எங்களால் தான் புதிய ஆட்சி நடக்கின்றது. அரசாங்கம் எனது 5 சகோதரர்களையும் பொறுப்பெடுத்து அவர்கள் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என தாய் தந்தையை இழந்த இளம் பெண் நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியிடம் எடுத்துரைக்கும் போது கண்ணீர்விட்டு கதறினார்.
இதனை கேட்டு செயலணி உறுப்பினர்களும் கலந்து கொண்ட மக்களும் கண்ணீர் சிந்தியதுடன் பெண்ணை ஆறுதல் படுத்தினர்.
பூநகரியில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான கருத்தறியும் செயலணியிடம் 25 வயதுடைய இளம் பெண் தனது துன்ப நிலையை அவலத்தை எடுத்துரைக்கும் போதே இச் சூழல் உருவானது.
இது தொடர்பில் அப்பெண் குறிப்பிடுகையில், வன்னியில் இருந்தமையால் என்னை சந்தேகத்திற்கிடமாக கண்காணித்து வந்தனர்.
இறுதி யுத்தத்தின் போது எனது தாய் தந்தையை இழந்த நான் எனது 5 சகோதரர்களுடன் உறவினர்களூடாக முகாமிற்குச் சென்று பல துன்பங்கள் துயரங்களுக்கு மத்தியில் மீளக் குடியமர்ந்தோம்.
எனக்கு பின்பு ஐந்து சகோதரர்களும் இளையவர்கள் ஒவ்வொருவரும் சிறுசிறு வயதினர். கடைத்தம்பிக்கு தற்போது 7 வயது. முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது அப்பா அம்மா இறக்கும்போது அவனுக்கு நான்கு மாதங்கள். அவனுக்கு கண்ணில் பாதிப்பு உள்ளது. ஏனைய சகோதரர்களும் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உறவினர்களுடன் இருந்ததனால் எனது 5 சகோதரர்களில் கடைசித் தம்பி என்னை அம்மா என்றே கூப்பிடும் நிலையில் நான் உள்ளேன்.
தம்பி போரின் தாக்கத்தினால் கண் மற்றும் உறுப்புக்கள் பாதிப்படைந்த நிலையில் இருப்பதனால் மாதத்தில் இரண்டு மூன்று தடவை வைத்திய பரிசோதனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
அவ்வேளையில் ஏனைய சிறார்கள் பால் குடிப்பதைப் பார்த்துவிட்டு எனது தம்பியும் “அம்மா பால் தாங்கோ” என்று கேட்பான். அந்த வேளையில் நான் என் தாயாரை நினைத்து வருந்துவேன் என கதறி அழுதவர் இவ்வாறு பல துயரங்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்.
ஒவ்வொரு நிறுவனமும் சரி அரசியல்வாதிகளும் சரி அமைப்புக்களும் சரி தருகிறோம். இது தருகின்றோம் என்று வருவார்கள் ஆனால் எவையும் வந்து சேராது. இந்த நிலை மாறவேண்டும் எமது அவல வாழ்க்கைக்கு முடிவு வேண்டும் என்றார்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் எனது மகன் இணைந்திருந்தால் நான் நிம்மதியாக இருந்திருப்பேன்: காணாமல் ஆக்கப்பட்ட மகனின் தாய் கதறல்
04-08-2016
விடுதலைப் புலிகள் அமைப்பில் எனது மகன் இணைந்து இறந்திருந்தால் கூட நான் மனநிம்மதியாக இருந்திப்பேன் எனநல்லிணக்க பொறிமுறைக்கான செயலமர்வில் காணாமல் போன தாயார் கதறியழுததுடன் தனது மகனை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நல்லிணக்க பொறிமுறைக்கான செயலமர்வு நேற்றுமுன்தினம் பூநகரியில் நடைபெற்ற போதே இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு தெரிவிக்கையில்
எனது மகன் கொழும்பு கொட்டாஞ்சேனையில் 2008ஆம் ஆண்டு இரவு 9 மணியளவில் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டார். இதுதொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளிவந்தது.
மகனை காணாது எல்லா இடங்களிலும் முறையிட்டேன். இன்று தந்தைக்கு கடமை செய்யும் ஆடி அமாவாசை நாள் வரை என்னுடைய பிள்ளையைக் காணவில்லை.
நான்போகாத இடமில்லை. வராத இடமில்லை எனது கணவன் இறக்கும்போது மகனுக்கு 3 வயது. நான் பல கஷ்டங்களுடன் வளர்த்து வந்தேன். கஷ்டத்தின் நிமித்தம் கொழும்பில் வேலைக்கு சென்றபோது வெள்ளைவான் கடத்தியுள்ளது.
எனக்கு எனது மகன் வேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து அவன் இறந்திருந்தால் கூட எனக்கு நிம்மதியாக இருந்திருக்கும் என்றார்.
இதேவேளை 6 பிள்ளைகளின் தாய் ஒருவர் குறிப்பிடுகையில், 2009 ஆம் ஆண்டு 4 மாதம் 1 ஆம் திகதி கடுமையான பிரச்சினை. கஷ்டம். 100 கிராம் சீனி 1000 ரூபா விற்ற காலத்தில் கணவன் அம்பலவன் பொக்கனை கடலுக்கு தொழிலுக்கு சென்றபோது கடற்படையினர் கைது செய்தார்கள்.
இவருடன் ஏனைய படகுகளில் தொழில் செய்தவர்கள் சுமார் 6 பேர் வரை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 6ஆம் திகதி வானொலி ஒன்றில் குறித்த 6 பேர் பிடிபட்டமை தொடர்பாக பெயர் விபரங்களுடன் வந்தது. இவர்கள் கட்டைக்காடு வெற்றிலைக்கேணியில் கரை சேர்ந்ததாக விசேட செய்தியாக கூறப்பட்டது.
இவர் காணாமல் போனமை தொடர்பில் செஞ்சிலுவைச் சங்கம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம். எந்த பதிலும் இல்லை. எனக்கு என் கணவன் வேண்டும்.
கணவனை கண்டுபிடிக்க ஐ.நா.தான் உதவி செய்யவேண்டும். ஏனெனில் எனது கணவன் கைவிலங்கிட்டு கொண்டு சென்றதை தொலைக்காட்சியில் பார்வையிட்டதாக உறவினர்கள் தெரிவித்தார்கள்.
மேலும் தற்போதைய அரசில் நம்பிக்கையில்லை. மஹிந்த அரசு காலத்தில் பிடிபட்ட எனது கணவனுக்கு முடிவு தரவில்லை. ஆகையால் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை.
தலைவன் இல்லாது நானும் எனது பிள்ளைகளும் கஷ்டப்ப-டுவதுடன் அன்புக்காக ஏங்குகின்றோம். ஐ.நா. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.