தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வரவேண்டுமென்ற முனைப்பு டன் சில காலத்துக்கு முன்புவரை செயற்பட்டவர் நடிகர் விஜய். விஜய்யை விட அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது மகனை (விஜயை) தமிழக முதல்வராக்கிவிட வேண்டுமென்று ஆசைப்பட்டார். அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட் டார்.
ஆனால், எஸ்.ஏ.சந்திரசேகரின் எண்ணத் தைப் புரிந்து கொண்ட தமிழக ஆளும் கட்சி கொடுத்த மறைமுகப் பிரச்சினைக ளால் அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டி ருந்தார். இதனால் சோர்வடைந்திருந்த விஜய் அரசியலில் ஈடுபடும் ஆசையை விட்டிருந்தார்.
ஒரு காலத்தில் விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தின் மூலம் தமிழக மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வந்தவர் விஜய். ஏழை ஜோடிகளுக்கு திருமணம், வறிய மாணவர்களின் கல்விக்கு நிதியுதவி, வைத்திய செலவுக்கு நன்கொடை என பல்வேறு உதவிகளைச் செய்து வந்தார். பிற்காலத்தில் இந்தத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டன. இதன் ஒரு கட்டமாக அதன் அரசியல்மயமாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது தற்போது ஆளும் அ.தி.மு.க.வுக்கு விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் பூரண ஆதரவு வழங்கினர்.
அ.தி.மு.க. வும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால், அந்தக் கட்சியுடன் விஜய் மற்றும் அவரது தந்தை ஆகியோருக்கு சுமுகமான உறவு இருக்கவில்லை.
இதற்குக் காரணம் விஜய்யின் தந்தை சந்திரசேகரின் பேச்சு தான். தங்களால்தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
அடுத்த தமிழக முதல்வர் விஜய்தான். அவர்தான் தமிழகத்தை ஆளப்போகிறார் எனப் பல இடங்களில் முழக்கம் செய்தார். இந்த முழக்கம் அ.தி.மு.க. தலைவியும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. அதன் எதிரொலியே விஜய்க்கு எதிரான பல பிரச்சினைகள்.
விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படம் திரையிடப்படுவதற்கு பெருந்தடை ஏற்பட்டது. இதனால் விஜய் பட்டபாடு கொஞ்ச நஞ் சமல்ல. முதல்வரின் காலில் விழாத குறையாக கெஞ்சினார்.
இறுதியில் எப்படியோ ‘துப்பாக்கி’ வெளிவந்தது. இதன் பின்னர் சிறிது காலம் அமைதியான விஜய் இடைக்கிடையே முதல்வரை புகழ்ந்து பேசியும் வந்தார். எனினும், எந்தவித முன்னேற்ற மும் இல்லை.
இந்த நிலையில் லோக்சபா (நாடாளுமன்ற) தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரசாரப் பணிகளுக்காக தமிழகம் வந்த போது பல முக்கியஸ்தர்களையும் திரைப்பட நடிகர்களையும் சந்தித்துப் பேசியிருந்தார்.
அப்போது கோயம்புத்தூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மோடியை சந்தித்து தமது ஆதரவை வழங்குவதாக விஜய் கூறினார். ரஜனிகாந்த் உள்ளிட்ட பலரையும் சென்னையில் மோடி சந்தித்தார்.
அப்போது விஜய்யையும் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மோடிக்கு ஆதரவு தர விஜய் மீண்டும் உறுதியளித்தார். அவரது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் மோடிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்று பிரதமரானார். எனவே, தொடர்ந்து பிரதமர் மோடியின் ஆதரவு தனக்கு கிடைக்குமென்ற நம்பிக்கை விஜய் மனதில் ஏற்பட்டது.
ஏற்கெனவே தமிழக அரசியல் சூழ்நிலைகள் அவருக்கு சாதகமற்றதாக காணப்பட்டதால் அரசியல் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருந்தார். அந்த காலகட்டத்தில் விஜய்க்கு எந்தவொரு தமிழக அரசியல் தலைவரும் அரசியல் கட்சியும் கைகொடுக்க முன்வரவில்லை. இவருக்கு எதிராகவே அரசியல் தலைவர்களும் கட்சிகளும் செயற்பட்டன.
ஆனால், தற்போது இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடியே விஜய்க்கு பின்புலமாக இருக்கிறார். தமிழகத் தலைவர்கள் எவரும் தேவையில்லை என்ற நிலையில் தேசிய தலைவர்களின் துணை, ஒத்துழைப்பு அனைத்தும் உள்ளது.
எனவே, எந்தவித அச்சமுமின்றி அரசியலில் ஈடுபடுவதற்கான நல்ல சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டாமா? தற்போது அவர் அதற்கான திட்டத்துடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்முறை நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பிரதான கட்சிகளில் ஒன்றான தி.மு.க. தோல்வியடைந்தது. அ.தி.மு.க. பெரும் வெற்றியடைந்தது. எனினும், தமிழகத்தில் ஒரு பலம் வாய்ந்த எதிர்க்கட்சி இல்லை.
