விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களை தீவிரவாத சந்தேக நபர்களாகப் பட்டியலிடும் அரசாங்கத்தின் அறிவிப்பு புலம்பெயர் நாடுகளில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தடைஅறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் ஒருவித பயம் தொற்றிக் கொண்டிருக்கிறது. இந்த தடையின் காரணமாக, அடுத்து என்ன நடக்குமோ என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், அரசாங்கம் எடுத்து வைத்துள்ள அடி அத்தகையது.
இந்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்துவதற்காக என்பதை தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகிறது. முதலாவதாக, இதற்கு முன்னர் அரசாங்கம் தனிநபர்களைத் தடைசெய்யும் ஆணை எதையும் பிறப்பித்திருக்கவில்லை.
பொதுவாக, புலிகள் இயக்கம் உள்ளிட்ட இயக்கங்ளின் மீது தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், தனிநபர்களை குறிவைத்து எந்த காய்களும் நகர்த்தப்படவில்லை. ஆனால், இம்முறை மிகத் தெளிவான முறையில், தனிநபர்கள் குறிவைத்து அடிக்கப்பட்டுள்ளார்கள்.
ஒருவரது தனிப்பட்ட தகவல்களைப் பகிரங்கப்படுத்துவது ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயலாகவே மேற்குலக நாடுகளால் பார்க்கப்படும் என்று, அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை, மேற்குலக நாடுகளைக் குறிவைத்து, இலங்கை அரசங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள போதிலும், அவற்றிடம் இருந்து எந்தக் கருத்தும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் வெளியாகவில்லை.
ஒரு வகையில் இது மேற்குலக நாடுகளால் விரும்பத்தகாத ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. மனிதஉரிமைகளை அதிகம் மதிக்கும் மேற்குலக நாடுகள், தனிநபர் ஒருவர் பற்றிய, தனிப்பட்ட தகவல்கள் இவ்வாறு பகிரங்கப்படுத்தப்படுவதை விரும்பாது என்றே தெரியவந்துள்ளது.
ஒருவர் தேடப்படுபவராக இருந்தால், அவரது பெயர், மற்றும் குறிப்பிட்ட விபரங்கள் இரசியமாகப் அரசாங்கங்களுக்கு இடையில் பகிரப்படுவது வேறு. ஆனால், இலங்கை அரசு அதை மீறி எல்லா விபரங்களையும் பகிரங்கப்படுத்தியுள்ளது.
இதனால், குறிப்பிட்ட நபரின் உறவினர்கள் கூட பாதிக்கப்படும் நிலை ஏற்படும். ஒருவரது தனிப்பட்ட தகவல்களைப் பகிரங்கப்படுத்துவது ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயலாகவே மேற்குலக நாடுகளால் பார்க்கப்படும் என்று, அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை, மேற்குலக நாடுகளைக் குறிவைத்து, இலங்கை அரசங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள போதிலும், அவற்றிடம் இருந்து எந்தக் கருத்தும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் வெளியாகவில்லை.
இந்தத் தடை அறிவிப்பை வெளியிட்டுள்ள அரசாங்கம், இதனை ஐ.நா பிரகடனத்துக்கு அமைவாக, ஏனைய நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறது. எனினும், மேற்கு நாடுகள் இதற்குச் சாதகமான வகையில், பதிலளிக்குமா என்பது சந்தேகமே.
ஏனென்றால், இலங்கை அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட ஒன்று என்பதை அந்த நாடுகள் புரிந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
அதைவிட, இந்த தடையை ஐ.நா பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா அறிமுகப்படுத்திய போது, பின்லேடன் போன்ற அல்கெய்டாவின் வலையமைப்பை உடைப்பதற்கான ஆதரவை உறுதிப்படுத்துவதே அதன் இலக்காக இருந்தது.
அல்கெய்டா மீது அப்போது தெளிவான குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளவர்கள் மீது இலங்கை அரசாங்கத்தினால் அத்தகைய தெளிவான குற்றச்சாட்டுகள் ஏதுமில்லை. அதாவது தனிப்பட்ட நபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஏதும் அரசாங்க அறிவிப்பில் கூறப்படவில்லை.
பின்லேடனை தேடிய போது, அவரே அல்கெய்டாவின் தாக்குதல்களுக்கு சூத்திரதாரி என்று நிரூபிக்க அமெரிக்காவிடம் போதிய ஆதாரங்கள் இருந்தன.
