அரசியல் ரீதியாக இணையமாட்டோம் ஆனால் சந்திக்கும் போது மனிதாபிமான அடிப்படையில் கைலாகு கொடுப்போம் என்று அமைச்சரும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு கைலாகுகொடுத்தபடி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அதேவேளை, முதலமைச்சருக்கு கைலாகு கொடுப்பதால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை ஆனால் முதலமைச்சருக்கு பிரச்சினையை ஏற்படுத்திவிடாதீர்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது வழமையான பாணியில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் புதிய மாணவர் விடுதி திறப்பு விழா இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சரும் அமைச்சரும் மேடையில் கைலாகு கொடுத்தனர்.
இதனை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்தபோது இருவரும் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் அமைச்சர் டக்ளஸிற்கும் இடையில் இலங்கைக்கான ஜேர்மன் நாட்டின் தூதுவரின் துணைவியாருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்ததோடு ஜேர்மன் தூதுவர் ஜெர்கான் மொகாட்டும் இந்த நிகழ்வில் பங்கு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.