை, அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற்படையணியின் கட்டளை அதிகாரி வைஸ் அடி்மிரல் ஓகொயின், யுஎஸ்எஸ் புளூரிட்ஜ் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் கைல் பி ஹிக்கின்ஸ் ஆகியோர் வரவேற்று, கப்பலைச் சுற்றிக் காண்பித்தனர்.
அத்துடன் அமெரிக்க கடற்படை அதிகாரிகளுடன் சிறிலங்கா அதிபர், கலந்துரையாடல் ஒன்றிலும் பங்கேற்றிருந்தார்.
கோவாவில் கட்டப்படும் கப்பல்களைப் பார்வையிட்டது சிறிலங்கா பாதுகாப்பு உயர்மட்டக் குழு
சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.
சிறிலங்கா கடற்படைக்காக இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை கோவாவில் உள்ள, கோவா சிப்பிங்யார்ட் நிறுவனம் கட்டி வருகிறது. கோவா தலைநகர் பனர்ஜியில் இருந்து 40.கி.மீ தொலைவில் இந்த கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ளது.
இங்கு கட்டப்படும் கப்பல்களைக் கட்டும் பணிகளைப் பார்வையிடுவதற்காக சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் நேற்று கோவா கப்பல் கட்டும் தளத்துக்குச் சென்றிருந்தனர்.
இந்தக் குழுவில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மற்றும் கடற்படை உயர் அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.