அதுமட்டுமன்றி அமெரிக்காவும் தோழமை நாடுகளும் தேடிய அல்கெய்டாவினர் தலைமறைவாகவே வாழ்ந்து வந்தவர்கள். ஆனால், இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள பட்டியலில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிப்படையாகவே இயங்கி வருபவர்கள். தலைமறைவு வாழ்க்கையை அவர்கள் நடத்தவில்லை.
தலைமறைவு வாழ்க்கை நடத்தாத- எந்தவொரு நாட்டினது சட்டம் ஒழுங்கு பிரிவினராலும் இலகுவில் அடையத்தக்கவர்களாக உள்ளவர்களை பயங்கரவாத சந்தேகநபர்களாக பட்டியலிடுவது, அவர்களைத் தலைமறைவு வாழ்வு நோக்கித் தள்ளிச் செல்லும் என்றே மேற்கு நாடுகள் கருதுவதாகத் தெரிகிறது.
அதாவது ஒரு தடையை விதித்து விட்டு ஒருவரைத் தேடுவது இருட்டுக்குள் தேடுதல் நடத்துவதற்குச் சமமானது. அதையே. தடையை விதிக்காமல் எப்போதும் அவரைக் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது தான் புத்திசாதுரியமான பாதுகாப்புத் திட்டமாக இருக்கும்.
இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ள அமைப்புகள் தனிநபர்களில் சிலர் குறித்து, மேற்குலக நாடுகள் உன்னிப்பான பார்வையை வைத்திருக்க்க் கூடும். அவர்களைத் தடை செய்து தம்மீதான சுமையை ஏற்றிக் கொள்ள அந்த நாடுகள் தயாராக இருக்கவில்லை.
ஆனால் இலங்கை அரசின் தடை அறிவிப்பினால், அவர்கள் தலைமறைவாகத் தொடங்கி விடுவார்களோ என்ற அச்சம் குறித்த நாடுகளுக்கு வரலாம். அவ்வாறு தலைமறைவானால், அவர்களின் இருப்பிடத்தைத் தேடுவதற்கும், கண்காணிப்பதற்கும் அதிகளவில் ஆளணியையும், வளங்களையும் ஒதுக்க வேண்டியிருக்கும்.
அதைவிட தலைமறைவாக அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியாமல் போய் விடும். எப்போதும் தமது கண்களுக்குள் இருப்பவர்களை, தொலைவுக்குத் தள்ளிவிடும் இலங்கை அரசாங்கத்தின் நகர்வை மேற்கு நாடுகள் வெறுப்புடனேயே பார்க்கப் போகின்றன.
அதைவிட, தடைசெய்யப்பட்டுள்ளவர்களில் பலர் முற்றிலும் ஜனநாயக ரீதியாகச் செயற்பட்டவர்கள் என்பதையும் வெளிநாடுகள் நன்கறியும்.
உதாரணத்துக்கு,
அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார் போன்றோர், எந்தவகையிலும் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் அல்ல என்பதை எல்லா நாடுகளுமே அறியும். ஏனென்றால், பல ஆண்டுளாகவே அவர் போன்றவர்களை, அவர்கள் தங்கியுள்ள நாடுகள் அவதானித்து வருகின்றன.
அப்படிப்பட்ட நிலையில், இலங்கை அரசின் தடைஅறிவிப்புக்கு அந்த நாடுகள் எந்தவகையிலும் மதிப்பளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரையில், தாம் வாழும் நாடுகளில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் நிலை அதிகம் ஏற்படாது போனாலும், இலங்கை அரசினால் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு ஒரு விதமான சிக்கல் என்றால் இடம்பெறாதவர்களுக்கு இன்னொரு விதமான சிக்கல் உள்ளது.
அரசாங்கத்தின் தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களைப் பொறுத்தவரையில் தம்மால் இலங்கைக்குத் திரும்ப முடியாதோ- வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலை வருமோ- வெளிநாட்டுப் பயணங்களின் போது விமான நிலையங்களில் சோதனைக் கெடுபிடிகளுக்குள்ளாக நேரிடுமோ- இலங்கையில் உள்ள தமது சொத்துகள் பறிமுதலாகுமோ-
இலங்கையில் உள்ள தமது உறவுகளுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ள முடியாத நிலை வருமோ- அவர்களுக்கு உதவமுடியாத நிலை ஏற்படுமோ என்றெல்லாம் பல கவலைகள் தொற்றியுள்ளன.