பிரதான எதிர்க்கட்சி என்ற இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்தின் தே.மு.தி.க. தமிழக சட்டப் பேரவையில் பலத்தை படிப்படியாக இழந்து வருகிறது.
எனவே, இப்போதிருந்தே அரசியல் நடவடிக்கையை முன்னெடுத்தால் 2016 இல் நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பிரதான இடத்தையோ அல்லது ஆட்சியையோ பிடித்து விடலாம் என்று விஜய்யின் தந்தை சந்திரசேகரன் கணக்கு போட்டுள்ளார்.
அந்த வகையில் விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தை ஒரு அரசியல் கட்சியாக விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக விஜய் தரப்பினர் தமிழகத்திலுள்ள தி.மு.க., – ம.தி.மு.க., அ.தி.மு.க.,- தே.மு.தி.க, – பா.ம.க., காங்கிரஸ் போன்ற கட்சிகளிலுள்ள அதிருப்தியாளர்களுடன் பேசி வருகின்றனர்.
எனவே, விரைவில் வெளிப்படையாகவே இது தொடர்பான அறிவிப்பு வெளிவரக்கூடும். இதன் அடிப்படையிலேயே கடந்த வாரம் ‘சினிமாவை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்’ என பிரதமர் மோடியிடம் விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதாவது சினிமா சேவை வரியை குறைப்பதன் மூலம் சினிமாத்துறையை காப்பாற்றக்கூடியதாக இருக்குமென்றும் வேறு பல விடயங்கள் குறித்தும் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
இதுவும் ஒரு அரசியல் நடவடிக்கைதான்.
இவை அனைத்தும் தமிழக அரசியலை குறிவைத்தே முன்னெடுக்கப்படுகின்றன. விஜய்யின் இந்த செயற்பாடு வேறெந்த கட்சியையும்விட ஆளும் அ.தி.மு.க. வுக்கே சவாலாக அமையும். ஏனெனில் விஜய் மற்றும் அவரது தந்தை சந்திரசேகரன் ஆகியோரின் குறிக்கோள், திட்டம், செயற்பாடு அனைத்தையும் தமிழக முதல்வர் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார். அந்த வகையில் தமக்கு சவாலாக வரும் எந்தவொரு விடயத்தையும் முறியடிக்கத் தயங்கமாட்டார்.
கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு ‘தமிழகத்தின் 39 தொகுதியிலும் வெற்றி வாகை சூடுவோம்’ என்ற உறுதியுடன் செயற்பட்ட ஜெயலலிதா 37 தொகுதியில் தமது வெற்றியை உறுதிப்படுத்தியிருந்தார். அதுமட்டுமின்றி பிரதமர் பதவியைக் கைப்பற்றும் திட்டத்துடன் செயற்பட்டார். ஆனால், முழு இந்தியாவிலும் மோடி அலை வீசியதால் அவரது திட்டத்தில் ஒரு பின்னடைவு ஏற்பட்டது. எனினும், எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராகும் இலட்சியத்தை அவர் கைவிடவில்லை.
முழு தமிழகத்தையும் தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சக்திமிக்க பெண்மணியான முதல்வர் ஜெயலலிதாவின் வியூகங்களுக்கு முன்னால் விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் தாக்குப்பிடிப்பார்களா? இது இன்றைய தமிழக அரசியல் ஆய்வாளர்கள் எழுப்பும் கேள்வி.
ஏற்கெனவே, இது போன்ற இலட்சியங் களுடன் அரசியலுக்குள் பிரவேசித்தவர் நடிகர் விஜயகாந்த். ஆரம்பத்தில் அவரது அரசியலுக்கு ஆதரவு வழங்கிய தமிழக மக்கள் தற்போது பின் வாங்குகின்றனர்.
இதற்கு கடந்த லோக்சபா தேர்தல் சாட்சி. இது போன்றதொரு நிலைமை விஜய்க்கு ஏற்படுமா? எம்.ஜி.ஆர். தமிழக அரசியலில் வெற்றி வாகை சூடிய தலைவர் ஆவார். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் ஜெயலலிதா. இவருக்குப் பின்னால் பலர் முயற்சித்தும் அரசியலில் நிலையானதொரு இடத்தைப் பிடிக்கமுடியாமல் போய்விட்டது.
அந்தப்பட்டியலில் இறுதியாக வந்தவர் தான் விஜயகாந்த். அவரும் தள்ளாடிக்கொண்டிருக்கிறார். அடுத்து விஜய் தாக்குப் பிடிப்பாரா? காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.
நல்லதம்பி நெடுஞ்செழியன்