நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் பொது எதிரணியினரால் ஹைட் பார்க் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 48 எம்.பி.க்கள் களமிறங் கியிருந்தனர்.
அத்துடன் சுதந்திரக்கட்சியின் 30 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அத்துடன் இந்த போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கான கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளி கட்சியின் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
இன்று நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக கொழும்பில் பல பகுதிகளிலும் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
இதன்போது வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்காதே , எட்காவை உடனடியாக நிறுத்து போன்ற கோஷங்களை எழுப்பிய வண்ணமும் மஹிந்த ராஜபக்ஷவின் புகழ்பாடிய வண்ணமும் ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பல்வேறு காரணங்களை முன்வைத்து மஹிந்த அணியினர் இன்று இந்த கூட்டத்தை நடத்தியிருந்தனர்.
கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ , முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமாவன்ஸ அமரசிங்க, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா , முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.