இதன் விளைவாக எதிர்காலத்தில் இலங்கை அரசுக்கு எதிரான – தமிழ்மக்களின் உரிமை கோரும் போராட்டங்களில் பங்கேற்கும் புலம்பெயர் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் மத்தியில் இரண்டு பிரிவினர் உள்ளனர்.
ஒருதரப்பு
கடும்போக்காளர்கள்,
இன்னொரு தரப்பு
மென்போக்கு அணுகுமுறையாளர்கள்.
அதாவது, புலிகள் இயக்கத்தின் அழிவுக்குப் பின்னர், அவர்கள் மத்தியில் பல பிரிவுகள் உருவாகின என்பது வெளிப்படை. அவற்றில் ஒரு தரப்பை, கே.பியை பயன்படுத்தி தன்பக்கம் இழுக்க முனைந்தது அரசாங்கம்.
இந்தநிலையில், கடும்போக்காளர்களாக இல்லாத – அதேவேளை இலங்கை அரசுடன் சமரசம் செய்து கொள்ள விரும்பாத தரப்பினரை, கடும் போக்காளர்கள் எப்போதுமே, கடுமையாக விமர்சித்து வந்துள்ளனர். அப்படிப்பட்டவர்கள் தடைப்பட்டிலில் இடம்பெற்றதற்காக வருந்தவில்லை.
பட்டியலில் இடம்பெறாதவர்கள் மத்தியில், தம்மை கடும்போக்கு பிரிவினர், இலங்கை அரசுடன் தொடர்பு வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப் போகின்றனரே என்ற கவலையும் எழுந்துள்ளது.
நாடுகடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் பிபிசி பேட்டி ஒன்றில், தனது பெயர் உள்ளடக்கப்பட்டதற்காக வருந்தவில்லை என்றும், அவ்வாறு சேர்க்கப்படாதிருந்தால் தான் கவலைப்பட்டிருப்பேன் என்று கூறியதன் பொருள் இதுவாகத் தான் இருக்கும்.
அதேவேளை, தடைப்பட்டியலில் இடம்பெறாதவர்களைப் பொறுத்தவரையில், தாம் எங்கேயும் போராட்டங்களில் முகம்காட்டப் போனால் சிக்கலாகி விடுமோ என்று ஒதுங்கவே முனைவர். இது ஒருவகையில் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை முடக்கிவிடும் நிலைக்குத் தள்ளினாலும் ஆச்சரியமில்லை.
ஆனால், மேற்குலக நாடுகள் புலம்பெயர் தமிழர்களின் கட்டமைப்புகள் சீர்குலைந்து போவதை விரும்புமா என்பது கேள்விக்குரிய விடயம். ஏனென்றால், பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில், தமிழ்ச் சமூகம், அந்த நாட்டு அரசியலில், தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளன.
இந்த புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வலுவிழந்து போனால், அல்லது அந்தக் கட்டமைப்புகள் சீர்குலைந்து போனால், தமிழர்களின் வாக்குகளை ஒருங்கிணைப்பது அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு கடினமானதாகும். அதைவிட, புலம்பெயர் தமிழர்களின் ஊடாக, இலங்கையில் தமிழர்களின் ஜனநாயக அரசியல் தளத்தைப் பலப்படுத்தவே மேற்கு நாடுகள் முனையும்.
அந்த இணைப்பு அறுந்து போவதையும் மேற்குலகம் விரும்பாது.ஏனென்றால், அது இலங்கையில் தமிழர்களின் அரசியலைப் பலவீனப்படுத்தும் என்று கருதவு வாய்ப்புகள் அதிகம்.
தமிழர்களுக்கு நலன்களைப் பற்றி மேற்குலகம் சிந்திக்குமா இல்லையா என்பதை விட, தமது நலன்களை அடைவதற்கு தமிழர்களைப் பயன்படுத்தவே மேற்குலகம் விரும்பும்.
எனவே, இந்த தடையின் மூலம் அந்த வழிகள் அடைக்கப்படுவதை அந்த நாடுகள் விரும்புமா என்பது சந்தேகம் தான். எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இந்த தடையின் மூலம் பலதரப்புகளை நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்பது மட்டும் உண்மை.
பல காய்களை ஒன்றாக அடிப்பதற்காக கல்லையும் வீசிவிட்டது. அந்தக் கல் குறிதவறாமல் காய்களை வீழ்த்துமா- அல்லது திரும்பிச் சென்று எறிந்தவரையே தாக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
-சுபத்திரா-